இதுவும் திராவிட மாடலில் ஒன்று
கருணாநிதி காலத்தில் இருந்து திருச்சியில் அரசியல் செய்துவரும் கே.என்.நேருக்கு இன்று 72வது பிறந்த நாள். இதனையொட்டி திருச்சியில் தடபுடல் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால், அவர் பிறந்த நாளுக்காக சென்னைக்கு ஓடோடி வந்து உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றது கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து சவுக்கு சங்கர், ‘’கே.என். நேருவுக்கு வயது 72. உதயநிதி ஸ்டாலினுக்கு வயது 46. என்னதான் துணை முதல்வராக இருந்தாலும், தலைவர் மகனாயிற்றே; நமது ஜென்ம எதிரி அன்பில் மகேஷின் பால்ய சினேகிதனாயிற்றே! நேரில் சென்று வாழ்த்து பெறுவோம் என்று வேறு வழியின்றி, சுயமரியாதையை திருச்சியிலேயே வைத்து விட்டு, உதயநிதி குடியிருக்கும் “குறிஞ்சி இல்லத்துக்கு” சென்று வாழ்த்து பெறுகிறார் எனது அருமை நண்பர் நேரு.
முக. ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்து பெறுவது வேறு. அவர் கட்சியின் தலைவர். உதயநிதி திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. திமுகவின் இளைஞர் அணியின் செயலர் மட்டுமே. கே.என் நேரு, திமுகவின் முதன்மைச் செயலர். உதயநிதி பாலகனாக இருக்கும்போது, அவர் திமுகவில் நிர்வாகி. இப்படிப்பட்ட கே.என். நேரு, உதயநிதி வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றதை, தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறையின் மூலமாக செய்தி வெளியிடச் செய்வது என்பது, அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதியின் அற்பமான சிறுபிள்ளைத்தனமன்றி வேறு இல்லை. இந்த சிறுமதி படைத்த அற்பர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று திமுக இருக்கிறது. இக்கட்சியின் எதிர்காலம் என்னவென்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை.’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நேருவின் ஆதரவாளர்களுக்கு இந்த சந்திப்பு வருத்தம் கொடுத்தாலும் அமைதியாக இருக்கிறார்கள். அதேநேரம், அன்பில் மகேஸ் ஆதரவாளர்கள், ‘’இன்னைக்கு ஓடிவந்து சந்திக்கலைன்னா சட்டசபைக்கு சீட் கிடைக்காதுன்னு நேருக்குத் தெரியும். பதவிக்காக உதயநிதி காலில் விழச்சொன்னாலும் செய்வார். வயதானதும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டால் என்ன?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
திராவிட அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா