ஞானகுரு பதில்கள்
கேள்வி : அறிவுரைகள் தற்போது ஏற்கப்படுவதில்லை போல் தோன்றுகிறதே..?
- பி.மணிவண்ணன், சூலக்கரை.
ஞானகுரு :
காலங்காலமாக அறிவுரைகள் சொல்லப்பட்டுத்தான் வருகின்றன. ஆத்திச்சூடி திருக்குறள், நீதி நூல்கள் என்று அறிவுரைகளுக்கு ஒருபோதும் பஞ்சமே இல்லை. பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற நூல்களும் அதற்காக உருவாக்கப்பட்டவையே. உண்மையில் மனிதர்களுக்குத் தேவை ஆலோசனைகளே தவிர, அறிவுரைகள் அல்ல. ஏனென்றால், ஒவ்வொரு நபருடைய பிரச்னைகளும் சிக்கல்களும் வெவ்வேறானவை. எப்படியாயினும் கேட்காத நேரத்தில் யாருக்கும் ஆலோசனையும் அறிவுரையும் கொடுக்காதீர்கள். அது, உறவைக் கெடுத்துவிடும்.
கேள்வி : பெண்கள் எளிதில் அழுதுவிடுகிறார்களே, ஏன்..?
- சி.சரவணன், மணிநகரம்.
ஞானகுரு :
பெண்கள் எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் அப்படியெல்லாம் கலங்கிவிடுவதில்லை. பெரும்பாலும் மனதுக்கு நெருக்கமான நபர்களிடம்தான் அப்படி நடந்துகொள்கிறார்கள். அதேநேரம், புரோலாக்டின் என்ற ஹார்மோன் ஆண்களைவிட பெண்களுக்கு 60 சதவிகிதம் அதிகமாகவே சுரப்பதும் ஓர் அறிவியல் காரணம். அதனால்தான், சட்டென்று கண்ணீர் சிந்தி எதிராளியை அதிரவைக்க முடிகிறது. ஒரு சில பெண்கள், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் ஆயுதமாக இந்த கண்ணீரை பயன்படுத்துவது உண்டு. இதற்கு இணையான வேறு ஓர் ஆயுதம் இந்த உலகில் இல்லை. அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள்.