பூவைப் போன்று விலகுங்கள்

Image

ஆசிரியர் பக்கம்

வாழ்க்கை பயணத்தில் எந்த ஒரு உறவும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் மட்டுமே நெருக்கமானது என்கிறது ஓர் ஆய்வு. அதற்கு மேல் நீடித்தால் அதனை வரம் என்றே சொல்லலாம்.

பெற்றோர், பிள்ளை உறவும் 25 ஆண்டுகளே நெருக்கமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி நண்பர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நெருக்கம் காட்டுவதில்லை. வேலை பார்க்கும் இடம், பக்கத்து வீட்டு நட்பு 10 ஆண்டுகள் நீடிப்பதே கடினம். இதில் கணவன், மனைவி உறவு மட்டுமே 25 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது.

காதல், நட்பு, உறவு போன்ற பந்தங்களில் கருத்துவேறுபாடு ஏற்படுவது சகஜம். காரணம் சொல்லாமல் சிலர் பிரிவதுண்டு. சிலர் பிரிவதற்காக பொய் கூறுவதுண்டு. இதுபோன்ற தருணங்களில் மனம் வேதனைப்படலாம், இத்தனை காலமாகியும் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தம் வரலாம்.

அதற்காக அவர் செய்யும் அதே தவறை நீங்களும் செய்யாதீர்கள். அதாவது, அவர்களை சண்டை போட்டு காயப்படுத்தாதீர்கள். விலகிச் செல்பவரை பிடித்து வைக்க நினைக்காதீர்கள். புகார்களுக்கு எந்த விளக்கமும் கொடுக்காதீர்கள். ஏனென்றால், உண்மையான அன்பு இருக்கும் நபர்களுக்கு விளக்கம் தேவைப்படாது. அன்பு இல்லாதவர்களிடம் விளக்கம் கொடுத்தாலும் எடுபடாது.

மலர்ந்த பூ செடிக்கு வலிக்காமல் காம்பில் இருந்து விழுவதைப் போன்று அமைதியாக விலகுங்கள். எல்லா உறவும் ஒரு நாள் பிரியவே செய்யும் என்பதை புரிந்துகொண்டு தள்ளி நில்லுங்கள். எந்த காரணத்துக்காகவும் அவர்களை வெறுக்க வேண்டாம். அன்புடன் வழியனுப்பி வையுங்கள். அந்த உறவு மீண்டும் திரும்பிவரலாம். வராமலும் போகலாம்.

எல்லா உறவுகளையும் பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால், அதுவே மகிழ்ச்சி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு ரிலேசன்ஷிப் கவுன்சிலிங்

Leave a Comment