இஷ்டப்பட்டு கஷ்டப்படாதீங்க
’காலையில் இருந்து ராத்திரி வரைக்கும் பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிறார்… எவ்வளவு வேலை பார்த்தாலும் அதுக்கு முடிவே இல்லையான்னு அச்சப்படுறார்.. இந்த பிரச்னையை சமாளிக்க தீர்வு கேட்டு வந்திருக்கிறார்’ என்று ஒரு நடுத்தர வயது ஆசாமியை அறிமுகப்படுத்தினார் மகேந்திரன்.
அவரை நிமிர்ந்து பார்த்தார் ஞானகுரு. ஏழெட்டு பிராஞ்சுகள் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்துவருவதாகச் சொன்னவர், ‘திடீரென வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வெடித்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. எங்காவது செல்வதற்கு கால தாமதம் ஏற்பட்டால், யாரேனும் போனில் கூடுதலாக கொஞ்சநேரம் பேசிவிட்டால், வீட்டில் மனைவி உணவு பரிமாற தாமதமானால்… வேலை கெட்டுவிடும் என்ற பதட்டம் வந்துவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஒரு நிமிஷம் ஓய்வு எடுத்தாலே எனக்கு குற்றவுணர்வு ஏற்பட்டுவிடுகிறது. என்னால் இந்த வேலையை விடவும் முடியாது’ என்று சொல்லி முடித்தார்.
’’இப்படித்தான் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கப்போகிறாயா..? காலை முதல் இரவு வரை பரபரவேன வேலை செய்துகொண்டே இருந்தால், உனது அத்தனை வேலைகளும் தீர்ந்துவிடுமா? கேள்வி கேட்டார் ஞானகுரு.
பதில் சொல்ல முடியாமல் தவித்தார் மேலாளர். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசத் தொடங்கினார் ஞானகுரு.
‘’வேலை செய்யத் தெரிவது போலவே, அவ்வப்போது அந்த வேலைகளில் இருந்து விலகி கொஞ்சநேரம் சும்மா இருக்கவும் தெரியவேண்டும்’’ என்றதும் அதிர்ந்தார் மேலாளர்.
‘’சும்மா இருக்க வேண்டுமா..?’’
‘’ம்… அப்படி சும்மா இருக்கும் நேரம்தான், உன்னுடைய வேலை பார்க்கும் சக்தியை அதிகரிக்கும். சும்மா இருப்பது என்றால் எப்படி தெரியுமா..?
நிறைய நிறைய வேலைகள் இருப்பது தெரிந்தால்… அடுத்து எந்த வேலையை செய்வது என்று தடுமாற்றம் ஏற்பட்டால் கொஞ்ச நேரம் சும்ம இரு.
அப்படி சும்மா இருக்கும் நேரத்தில், அடுத்து செய்வதற்கு என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்று மனதில் பட்டியல் போடு. இந்த வேலைகளில் எவற்றை எல்லாம் உடனடியாக செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் தள்ளி வைக்கலாம், எவற்றை எல்லாம் பிறரிடம் ஒப்படைக்கலாம் என்று சிந்தித்துப் பார்.
இதனை நீ ஒரு வேலையை பரபரப்பாக செய்துகொண்டிருக்கும்போது செய்யவே முடியாது. அதாவது வீட்டுக்கு என்ன நிறத்தில் பெயிண்ட் அடிக்கலாம் என்று வீட்டுக்குள்ளே இருந்து யோசிப்பதற்கும், அதன் வெளியே நின்று பார்வையிட்டு முடிவு செய்வதற்குமான வித்தியாசம்தான் இது. எனவே, செய்யும் அத்தனை வேலைகளில் இருந்தும் விலகி நின்றுதான் சும்மா இருக்கும் நேரத்தை உருவாக்க வேண்டும். இந்த நேரத்தில் உன்னுடைய செல்போனை அணைத்துவிடு. கம்ப்யூட்டரையும் மூடி வை. அறைக்குள் யாரையும் அனுமதிக்காதே.
சும்மா இருக்கும் நேரத்துக்காக நீ குறைந்தது 10 நிமிடங்களாவது ஒதுக்கத்தான் வேண்டும். அந்த நேரத்தில் எதுவும் சிக்கலாக நடந்துவிடாது என்ற உறுதியை உனக்கு நீயே சொல்லிக்கொள்.
இந்த சும்மா இருக்கும் நேரத்தில்தான், இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை இப்படித்தான் செய்ய வேண்டுமா அல்லது வேறு ஒரு வகையில் மாற்றிச் செய்யலாமா என்று யோசிக்கவும் முடியும். இப்படி யோசித்து செய்யப்பட்ட மாற்றங்கள்தான், பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நேரத்தில் என்ன முடிவு உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அதனை அப்படியே நிறைவேற்று. சும்மா இருந்த கொஞ்ச நேரத்திற்குப் பின்பு, கூடுதல் உற்சாகத்துடனும் அதிக சுறுசுறுப்புடனும் நீ இயங்கமுடியும்.
அதேநேரம் சும்மா இருப்பது என்பதன் அர்த்தம் ஓய்வு எடுப்பது அல்ல. சாப்பிடும் நேரத்தில், வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் சிந்திப்பது எந்த வகையிலும் உனக்கு பலன் கொடுக்காது.
சும்மா இருப்பது என்பதன் அர்த்தம், உன்னை நீயே ஆய்வு செய்வதற்கான நேரம். எனவே, கண்களை திறந்துகொண்டோ அல்லது கண்களை மூடிக்கொண்டே சிந்தனை செய். உனக்கு தெளிவான பதிலும் கிடைக்கும். மனதுக்கும் உடலுக்கும் உற்சாகமும் உண்டாகும்’’ என்று முடித்தார்.
மேலாளர் முகத்தில் புன்னகை மலர்ந்தது.