சித்தர் வாக்கு
உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். இதே கேள்வியை ஆன்மிகவாதியிடம் கேட்டால் வியர்வையும், மலமும், சிறுநீரும் நிறைந்த உடம்பை மதிக்காதே, மனசுதான் முக்கியம் என்று உறுதிபடச் சொல்வார். உடல் உழைப்பினால் வாழும் சாதாரண மனிதனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், உடம்பு உரமாயிருந்தாத்தான் வேலை செய்யமுடியும், மனசைப்பத்தி எதுவுமே தெரியாது என்பான்.
இப்படி ஆளுக்கு ஒன்றாக சொல்லும்போது சரியானதை கண்டுபிடிப்பது எப்படி?
வெகுசுலபம். இயற்கை சொல்வதைக் கேட்கவேண்டும். மனிதனைத்தவிர பிற உயிர்கள் என்ன செய்கின்றன, எதைக் கொண்டாடுகின்றன என்று பார்க்கவேண்டும். விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்துமே தங்கள் உடம்பைத்தான் நேசிக்கின்றன. இந்த நியதிதான் மனிதனுக்கும் பொருத்தமானது. ஆனால் மனிதன் மட்டும் மனசுக்கு இறக்கை கட்டிவிட்டு, இயற்கையை மீறி பறக்க நினைக்கிறான். அதனால்தான் மனித வாழ்க்கை இத்தனை சிக்கலாக இருக்கிறது.
ஒரு கணவன், மனைவி, சிறுவன் கொண்ட சிறு குடும்பம் சுற்றுலாவுக்குக் கிளம்பி, யாருமற்ற வனாந்திரத்தில் காட்டிலாகாவிற்கு சொந்தமான ஒரு விடுதியில் தங்கினார்கள். பகல் முழுவதும் காட்டை சுற்றிப் பார்த்தார்கள். நிறைய மான்கள் திரிவதைப் பார்த்து சந்தோஷமாகி, மான்களுக்கு பக்கம் நின்று போட்டோ எடுத்தார்கள். திடீரென அந்த மான்கள் அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்து காதுகள் விரைத்து நிற்பதையும், அடுத்த கணம் அந்த இடத்தில் இருந்து காற்றைப்போல் விரைந்து ஓடுவதையும் பார்த்தார்கள்.
நடப்பது என்னவென்று அவர்கள் யோசிக்கும் முன்பே இரண்டு புலிகள் இருட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன. அடுத்த நொடி கணவன், மனைவி, சிறுவன் என மூவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பறந்தார்கள். அவர்கள் அலறலைக் காட்டிலாகா அதிகாரிகள் துப்பாக்கியுடன் விரைந்துவந்தார்கள். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் புலிகள் ஓடிப் போயின. ஆனால், அந்த புலிகள் நடத்திய வெறியாட்டத்தில் கணவனும், சிறுவனும் மரணம் அடைந்திருக்க மனைவி மட்டும் மிரண்டு நின்றாள்.
கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருந்த மனைவியை சமாதானப்படுத்தினார்கள். ஒரு கணத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்துவிட்ட விபரீதத்தை நினைத்து கலங்கிவிட்டாள். அதைவிட கணவன் மற்றும் மகன் ஆபத்தில் இருந்தபோது, அவர்களை காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பிய சுயநலத்தை எண்ணியெண்ணி வருத்தப்பட்டு அழுதாள்.
கணவன், குழந்தைக்கு நிகழ்ந்துவிட்ட கொடுமைக்காக அந்தப் பெண் வருத்தப்படலாமே தவிர, அவள் தப்பித்த செயலுக்காக வருத்தப்படத் தேவையில்லை. ஏனென்றால் அதுதான் இயற்கை. அவளுடைய இடத்தில் கணவன் இருந்தாலும், அப்படித்தான் செய்திருப்பான். மிருகங்களைப் போலவே, எந்த ஒரு உடலும் உயிரும் முதலில் தன்னை காப்பாற்றிக்கொள்ளவே முயற்சி எடுக்கும். அதன் பிறகுதான் பிறரைக் காப்பாற்றும்.
? இந்தக் கதையின் மூலம் சொல்ல வருவது என்ன?
இந்த உடம்பின் முக்கியமான நோக்கம் தன்னை காப்பாற்றிக் கொள்வதுதான். வாழும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்காக போராடுகிறது உடல். அதனால் உடலை கும்பிடு. இந்த உடம்பு அழிந்துவிடும் என்ற கருத்து உண்மையல்ல. இந்த உலகில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. அதனால் வாழும் வரையிலும் இந்த உடம்பை கும்பிடும் அளவுக்கு புனிதமாக போற்றி பாதுகாப்பது மனிதனின் கடமை.
? ஆனால் உடலைவிட மனசுதானே சுத்தமானது?
உடல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் மனதால் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். கடும் பசி இருக்கும்போது எந்த சிந்தனையும் யாருக்கும் தோன்றாது. இதுபுரியாமல்தான் பலரும் மனசு சுத்தமா இருந்தா போதும், உடம்பு பற்றிய கவலை வேண்டாம் என்று முட்டாள்தனமாக பிதற்றுகிறார்கள். இந்த உலகில் எந்த மனசுமே சுத்தமாக இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. நடிகையை கனவில் கண்டு கற்பிழக்காத ஆணும், அடுத்தவீட்டுக்காரியின் புடவை, நகையைப் பார்த்து வயிற்றெரிச்சல் படாத பெண்ணும் இருக்கவே முடியாது. இப்படிப்பட்ட கேவலமான மனசை சுத்தமானது என்று சொல்வது மூடத்தனம்.
? ஆனால் நம் முன்னோர்கள் மனசுதானே முக்கியம் என்றார்கள்?
முன்னோர்களை சரியாகப் படிக்காதவன் அப்படித்தான் சொல்வான். சாதாரண மானுடன் போலத்தான் திருமூலரும் இருந்திருக்கிறார்.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே – என்று பாடியிருக்கிறார். அதாவது இந்த உடல் நரை, திரை, பிணி, மூப்புக்கு உட்பட்டது என்று கேவலமாக எண்ணியிருந்தேன். ஆனால் நந்தீஸ்வரர் அருளினால், இந்த உடம்புக்குள் சிவபெருமான் இருப்பதை அறிந்துகொண்ட பிறகுதான் இதனை கோயில் என்று உணர்ந்தேன் என்கிறார். அதோடு நில்லாமல் உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், சீவன் சிவலிங்கம் என்றும் சொல்கிறார் திருமூலர். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று ஓங்கி குரல் கொடுக்கிறார் சிவவாக்கியர்.
அதனால் மனிதன் எந்தக் கோயிலுக்கும் போய் இறைவனை தேட வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் கொடுத்த இந்த உடம்பைக் கும்பிட்டால் போதும், அது இறைவனுக்கான வணக்கம். ஆரோக்கியமான உடல் படைத்தவனிடம் இருந்துதான் ஆரோக்கியமான சிந்தனை வரும். அதனால் கடவுளை மற, உடம்பை நினை.
- ஜோதீஸ்வர்