சூப்பரான தத்துவக் கதை
வாழ்க்கை தத்துவத்திற்கும் சுலபமான வாழ்க்கை நெறிக்கும் வழி காட்டுபவை ஜென் கதைகள். ஒரு கதையில் பல கதைகள் அடங்கியிருப்பதுண்டு. அப்படியொரு ஜென் கதை இது.
ஒரு செல்வந்தனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தாள். கிட்டத்தட்ட சாகும் தருவாயில் அவள் செல்வந்தனிடம், ‘நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன். அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துகொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன்’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து விடுகிறாள்.
அவள் இறந்து பல மாதங்களான பிறகும் செல்வந்தன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதல் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. ஆனால், அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.
செல்வந்தன் செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொள்ளும் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே ஒப்பித்து, அதற்கு அர்த்தம் கேட்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த செல்வந்தன், இந்த பேய் விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, ‘இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்‘ என்கிறார்.
‘ஆமாம். நான் சொல்கிற, செய்கிற, பேசுகிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்த பேய்‘ என்கிறான்.
அத்துறவி புன்னகைத்தபடி,, ‘நல்லது. உன் குறையை தீர்க்கிறேன். அடுத்தமுறை அந்த பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய்‘ என்று ஒரு அறிவுரை சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!
அன்று இரவு திரும்பவும் மனைவி பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், ‘உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தை நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்’ என்கிறான்.
’சரி, என்ன உன் கேள்வி?‘ என்கிறது பேய்.
உடனே செல்வந்தன் ஒரு பையிலிருந்து கை நிறைய கோதுமையை அள்ளி, ”என் கையில் எத்தனை கோதுமை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல்’ என்கிறான். அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை.
இது கதை. ஆனால், இது கதை மட்டுமல்ல. கதையை புரிந்துகொள்வதும் ஒரு கலை. பெரும்பாலான மக்கள் கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் மையக்கருவை புரிந்துகொள்வதில்லை என்பதுதான் உண்மை.
இந்த கதையை ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்று, சொன்ன சிலருடைய பதில்கள் இங்கே.
- யாருக்கும் எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். அப்படித்தான் நாம் சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல
- அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது? எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள் எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது.
- அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே…. அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை.
- அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது.
- நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது’’
இப்படி இன்னும் பல புரிதல்கள் இருக்கின்றன. கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்.
உண்மையில் பேய் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும். ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
இதைத்தான் சொல்கிறது ஜென். அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான். பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள். அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள் நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்… அவற்றை தூக்கி எறிந்துவிட்டால், நலமான வளமான வாழ்வை வாழலாம்