ஞானகுரு வாக்கு
ஞானகுருவை சந்திக்க வந்த பெண் நிதானமாக பேச்சைத் தொடங்கினாள். ‘’சாமி நான் முந்தி கோயிலுக்குப் போனாலே சாமியாடத் தொடங்கிடுவேன். அத்தனை சுத்தமா இருந்தேன். இப்போ கோயிலுக்குப் போறதே இல்லை. எப்பவாச்சும் போனாலும் சாமி வர்றது இல்லை. இந்த உடம்பு அசிங்கமாயிடுச்சு சாமி?’’ என்று அழுதாள்
‘‘கடவுள் உன் உடம்புக்குள் நுழைந்து ஆடவைத்தார் என்று நிஜமாகவே நம்புகிறாயா? என்று கேட்டார்.
அழுதபடி ஆமென்று தலையசைத்தாள்.
‘‘உன் உடலுக்குள் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடவுள் இருக்கிறார். செடி, விலங்கு, பறவை, பாறை என எல்லாமே கடவுள்தான். ஆனால் கடவுள் ஆடமாட்டார்… ஆட்டுவிக்கவும் மாட்டார்’’ என்றார்.
‘‘அப்படின்னா நான் ஆடுனது பொய்யா, அந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலையே…’’ என்றாள்.
‘‘நீ இந்து மதத்தை சேர்ந்தவள் என்பதால் சாமியாடியதாகச் சொல்கிறாய்… இதைத்தான் மற்ற மதத்தவர்கள் பேய் பிடித்துவிட்டது என்கிறார்கள். ஆனால் இரண்டும் உண்மையல்ல. தன்னை மறந்த நிலையிலும் சாமியாடும் பெண்கள் ரொம்பவே உஷாராகவே இருப்பார்கள். ஒருபோதும் சாமியாடும் பெண்கள் முந்தானை விலக அனுமதிப்பது இல்லை. கைக்குழந்தையுடன் சாமி ஆடுபவர்கள், அதனைக் கீழே போடுவது இல்லை. இவ்வளவு ஏன்… சாமியாடும்போது எதிரே ஒரு தூண் இருந்தால், பர்த்துப் பக்குவமாக விலகிப் போய்விடுவார்கள்’’ என்று சிரித்தார்.
‘‘ஆனா, என்னைப் பார்த்து சிலர் சாமின்னு கையெடுத்துக் குடும்பிடுவாங்களே…’’
‘‘அந்த போலி மரியாதைக்கு பலர் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அவர்களே சாமி ஆடுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் நிறைய பிரச்னைகள், குழப்பங்களுடன் வாழ்கிறார்கள். தங்களை யாரும் அங்கீகரிக்கவே இல்லை, மதிக்கவே இல்லை என்று மனதுக்குள் வருத்தப்படுகிறார்கள். அந்த வருத்தத்தை தங்கள் மனதுக்குள் பூட்டி வைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஏதாவது ஒரு வகையில் அவர்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும்போது, கடவுளே தங்கள் உடலுக்குள் வருவதாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அதற்கு ஆசைப்படுகிறார்கள். கொட்டுச் சத்தம் அல்லது குலவை சத்தம் கேட்டால் சாமி வந்துவிடும் என்று நம்புகிறார்கள். அதன்படி சாமி ஆடத் தொடங்கிவிடுகிறார்கள். உண்மையில் அது ஒரு ஆபத்திலாத மனநல பிரச்னை. நீ இப்பொழுது சாமியாடுவதற்கு தகுதியாக உன் உடலை நினைக்கவில்லை. அதனால் சாமியாடுவது இல்லை. அதுதான் நிஜம்’’ என்றார்.
அந்த பெண் அமைதியாக இருந்தாள்.
‘‘பெண்ணே… இந்தக் கணத்தில் இருந்து உன் உடலிலும் மனதிலும் படிந்திருக்கும் அசுத்தங்களை வெளியே வீசிவிடு. மீண்டும் புதிதாய் பிற. உன் குழந்தைகளுக்கு உன்னையே உதாரணம் காட்டுவது போல் வாழு. கஷ்டப்பட்டு முன்னேறு. அதுவே இறைவனுக்குப் பிடிக்கும்…’’ என்று அவள் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தார் ஞானகுரு.