உயிர் என்றால் எல்லா உயிரும் சமமே.
மிருகத்தைப் பலி கொடுப்பது எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. குல தெய்வ கோயிலில் மிருகத்தைப் பலி கொடுக்கவில்லை என்றால் சாமி கோபமாயிடும் என்று நம்புகிறார்கள். அப்படித் தான் மிருகத்தைப் பலி கொடுத்தால் அல்லா சொர்க்கம் தருவார் என்று சிலர் நம்புகிறார்கள்.
உயிர்களை கொலை செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால், ஒன்றையொன்று தின்று வாழும்படியே உயிர்கள் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.
உயிர்கள் என்றால் வளரும், வாழும் எல்லாமே உயிர்கள் தான். செடிகளுக்கு வலிப்பதில்லை, அவை தானாக கனி கொடுக்கின்றன, அவற்றை நாம் பயன்படுத்தவில்லை என்றால் அவை வீணாகிவிடும் என்று மனிதன் சொல்வது நிச்சயம் நியாயம் இல்லை.
எந்த பயிரும் தானே முன்வந்து மனிதனுக்கு கனியைத் தருவதில்லை, மனிதனே பறித்துக்கொள்கிறான். எந்த பசுவும் தானே முன்வந்து பால் தருவதில்லை, மனிதன் பறித்துக்கொள்கிறான். மனிதன் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன.
உயிர் என்றால் எல்லா உயிரும் சமமே. ஒரு கொசுவின் உயிரும், ஒரு கோழியின் உயிரும், ஒரு மனிதனின் உயிரும் சமமானதே. எனவே, எல்லா மனிதரும் பிற உயிர்களைக் கொன்று தின்றே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அதேநேரம், உயிர்களைக் கொல்வதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சில நியாயங்கள் கற்பித்துக்கொள்கிறார்கள்.
கடவுளுக்கு மனிதர்களைப் பலி கொடுப்பது எல்லா மன்னர்கள் காலத்திலும் நடந்திருக்கிறது. சாமிகளின் பெயரில் நடந்திருக்கிறது. அல்லாவின் பெயரிலும் நடந்திருக்கிறது. இயேசுவின் பெயரிலும் நடந்திருக்கிறது.
பக்ரீத் பண்டிகையும் ஒரு பலி பண்டிகை. அல்லா என்ற அரேபிய கடவுளுக்கு தன் மகனை பலி கொடுக்க முற்படுகிறான் இப்ராஹிம்.
அதை கண்டு நெகிழ்ச்சியடையும் அல்ல, ‘நீ மிகவும் அன்பு வைத்திருக்கும் உன் மகனையே எனக்கு பலியிட துணிந்து விட்டதால் உனக்கு சொர்க்கத்தில் இடம் தருகிறேன். எனக்கு நீ ஆட்டுக்குட்டியை பலி கொடுத்தால் போதும்’ என்கிறார். இதையொட்டி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.
குல தெய்வத்திற்கு சாமியாடுபவர்கள், ‘ஆத்தா பசியா இருக்கா… அஞ்சு ஆடு பலி கொடு’ என்று கூறுவதுண்டு. மனிதன் சாப்பிடுவதற்கு விரும்புகிறான், அதற்கு கடவுளை பயன்படுத்திக் கொள்கிறான்.
இந்த உலகை கடவுள் படைத்தார் என்றால், எல்லா உயிர்களையும் கடவுளே படைத்தார் என்றால், அவர் ஒன்றையொன்று தின்று வளரும் படி வைத்திருப்பாரா… அப்படி என்றாலும் தான் படைத்த உயிரையே தனக்கு பலியாகக் கேட்பாரா..?
கொலை செய்யுங்கள், உண்ணுங்கள். ஆனால், கடவுளுக்கு என்று எதற்கு பொய் சொல்கிறீர்கள்..?
பசு பால் கொடுக்கிறது, காகம் வடை திருடுகிறது என்று இன்னும் எத்தனை காலம் மனிதனை மனிதன் ஏமாற்றிக்கொண்டே இருப்பது..?
இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.