ஓசூர் அறிவிப்புக்குக் கொந்தளிப்பு
இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 அறிவிப்புகள் கீழ், ‘’ஒசூரை பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இதையடுத்து விமான நிலைய விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. சேலம் விமான நிலையமே பாதி நாட்களே இயங்குகிறது, எனவே, சங்ககிரிக்கு மாற்றினால் கொங்கு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K. சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.
இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.
அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுகிறார்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகளே நடக்கவில்லை, இந்த சமயத்தில் தேவையில்லாமல் ஓசூர் பஞ்சாயத்துத் தேவையா முதல்வரே..? பேசாம ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விமானநிலையம் அமைப்போம்னு அறிவிச்சிடுங்க என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் மதுரையில் ஒன்று திருச்சியில் ஒன்று என விமான நிலையங்கள் 150 கிலோமீட்டருக்கு உள்ளே இருப்பது அண்ணாமலைக்குத் தெரியாதா என்று தி.மு.க.வினர் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்கள்.