என்ன செய்தார் சைதை துரைசாமி – 232
பெருநகர சென்னையில் சாலையில் வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாமல் இருந்தன. எதற்காக வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல் திண்டு போன்றும், பெரிய சறுக்கல் போன்றும் விதவிதமாக அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைவது வாடிக்கையாக இருந்தது.
இந்த விஷயம் தெரியவந்ததுமே அத்தனை வேகத்தடைகளையும் உடனடியாக அகற்றுவதற்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார். இதனை சீர்படுத்தி மேம்படுத்துவதற்கு ஆலோசனையில் ஈடுபட்டார். ஐ.ஆர்.சி. எனப்படும் இந்திய சாலைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, பெருநகர சென்னை முழுவதும் ஒரே சீரான அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. மேலும், வேகத்தடைகள் மீது வெள்ளை நிற பெயின்ட் அடித்து இரவில் ஒளிரும் ஸ்டட்ஸ் பொருத்தப்பட்டன. இதனால் தூரத்தில் வரும்போதே வேகத்தடைகள் இருப்பதை அறிந்து வாகனவோட்டிகள் வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாக செல்லத் தொடங்கினார்கள்.
இந்த நடவடிக்கைக்கு பலரும் மேயர் சைதை துரைசாமியை பாராட்டினார்கள். மறைந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மேயர் சைதை துரைசாமிக்கு எழுதிய பாராட்டின் சிறு பகுதி இது. ‘’மேயர் சைதை துரைசாமியின் நடவடிக்கை என் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வேகத்தடையில் நானும் இருசக்கர வாகனத்தில் தடுமாறி கடந்திருக்கிறேன். ஒரு முன்னிரவில் மனைவி, குழந்தையோடு வர, மிதமான வேகத்தில் இருந்தபோதும் வேகத்தடை இடித்து வீச, மனைவி கையிலிருந்த பெண் குழந்தை எகிறி விழுந்துவிட்டது. உதட்டில் அடிபட்டு ஒரே ரத்தம். அந்த இருட்டில் ரிப்பன் கட்டிடத்தையும், அதன் ஊழியர்களையும் மனதார சபித்தேன்.
ஆனால் திடீரென ஒரு நாள் சென்னையில் எல்லா இடங்களிலும் வேகத்தடை காணாமல் போயின. அட, என்னவாயிற்று மாநகராட்சிக்கு, வியப்பு வந்தது. யாரால் இந்த நல்ல புத்தி வந்தது, இது நல்லதா… இல்லையா, நண்பர்களுக்கும் விவாதம் வந்தது. ஓரிரு மாதத்தில் மரியாதையான வேகத்தடைகள் அங்கங்கே முளைத்தன. இடித்து நிரவி புதிதாய் செய்தது சைதை துரைசாமி என்று இப்போதுதான் தெரிந்தது..’’ என்று பாராட்டியிருந்தார். செய்வதை திருந்தச் செய்வதில் மேயர் சைதை துரைசாமிக்கு நிகர் அவர்தான் என்பதற்கு இந்த வேகத்தடைகளே சாட்சி.
- நாளை பார்க்கலாம்.