• Home
  • மனம்
  • பழிக்குப் பழி வாங்கலாமா விஜய்…?

பழிக்குப் பழி வாங்கலாமா விஜய்…?

Image

ஒளவை சொல் மந்திரம்.

அப்பாவைக் கொலை செய்த வில்லனை பிள்ளை வளர்ந்து பெரியவனாகி வெட்டிப் போடுவது, காதலி அல்லது மனைவியை கற்பழித்தவனை கொடூரமாக கொலை செய்வது, குடும்ப சொத்தை ஏமாற்றியவனை குடும்பத்தோடு தீர்த்துக்கட்டுவது என நிறைய நிறைய சினிமாக்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன.

சமீபத்தில் விஜய் நடித்த, ‘தி கோட்’, ‘பீஸ்ட்’ போன்ற படங்களின் கதை பழி வாங்கும் படலம் தான். தன் மனைவி, பிள்ளையின் மரணத்துக்குக் காரணமான விஜய்யின் பிள்ளையைக் கடத்திக் கொண்டுபோய் ஒரு கெட்டவனாக வளர்ப்பார் வில்லன் மோகன். அப்பா விஜய்யை பழி வாங்குவதற்காக தன்னுடைய காதலியை கொலை செய்யும் அளவுக்கு மகன் விஜய்யின் உணர்வுகள் மரத்துப் போயிருக்கும். பழி வாங்கும் உணர்ச்சிக்கு வில்லனும் தன் வாழ்வை முழுமையாக இழந்திருப்பார்.

அதேபோன்று, ‘பீஸ்ட்’ படத்தில் தன் தந்தை, சித்தப்பாவை எல்லாம் ரத்தம் சொட்டச் சொட்ட பழி வாங்குவார். ரத்தம் சிந்தும் காட்சிகளை வலிந்து திணிப்பதும், பழி வாங்கும் உணர்வை ரசிகர்களிடம் தூண்டுவதும் மோசமான வழி காட்டுதல்கள்.

அதேநேரம், ‘அசுரன்’ படத்தில் தனுஷ் தன் மகனிடம், ’பழி வாங்கும் உணர்வுகளுக்கு ஆளாகிவிடக் கூடாது, படிப்பு தான் முக்கியம்’ என்று பாடம் கற்றுக் கொடுப்பார். பழி வாங்குவதை முழு நீளமாகக் காட்டிவிட்டு, அதன் பிறகு பாடம் போதிப்பது சரியில்லை என்றாலும், விஜய் படங்களில் அந்த எளிய படிப்பினை கூட இருப்பதில்லை.

பொதுவாகவே பழி வாங்கும் உணர்வு தானாக வருவதில்லை. யாரேனும் தூண்டுவதாலே அந்த உணர்வு உண்டாகிறது, அதிகரிக்கிறது. பழி வாங்கும் சிந்தனையில் மூழ்கியவர்கள் கண்களுக்கு வேறு நல்ல வழிகள் எதுவும் கண்ணுக்குத் தென்படாது. இதற்கு உதாரணமாக நெல்லையில் நடக்கும் தொடர் கொலைகளை சொல்லலாம். பழிக்குப்பழியாக நடக்கும் ஏழாவது கொலை, எட்டாவது கொலை என்று பல ஊர்களில், கிராமங்களில் நடந்துகொண்டே இருக்கிறது.

வார்த்தைக் கொலை

உயிர்க் கொலை போலவே வார்த்தைக் கொலையும் அபாயகரமானது. சில வார்த்தைகளைக் கேட்டதும் அதீத கோபம் உண்டாகிறது. சில வார்த்தைகள் தற்கொலை செய்ய வைக்கிறது. சில வார்த்தைகள் ஊரை விட்டு ஓட வைக்கிறது. சில வார்த்தைகள் பழி வாங்கத் தூண்டுகிறது.

பழிக்குப் பழி வாங்கும் அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பு நடந்திருக்கலாம். வாழ்க்கை நிலைகுலைந்து மாறியிருக்கலாம், சொந்தத்தை இழந்திருக்கலாம். என்ன நடந்திருந்தாலும் பழிக்குப் பழி வாங்குவதால், நடந்துபோன எதையும் மாற்றிவிட முடியாது. வெறி நாய் கடித்தால் அதை திருப்பிக் கடிக்க முயற்சிப்பது போன்ற செயலே பழிக்குப் பழி வாம்ஹ்கும் செயல். வெறி நாய் கடித்தவுடன் முதல் நடவடிக்கையாக நோய்த் தொற்றில் இருந்து உடலை பாதுகாக்க வேண்டுமே தவிர, அந்த வெறி நாயைப் பற்றி சிந்திக்கக் கூடாது. ஏனென்றால் வெறி பிடித்த நாய் எப்படியும் விரைவில் செத்துப் போகும். அதை நீங்கள் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இந்த விஷயத்தில், பலவீனமான மனிதர்கள் மட்டுமே பழி வாங்குகிறார்கள். வலிமையான மனிதர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலி மனிதர்கள் அப்படிப்பட்ட சம்பவத்தைப் புறக்கணிக்கிறார்கள். ஒரு கன்னத்தைக் காட்டினால் மறு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு நல்லவராக இருக்கத் தேவையில்லை. மன்னிப்பதே எளிதான தீர்வு.

பழி வாங்கும் உணர்ச்சியைக் கைவிடுவது கொஞ்சம் கடினமான செயல் என்றாலும், முடியாதது அல்ல. பிறரால் நமக்குத் துன்பம் வருகையில், மிகப்பெரிய இழப்பு நேர்கையில், பழி வாங்கும் எண்ணம் வருகையில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

பழி வாங்குவதால் நடந்து போன எதுவும் மாறாது. ஆனால் அடுத்து இதை விட மோசமாக நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஏனென்றால் பழி வாங்கும் உணர்வு சங்கிலித் தொடர் போன்று நடந்துகொண்டே இருக்கும். யார் ஒருவர் முற்றுப்புள்ளி வைக்கிறாரோ, அவரே வெற்றி பெறுகிறார். உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஆயுதம் எடுத்தவர் தானும் பலியாகி தன் குடும்பத்தையும் இழந்துவிடுகிறார்.  

ரோட்டில் செல்லும்போது கண்ணில் தூசு விழுந்துவிட்டது என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது. காற்றை பழி வாங்க இயலாது. எனவே, நடந்ததை ஏற்றுக்கொள்வது முக்கியம். பழி வாங்கும் உணர்வினால் மனம் விஷமாகிறது. இந்த விஷம் எதிரியை மட்டுமின்றி தன்னையும் அழித்துவிடும்.

தூண்டுபவர்களிடமிருந்து விலகுங்கள்

பழி வாங்கவில்லை என்றால் செத்தவர்கள் ஆத்மா சாந்தியடையாது, நம்ம சாதிக்கு மரியாதை போயிடும், நம்ம இனத்தை யாரும் மதிக்க மாட்டாங்க என்றெல்லாம் வெறுப்பைத் தூண்டுபவர்களிடம் இருந்து விலகுங்கள். சாதிப்பெருமை, இனப்பெருமை, மதப்பெருமை என்றெல்லாம் நடந்த அநீதிக்கு சாயம் பூசாதீர்கள். நடந்தது அநீதியாக இருக்கலாம். காவல் துறையே உடந்தையாக இருக்கலாம். எப்படிப்பட்ட சூழல் என்றாலும் பிறர் வார்த்தைக்கு மதிப்பளிக்காதீர்கள். சுய கட்டுப்பாடு இருப்பவர்கள் மற்றவர்களுடைய தூண்டிலில் சிக்க மாட்டார்கள்.

மன்னிப்பு என்பது பலம்

அமைதியாக இருப்பது அவமானம் அல்ல. மன்னிப்பது கோழையின் செயல் அல்ல. மன்னிப்பதற்கே மிகப்பெரும் பலம் தேவைப்படும். உணர்ச்சிவசப்பட்டு ஆயுதத்தைக் கையில் எடுப்பதற்கு சில நொடிகள் போதும். ஆனால், ஆயுதத்தினால் எதுவும் முடியப்போவதில்லை. நடந்த சம்பவத்தை மன்னிப்பதற்கே அதிக பலம் தேவைப்படுகிறது. மன்னிப்பு என்பது நடந்த செயலை மன்னிப்பதே தவிர, நடந்த குற்றத்தை மன்னிப்பது இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அமைதியாக இருங்கள். மன்னிப்பதன் மூலம் கசப்புணர்வு மறைந்துவிடும். எதையும் தாங்கும் இதயம் என்று இதையும் தாங்கிக்கொள்ளுங்கள்.

அவமானம் என்று எதுவுமில்லை

புத்தரை பாராட்டி வரவேற்ற சமயத்தில் அவர் மகிழவில்லை, புத்தரை அவமானம் செய்த நேரத்தில் வருந்தவில்லை. இரண்டிலும் எனக்கு எந்த பயனும் இல்லை என்பதில் தெளிவாக இருந்தார். புத்தரைப் போன்று வேதனை தருபவர்களை கண்டுகொள்ளாதீர்கள். அம்மாவை தவறாகப் பேசினார், எல்லோர் முன்னிலும் அவமானம் செய்தார், அறியாமல் நடந்ததுக்கு பெரிய தண்டனை என்றெல்லாம் ஆவேசம் அடையாதீர்கள்.  

அவமானம் என்பது உண்மையல்ல. கடந்த காலம் எனும் ஆபத்தான வலையில் அவமானம் சிக்க வைத்துவிடும். அவமானத்தில் சிக்கியவர்களுக்கு வேறு எதிர்காலம் கண்ணுக்கே தெரியாது. எனவே, அவமானத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவமானத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. எதிர்காலமே எல்லாவற்றையும் விட முக்கியமானது.

வெற்றியைப் பரிசாகக் கொடுங்கள்

மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்றே துன்பம் கொடுக்கிறார்கள். அவர்கள் கண் முன்பு மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமான மனிதராகவும் வாழ்ந்து காட்டுவதே எதிரிக்குக் கொடுக்கும் மாபெரும் தண்டனை. பழி வாங்குவதை விட சிறந்த பாதை இருக்கிறது என்று எதிரிக்குக் காட்டுங்கள். எதிரிகளைப் புறக்கணிப்பதே மாபெரும் பழி வாங்குதல். எத்தனை தடைகள் ஏற்படுத்தினாலும் அதை தாண்டிச் செல்லும் வலிமை இருக்கிறது என்பதைக் காட்டுவதே உண்மையான பழி வாங்குதல்.

பழி வாங்குவதில் கொஞ்சம் அற்ப சுகம் கிடைக்கலாம். ஆனால், அதன் பிறகு அந்த சக்கரம் நிற்கப்போவதில்லை. மீண்டும் வாழ்நாள் முழுவதும் ஒரு பழி வாங்குதலை எதிர்பார்த்து பயந்துகொண்டே வாழ வேண்டும். எனவே, பழி வாங்குதல் எனும் குணத்தைக் கைவிடுங்கள். இதற்கு ஒளவையார் காட்டிய வழியைக் கடைபிடிக்கலாம்.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு.

  • என்று மூதுரையில் பாடியிருக்கிறார் ஒளவையார்.

வியாதி, நோய், பிணி போன்றவை உடன் பிறந்தவர்கள் போன்று துன்பம் தரலாம். இந்த நேரத்தில் எங்கோ வளர்ந்த மூலிகைகள் துன்பம் தீர்க்கின்றன. அதுபோல் தீமை, துரோகம் செய்தவர்களை மறப்பதற்கு நல்லவர்கள் பக்கம் சேருங்கள் என்கிறார்.

ரத்தத்துக்கு ரத்தம் என்பது ஒரு முடிவிலா பயணம். வாழ்க்கை என்பது கொஞ்ச காலம். நம் வாழ்க்கையை நாமே முடிவு செய்வோம். பிறர் வாழ்க்கையை அழிப்பது நம் வாழ்வையும் அழிக்கும் செயல்.

Leave a Comment