மீண்டும் வேண்டாம் ஜப்பான் கொடூரம்
தொடர்ந்து லெபனான், காஜா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு எதிராக இப்போது அனைவரும் ஒன்றிணையவில்லை என்றால் இஸ்லாமிய நாடுகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று ஈரான் பிரசிடெண்ட் அறிவித்திருக்கும் நிலையில், வளைகுடா பகுதியில் போர்ப்பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒன்றிணைந்துள்ள நிலையில் இது பெரும் போராக மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் தேதியன்று ஈரான் சுமார் 182 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது. இந்த ஏவுகணைகளை தடுப்பதும் அதன் பாதையை கண்டுபிடிப்பதும் மிக சிரமம். இந்த ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட 5 முதல் 25 மடங்கு அதிகம் பயணிக்கும். ஒரு வினாடிக்கு 3 முதல் 8 கி.மீ. பயணிக்கத்தக்கவை. அதனால்தான் 1800 கி.மீ. தூரத்தை 10 முதல் 15 நிமிடங்களில் கடந்து இஸ்ரேலுக்குள் இந்த ஏவுகணைகள் நுழைந்தன. இஸ்ரேலின் இரும்புக் கவசம் (Iron Dome) எனும் வான் பாதுகாப்பு முறை மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிலை நிறுத்திய பேட்ரியாட் எனப்படும் வான்பாதுகாப்பு மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்பு வளையங்களையும் மீறி ஏவுகணைகள் இஸ்ரேல் மீது பாய்ந்துள்ளன.
இந்த ஏவுகணைகளில் 90%ஐ தடுத்து அழித்துவிட்டோம் என இஸ்ரேல் கூறுகிறது. ஈரான் தங்களது 80% ஏவுகணைகள் இலக்கை அடைந்தன என கூறுகிறது. சுற்றுக்கு விடப்பட்டுள்ள பல காணொலிகள், ஈரானின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை வெளிப்படுத்துகின்றன. தனது வான் பாதுகாப்பை மீறி ஒரு ஈ கூட இஸ்ரேலுக்குள் நுழைய முடியாது எனும் பிம்பத்தை ஈரானின் ஏவுகணைகள் சுக்கு நூறாக உடைத்துள்ளன.
இந்த ஏவுகணைகள் மூலம் டெல் அவிவ் நகரத்தில் உள்ள இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் தலைமையகம், ஹாட்செரிம் விமான தளம், . நெவடிம் விமான தளம் தாக்கப்பட்டு 8 விமானங்கள் அழிக்கப்பட்டன. இத்தகைய போரில் ஈடுபடலைத் தவிர்க்கவே ஈரான் பெரிதும் விரும்பியது. இஸ்ரேலைத் தடுக்க உலக நாடுகள் முன்வராத சூழலில் ஐ.நாவும் செயலிழந்த நிலையில் குறிப்பாக இஸ்லாமிய தேசங்களே கூட கண்டன அறிக்கைகளை தாண்டி எதுவும் செய்ய விரும்பாத சூழலில் தான் மட்டும் போரில் ஈடுபட்டால் பெரும் இழப்பு என்பதை ஈரான் உணர்ந்திருந்தது. எனவே சாத்தியமான அளவுக்கு போரைத் தவிர்க்கவே ஈரான் முனைந்தது.
ஈரான் ஜனாதிபதி, “ஈரானுக்கு வருகை தந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்தே இஸ்ரேல் படுகொலை செய்த பின்னர், இஸ்ரேலை திருப்பித் தாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இருந்தது. எனினும் அமெரிக்க- ஐரோப்பிய தலைவர்கள் பொறுமை காக்குமாறும் காசாவில் விரைவில் அமைதி உருவாக்க தாங்கள் முனைந்துள்ளதாகவும் திரும்பத் திரும்பக் கூறினர். ஆனால், காசாவில் அமைதியும் உருவாகவில்லை. எங்கள் தாக்குதலும் நடக்கவில்லை. இப்பொழுது இஸ்ரேலின் தாக்குதல் லெபனானுக்கும் பரவியுள்ளது.”
எப்படியாவது ஈரானை போரில் ஈடுபடுத்தி அமெரிக்காவை போர் வளையத்துக்குள் இழுக்க வேண்டும் என இஸ்ரேல் முயன்றது. ஈரான் நேரடியாக போரில் ஈடுபட்டால் அமெரிக்காவும் களத்தில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பது இஸ்ரேலுக்கு தெரியும். அது இப்பொழுது நடந்துவிட்டது போல தோன்றுகிறது. இஸ்ரேலுக்கு பாதுகாப்பு தருவோம் என அமெரிக்கா பகிரங்கமாக கூறியுள்ளது.
“எங்கள் தாக்குதல்கள் முடிந்துவிட்டன; இனி எங்களது தாக்குதல் தொடராது. ஆனால் இஸ்ரேல் திருப்பித் தாக்கினால் இப்பொழுது நடந்ததைவிட மிகப்பெரிய பதிலடி நடக்கும்” என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிடமும் இஸ்ரேலிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அணு ஆயுதப்போரை விளைவித்துவிடும். தங்களால் நேரடியாகப் போரிட்டு ஜெயிக்க முடியவில்லை என்றால் அணு ஆயுதப் போராக இதனை மாற்றுவதற்கு இஸ்ரேல் ஒருபொதும் தயங்காது என்பதே உண்மை. எனவே, மீண்டும் அப்படியொரு துயரம் மனிதகுலத்துக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பது தான் மனிதர்களின் எண்ணம்.