யாரும் கொடுப்பதில்லை, பறிப்பதுமில்லை.
பணம் சம்பாதிக்கும் பெண்களுக்கு திருமணம் என்ற வார்த்தை ரொம்பவே பயமுறுத்துகிறது. தங்களுடைய ஆசை, கனவு, லட்சியம் போன்ற எல்லாவற்றையும் திருமணம் உடைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். அதனாலே மாப்பிள்ளைக்கு எக்கச்சக்க நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.
கல்யாண வாழ்க்கை தேவையா… தோழர் பர்வதவர்த்தினியின் பதிவில் இதற்கு ஒரு தெளிவான பதில் இருக்கிறது. படித்துப் பாருங்கள்.
“திருமணம் – அத்தோட ஒருத்தரோட எதிர்காலக் கனவுகள், தேடல்கள் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி தானா? வாழ்க்கைல விட்டுக் கொடுத்து போறதுங்கிற பேரில் நாம எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு உப்புச் சப்பில்லாத வாழ்க்கையைத்தான் வாழணுமா?
அப்படில்லாம் இல்லன்னு இத்தனை வருட வாழ்க்கை அனுபவத்தில், இப்ப எனக்குத் தோணுது. நம்ம கனவு பத்தி, நமக்குத் தெளிவான புரிதலும், தேடலும் இருந்தா, அந்தக் கனவை துரத்திப் பிடித்து, நனவாக்கி, அதோட பயணிக்கிற வாழ்க்கையை சந்தோசமா வாழமுடியும்னு நினைக்கிறேன்.
திருமணம்தான் வாழ்க்கையின் destiny, end point or final achievement அப்படின்னு நினைக்காம, வாழ்க்கையில் அதுவும் ஒரு அங்கம்னு நெனைச்சு, திருமணம் செய்துகிட்டு, ஜாலியா அந்த வாழ்க்கையையும் explore பண்ணுங்கன்னு தான் நான் என் இளந்தோழர்களிடம் சொல்லுவேன்.
ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ, திருமணம்ங்கிறது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அதுவே முழு வாழ்க்கையில்லை. அதோட வாழ்க்கை முடிஞ்சு போற விதி, அழிக்க முடியாத தலையெழுத்து – அப்படில்லாம் இல்லை. வாழ்க்கையில் திருமண வாழ்க்கையும் வேணும்னு நெனைச்சா, அது ஒரு பகுதி மட்டும்தான். வாழ வேண்டிய, explore பண்ண வேண்டிய மீதி வாழ்க்கையும் இருக்கு.
குடும்பம், குழந்தை, உறவுகள் தாண்டி, ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்டு, தானே வாழ்ந்து பார்க்க வேண்டிய சமூக வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கு.
குடும்பத்திற்குள் யாரும் யாரையும் இறுக்கி, கழுத்தைப் பிடிக்காம, தன்னியல்பில், தள்ளி வாழவும் தெரிஞ்சிக்கிட்டா, ரொம்ப எளிதா. (அல்லது யாரையும் காயப்படுத்துகிற / காயப்பட்டுக்கிற வலியில்லாம,) நம்முடைய வேலை, குடும்பம், கனவு, லட்சியம், ஆசைகள்…. இப்படி சவால்களைச் சமாளிக்கிற அரசியல் சூட்சுமம் பிடிபட்டுவிடும்.
ஆனால், இந்த அரசியல் சூட்சுமம் பிடிபட நான் நிறைய, நிறையவே அனுபவப்பட்டேன். எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அழுகை, கோபம், வெறுப்பு, விரக்தின்னு வாழ்க்கை பாராபோலாவில் உச்சியில் ஏறி, இறங்கி, அப்புறம் கடந்த இருபது ஆண்டுகளாக மெல்ல கோபம் குறைத்து, எதிர்பார்ப்புகளைத் துடைத்தெறிந்து, ஏமாற்றம், அழுகை எல்லாவற்றையும் சிரித்தபடியே விழுங்கக் கற்று, சமதளத்திற்கு அநேகமா வந்தாச்சு.
இப்படியாக, ஜனநாயகத் தன்மையற்ற இந்த குடும்ப அரசியலில், கனவையும் குடும்பத்தையும் பாலன்ஸ் பண்ணுகிற நகாசு வேலை தெரிஞ்சா போதும்.
பழகின ரோட்டில், வண்டிக்காரன் இல்லாமல், தானே ஓடுகிற வண்டியாய் வாழ்க்கை தானா ஓடும்.
ஆக, இந்த முப்பத்தியாறு வருட திருமண வாழ்க்கையில், தானாய் ஓடுகிற மாடாய் வாழ்க்கையை ஓட விட்டாச்சு என்பது தான் இந்தச் சமூகத்திற்கு நான் சந்தோசமாய்ச் சொல்லிக் கொள்வது. அன்புங்கிறது யாரையும் இறுக்கிப் பிடிச்சு, கட்டிப் போட்டு வச்சுக்கிறதில்ல. நிபந்தனையற்ற அன்பில், விடுதலை உணர்வில் நிறைகிறது வாழ்க்கை.
ஆம், அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் இருக்கிறது. அதை யாரும் பறிக்கவும் முடியாது, கொடுக்கவும் முடியாது. பெண்ணும் ஆணும் இணைந்து உயிர் உருவாக்குதலே இயற்கை இட்டிருக்கும் பணி. அதனை செம்மையாக செய்து முடிப்போம். அதுவே மகிழ்ச்சி.