இந்தியாவின் கிரிக்கெட் பெருஞ்சுவர்
2024 கிரிக்கெட் டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய அணியினர், அதனை கொண்டுவந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையில் ஒப்படைத்தனர். உலகக் கோப்பையைப் பெறுவதற்கு பக்கபலமாக இருந்த கிரிக்கெட் பெருஞ்சுவர் அவர், என்பதாலே அந்த மதிப்பையும் மரியாதையும் வீரர்கள் கொடுத்தார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடை பெறுகிறார் என்றாலும், பேட்டிங் ஜாம்பவான் டிராவிட்டின் சாதனைகள் என்றென்றும் அசைக்க முடியாதவை.
பேட்ஸ்மேன்களுக்கு ஒருசில பவுலர்களைக் கண்டாலே பயம் வரும். எந்த ஒரு பவுலரைக் கண்டும் கொஞ்சமும் அச்சமில்லாத ஒரு நபர் என்றால், அவர் ராகுல் டிராவிட் மட்டுமே. ஏனென்றால் அவரது பேட்டிங் ஸ்டைலே தனி.
150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஒரு பவுலர் என்றாலும், எந்த பெரிய ஃபுட் ஒர்க் இல்லாமலும், நின்ற இடத்திலேயே அந்த பந்தை தடுத்து நிறுத்திவிடுவார் ராகுல் டிராவிட். சுற்றியிருக்கும் ஃபீல்டர்களும் நகரவேண்டியதில்லை, பேட்ஸ்மேனும் நகரவேண்டியதில்லை, விக்கெட் கீப்பரும் நகரவேண்டியதில்லை, 150 கிமீ வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் வீசிவிட்டு, பவுலர் ஒருவர் மட்டும் வேகவேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்படி ஓடியோடி கடுப்பாகி லேசாக லூஸ் பால் போட்டால் போதும், அற்புதமாக அதனை நான்கு ரன்களாக மாற்றிவிடுவார். இப்படி அத்தனை பவுலர்களையும் தடுத்து நிறுத்தும் திறனுடன் ராகுல் டிராவிட் இருந்த காரணத்தாலே, அவரை சுவர் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கும். அதாவது சச்சின் களத்தில் நிற்கும் வரை இந்தியாவுக்கு நிச்சயம் என்று உறுதியாக நம்பினார்கள். டோனி களத்தில் இறங்கிவிட்டால் சிக்ஸர் நிச்சயம் பறக்கும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ராகுல் டிராவிட் களத்தில் இறங்கிவிட்டால், ‘இனிமே இந்தியா தோற்பதற்கு வாய்ப்பு இல்லை, வாங்க போய் டீ சாப்பிட்டு வரலாம்…’ என்று கிளம்பும் அளவுக்கு நம்பிக்கை தரும் பேட்ஸ்மேன்.
அதனால்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்திருக்கும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31,258 பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் மட்டும் தான். அதாவது கிட்டத்தட்ட 5210 ஓவர்களை அவர் ஒருவர் மட்டும் எதிர்கொண்டுள்ளார். அவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளுக்கு அருகில் கூட வரவில்லை.
ராகுல் டிராவிட்டுக்கு அடுத்த இடத்தில் தான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (29437 பந்துகள்) வருகிறார். இவர்களை அடுத்து ஜாக் காலிஸ் (28903 பந்துகள்), ஷிவ்நாராயண் சந்தர்பால் (27395 பந்துகள்), ஆலன் பார்டர் (27002 பந்துகள்) போன்ற வீரர்கள் உள்ளனர். இந்த சாதனையை இந்த உலகில் இனி எந்த வீரராலும் படைக்கவே முடியாது. ஏனென்றால், இப்போது டெஸ்ட் போட்டிகளின் காலம் இல்லை. முன்பு போன்று அதிக போட்டிகள் நடப்பதில்லை. ஆகவே, டிராவிட்டின் சாதனையை இனி எந்தக் காலத்திலும் யாராலும் முறியடிக்க முடியாது என்பதே உண்மை.
பேட்டிங் செய்வதை தியானம் செய்வது போல் விளையாடிய ராகுல் டிராவிட்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நேரம் பேட்டிங் செய்த வீரராகவும் இருக்கிறார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நிமிடங்கள் களத்தில் செலவழித்ததற்கான உலக சாதனையை டிராவிட் தன்வசம் வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. டிராவிட் மொத்தமாக 44,152 நிமிடங்கள் களத்தில் பேட்டிங் செய்தார். இது சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம்.
ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக மாறுவதற்கு முன்பாக சிறந்த ஸ்லிப் ஃபீல்டராக உலக கிரிக்கெட்டில் முத்திரை பதித்தவர். உலகத்தின் சிறந்த ஸ்லிப் ஃபீல்டராக இருந்த அவர், பல அசாதாரணமான கேட்ச்களை அள்ளி பக்கெட்டில் போட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த ஒரே வீரராக 210 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார் டிராவிட். அவருக்கு அடுத்த இடத்தில் 205 கேட்சுகளுடன் மஹிலா ஜெயவர்த்தனேவும், 200 கேட்சுகளுடன் ஜாக் காலிஸ்ஸும் உள்ளனர்.
டிராவிட் எளிதில் அவுட்டாக மாட்டார் என்பது எத்தனை தூரம் உண்மையோ, அதே போல் எதிர் முனையில் இருக்கும் வீரரையும் அத்தனை எளிதில் அவுட்டாக விடவும் மாட்டார். எப்படி நிலைத்து நின்று ஆடவேண்டும் என்று எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கும் சொல்லிக்கொடுத்து விக்கெட் இழக்காமல் தாக்குப்பிடிக்க வைப்பார்.
நீண்ட பேட்டிங் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் கலையிலும் டிராவிட் தேர்ச்சி பெற்றவர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 100 பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி தனித்துவமான உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
டிராவிட் மிக நீண்ட வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை உருவாக்கிய 88 பார்ட்னர்ஷிப்களை பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 80 பார்ட்னர்ஷிப்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார்.
உலக கிரிக்கெட்டில் அதிகமுறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியவர் என்ற இமாலய சாதனையை டிராவிட் வைத்துள்ளார். 6 முறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை வைத்திருக்கும் அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில்தான் டான் பிராட்மேன் மற்றும் கிரீம் ஸ்மித் முதலிய ஜாம்பவான் வீரர்கள் 5 முறை பதிவுசெய்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் இணைந்து 1999 உலகக் கோப்பை போட்டியின் போது, இலங்கைக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்தபோது டிராவிட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஒரு நாள் போட்டிகளில் முதல்முறையாக பதிவுசெய்யப்பட்ட முச்சதமாகும்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து ஃபார்மேட்டிலும் டக் அவுட் ஆகாமல் அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே. 2000 – 2004 காலகட்டங்களில் 173 போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட் ஆகாமல் இந்த சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் 136 இன்னிங்ஸ்களுடன் சச்சின் டெண்டுலரும், 135 இன்னிங்ஸ்களுடன் அலெக் ஸ்டீவர்ட்டும் இருக்கின்றனர்.
‘கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மனுடன் இணைந்து டிராவிட் ஆடிய இன்னிங்ஸ் மிக சிறப்பான இன்னிங்க்ஸ். இங்கிலாந்தில், 2011ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அனைத்து இந்திய வீரர்களும் தடுமாறி கொண்டிருந்த போது டிராவிட் மூன்று சதங்கள் எடுத்தது மறக்கமுடியாத சாதனை.
1999 உலக கோப்பையில் அதிக அளவு ரன்கள் குவித்தவர் என்று பெருமை ராகுல் டிராவிட் வசம் உள்ளது. ஆரம்ப நாட்களில் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்படவில்லை. அவரால் ரன்ரேட் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்றும், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவரால் சோபிக்க முடியும் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர்.
ஆனால், நாளடைவில் இத்தகைய கருத்துகளை பொய்யாக்கிய ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 10,000 அதிகமான ரன்கள் குவித்ததும், ஐபிஎல் டி20 தொடர்களில் முக்கிய பங்காற்றியதும் அளப்பரிய சாதனைகளாகும்.
ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு 1996ம் ஆண்டு லார்ட்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை அவர் விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்களின் எடுத்து 13,288 ரன்கள் எடுத்துள்ளார்.
அதே ஆண்டு சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் என மொத்தம் 10,889 ரன்களை குவித்துள்ளார். டிராவிட் கடந்த 2012ம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
டிராவிட் இப்போது களத்தில் இல்லை என்றாலும் அவரது மகன் சமித் டிராவிட் கர்நாடக அணிக்காக விளையாடி நம்பிக்கை அளித்துவருகிறார். 18 வயதாகும் சமித் டிராவிட், ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். தனது தந்தையை போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சமித் டிராவிட், வேகப்பந்து வீச்சிலும் அசத்துகிறார்.
டிராவிட்டுக்கு சல்யூட்.