ஞானகுரு பதில்
நாத்திகனாக இருக்கும் மனிதர் கூட, நோய் வந்துவிட்டால் அச்சம் அடைந்துவிடுகிறார். ஒரு வேளை கடவுளின் திருவிளையாடலே காரணமோ என்று பயந்துவிடுகிறார். கடவுளுக்கு ஏதேனும் காணிக்கை கொடுத்தாவது நோயை தீர்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். இந்த சந்தேகங்களுடன் ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன்.
- கடவுளை கும்பிட்டால் வேதனை, வலி குறையும் என்பது நிஜம்தானே?
கடவுளை கும்பிட்டால் வலி தீர்ந்துவிடும் என்பது உண்மை என்றால், நோயின் வேதனையை பக்தி மாற்றிவிடும் என்றால் இந்த உலகத்தில் மருத்துவமனைகளே தேவை இல்லை. அதனால் வலி, வேதனைகளை பொறுத்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கற்கவேண்டும்.
- அது எப்படி வலியை ஏற்றுக்கொள்ள முடியும்?
உலகத்திலேயே கொடுமையான வேதனை என்றால், அது பிரசவம் மட்டும்தான். சுயநினைவுடன் இருக்கும் மனிதனின் கையை முறிப்பதற்கு சமமான வேதனையை பிரசவத்தின்போது பெண் அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்தனை கொடுமையான வேதனை என்பதால்தான் பிரசவ நேரத்தில் ஒவ்வொரு பெண்ணும் அலறுகிறாள், கத்துகிறாள், கூப்பாடு போடுகிறாள். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டதும் அதுவரை அனுபவித்த அத்தனை வேதனைகளையும் மறந்துவிடுகிறாள். மீண்டும் அப்படியொரு வேதனையை தாங்கிக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயாராகிறாள். பிரசவம் மட்டுமின்றி, குழந்தை வயிற்றில் இருக்கும் ஒன்பது மாதங்களும் வேதனை தரும் சுமையுடனே வாழ்கிறாள். குழந்தையை சுகமான சுமையாக நினைப்பதால், வலியை விரும்பி ஏற்றுக்கொள்கிறாள் பெண். அப்படித்தான் நோயையும் வலியையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மனதை பழக்க வேண்டும்.
- பிரசவ வலிக்கு பிரதிபலனாக குழந்தை கிடைக்கிறது, ஆனால் நோயினால் உண்டாகும் வலி, வேதனையை ஏற்றுக்கொள்வதற்குப் பிரதிபலனாக என்ன கிடைக்கும்?
உறுதியான மனம் கிடைக்கும். ஏனென்றால் நோய் என்பது உடலுக்குத்தான் கேடு விளைவிக்கிறது, மனதுக்கு அல்ல. விபத்து நடந்தால், அதனை விபத்தாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் செல்வேந்திரனுக்கு இருந்திருக்க வேண்டும். அவன் நம்பிக்கைவாதியாக இருந்திருந்தால், காலில் காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். அவன் என்ன இழந்தான் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சமிருக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு விபத்தில் கடவுளை நம்பியவன், நாளை மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டால் கடவுள் மீது நம்பிக்கையை இழப்பான். கடைசிவரை உண்மையை கண்டறியவே மாட்டான்.
- விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்கும்போது, எதிர்பாராத நோயினால் தாக்கப்பட்டு கொடுமையான வேதனையை அனுபவிக்கும்போது, அதனை எப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும்?
முதலில் நடந்ததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஏனென்றால் நடந்ததை இனி மாற்றவே முடியாது. நான் வண்டி எடுக்காமல் போயிருந்தால் விபத்து நடந்திருக்காது. உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் நோய் பாதித்திருக்காது என்று புலம்பித்தள்ளுவதால் எந்த லாபமும் இல்லை.
அடுத்த தீர்மானம்தான் மிகவும் முக்கியமானது. ஆம், இந்த வலி, வேதனை எல்லாமே விரைவில் தீர்ந்துவிடும். இத்தனை கொடுமையான வலி தொடர்ந்து இருக்காது என்று நம்பவேண்டும். அதனால் துன்பத்தை உண்டாக்கும் வலியை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டும். எப்படி கர்ப்பிணி வலியை தாங்கிக்கொண்டு குழந்தை பெறுகிறாளோ, அப்படியே நாளைய ஆரோக்கியத்துக்காக இன்றைய வலியை தாங்கிக்கொள். நோயின் வேதனையும் வலியும் நீடித்தாலும் உனக்கு பழகிவிடும்.
- வலித்தால் அழக்கூடாதா?
நன்றாக அழு. வேதனையை வெளிப்படுத்து. ஆனால் இது நிரந்தரமல்ல, இதோ முடிந்துவிடும் என்ற நம்பிக்கையை மட்டும் வளர்த்துக்கொள்… நீ குணமடைந்தால் நல்லது. செத்துப்போனால் அதைவிட நல்லது.