ஈஸி டிப்ஸ்
நம் உடலில் அதிகம் புறக்கணிக்கப்படுகிற பகுதி பாதம்தான். கால்களை சரியாகக் கழுவாமை, முறையாக பராமரிக்காமை, சரியான காலணிகள் அணியாமை என பல்வேறு காரணங்களால் கால்களும், பாதங்களும் அசிங்கமாக காட்சியளிப்பதுண்டு.
தினமும் குளிக்கும் போது முகத்திற்கு மட்டும் சோப்பு, ஷாம்பு என போடுபவர்கள் கூட, கால்களுக்கு ஒரு நிமிடம்கூட செலவழிப்பதில்லை. அதனால் தினம் குளிக்கும் போது பியூமிங் கல் கொண்டு பாதங்களின் சொரசொரப்பான பாகங்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து கால்களை அதில் சிறிது நேரம் மூழ்க வைத்து எடுப்பதை தினமும் செய்யலாம். அதேபோன்று குளித்தவுடன் சில துளிகள் கடுகெண்ணெய் எடுத்து கால்களில் நன்றாக மசாஜ் செய்வதும் நல்லது.
கால்களில் வியர்வை:
சிலருக்கு கால்களில் மட்டும் வியர்வை வருவது உண்டு. அதைத் தடுக்க வேண்டுமாயின், படிகாரத்தூள் 6 டேபிள் ஸ்பூன், போரக்ஸ் பொடி 4 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை இரண்டரை கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் போட்டு ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதைப் பாதங்களில் தடவிக் கொண்டால் வியர்வை கட்டுப்படுத்தவும்.
வறட்சி:
சரியாக பராமரிக்கப்படாத பாதம் சொரசொரப்பாக, தடித்தாற் போன்று காணப்படும். இப்படிப்பட்டவர்கள் முதலில் கால்களுக்கு வெந்நீர் ஒத்தடம் தரவேண்டியது அவசியம். இரவு படுக்கும் முன்னர் பெட்ரோலியம் ஜெல்லியை அணிந்து கொள்ளவும். கால்களுக்குத் தனியாக பயிற்சிகள் செய்யும் போது, இரத்தஓட்டம் அதிகரித்து பொலிவு கூடும்.
பித்தவெடிப்பு:
பலருக்கு முகச் சுளிப்பை உண்டாக்குவது பித்தவெடிப்பு ஆகும். பித்தவெடிப்பு வந்தால் அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிடுவது நல்லது. அப்போதுதான் மேற்கொண்டு பரவாமல் இருக்கும். ஒரு பெரிய வெங்காயத்தை சுட்டு விழுதாக அரைத்து, பாதங்களில் வெடிப்புள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் தெரியும். வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.
பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.
- பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
- கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.
- பாதங்களின் ஈரப்பதத்தை நீட்டிக்க, இரவு மற்றும் பகல் முழுவதும் பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து, தினமும் ஒரு முறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பெரிய வாளியில் சுடு தண்ணீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள். அதில், உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இட்டு, 20 நிமிடங்கள் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், உரைக்கல் அல்லது பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும்.
- வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.
- விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.
- இரவு நேரத்தில் முங்க செல்லும் முன் காரல நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது. தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்
- ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.
- பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.
- பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.
பெடிக்யூர்:
கால்களை அழகாக்க பியூட்டி பார்லர் போய்தான் ஆகவேண்டும் என்பதில்லை, அதற்காக தேவைப்படும் உபகரணங்கள் அடங்கிய பெடிக்யூர் கிட் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கால் நகங்களில் உள்ள பழைய நெயில் பாலிஷை, ரிமூவர் கொண்டு துடைத்தெடுங்கள். கொஞ்சம் லிக்விட் சோப் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களைக் கொஞ்ச நேரம் ஊற வைக்கவும். பதினைந்து நிமிடங்கள் கடந்தபின்னர், நெயில் பிரஷால், நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தவும். பியூமிங் ஸ்டோன் மூலம் பாதங்களையும், கால்களின் தடிமனான பகுதிகளையும் தேய்த்து விடவும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் அகலும். மென்மையான டவலால் பாதங்களை துடைத்து எடுக்கவும். பின்னர் நகங்களை சீராக வெட்டி, எமரி போர்டால் நகங்களை சரி செய்யவும். கொஞ்சம் கியூட்டிகிள் கிரீம் கொண்டு, நகங்களின் மேல் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் ஸ்டிக் மூலம் நகங்களின் மீது ஏதாவது அழுக்கு இருந்தால், அதனை அகற்றிவிடவும். அதற்குப் பிறகு நரீஷிங் க்ரீம் கொண்டு பாதத்தை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை நன்றாக துடைத்து காய வைத்து, தேவையான கலரில் பாலிஷ் போட்டுக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது பாதங்களை பிரத்யேகமாக கவனித்துக் கொண்டால், பிறரது பார்வை எல்லாம் உங்கள் பாதங்களின் மீதுதான் இருக்கும்.