• Home
  • அழகு
  • பெண்கள் ஏன் வெள்ளை நிறத்துக்கு ஆசைப்படுகிறார்கள்..?

பெண்கள் ஏன் வெள்ளை நிறத்துக்கு ஆசைப்படுகிறார்கள்..?

Image

வரம் தரும் மூலிகை

பெண்ணின் கைப்பையைத் துழாவிப் பார்த்தால் பணம் இருக்கிறதோ இல்லையோ, அழகாக்கும் க்ரீம்கள், சாயப் பொருட்கள் நிச்சயம் இருக்கிறது. ஏன், இதற்கு பெண்கள் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஞானகுருவிடம் பதில் இருக்கிறது.

பஸ் நிறுத்தத்தின் அருகே மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார் ஞானகுரு. கல்லூரி முடிந்துவந்த மூன்று பெண்கள் கலகலப்புடன் பேசிக்கொண்டே அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றபடி, பேருந்துக்காக காத்திருந்தார்கள். மூவரில் ஒரு பெண் மாநிறமாகவும் மற்றவர்கள்

‘’அந்த புது கிரீம்தான் இப்போ நான் போடுறேன்… நல்லா வித்தியாசம் தெரியுது. நம்ம ராகேஷ்கூட, ‘இப்படி அழகாயிட்டே போனா எப்படின்னு’ கேட்கிறான்…’ என்று ஒரு பெண் சொல்ல, மற்ற இருவரும் ஆமோதிப்பது போல் அதேநேரம் கொஞ்சம் இயலாமையுடன் சிரித்து வைத்தார்கள்.

‘’நானும் இந்த வாரம் ஷாப்பிங் போறப்ப வாங்கிடுறேன்… பழசு நல்லாத்தான் வித்தியாசம் தெரிஞ்சது, ஆனா…’’ என ஒரு பெண் இழுத்தாள்.

‘’என்னிடம் அற்புத மூலிகை இருக்கிறது, உங்கள் நிறத்தை வெள்ளையாக மாற்றிவிடும்…’’ என்று உரக்கச்சொன்னார் ஞானகுரு. படக்கென்று மூவரும் திரும்பிப்பார்த்தார்கள். லேகியம் விற்கும் சித்த வைத்தியரோ என்ற பாவனை தெரிந்தது.

‘’எங்கே… உங்ககிட்ட ஒரு மூலிகையும் இல்லையே…. நீங்க சித்த வைத்தியரா?’’ என்று கேட்டாள் ஒரு பெண்.

‘’என்ன மூலிகைன்னு சொல்லுங்க…’’ என்று அருகே நெருங்கினாள் அடுத்தவள்.

‘’நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொன்னால், மூலிகை கிடைக்கும்…’’ என்றபடி புன்முறுவல் பூத்தார் ஞானகுரு.

‘’நிறைய ரூபா கேப்பீங்களா..?’’ என்று ஒரு பெண் கேட்க, அடுத்தவள், ‘’என்ன கேள்வி” என்று கேட்டாள்.

‘’நீங்கள் நிறமாக மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா அல்லது பிறர் உங்களை கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.

‘’இதென்ன கேள்வி. வெள்ளையா, சிவப்பா, அழகா இருந்தாத்தானே எல்லோரும் கவனிப்பாங்க, கன்னங்கரேல்ன்னு பன்னி மாதிரி இருக்கிற எங்கண்ணன்கூட, அவன் கட்டிக்கிறதுக்கு, ‘பொண்ணு கலரா பாருங்க’ன்னு சொல்றான்…’’ என்றாள் ஒருத்தி.

பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’பெண் பிள்ளைகள் பத்து வயதை தொடுவதற்கு முன்னரே தங்கள் நிறம் குறித்த கவலை தொடங்கிவிடுகிறது. தோலின் நிறம் மாறிவிட்டால் வாழ்க்கையே மாறிவிடும் என்று நம்புகிறார்கள். கருப்பாக இருப்பதை உடல் ஊனம் போன்று கருதுகிறார்கள். செய்யக்கூடாத தவறு செய்துவிட்டது போல் தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறார்கள்.

அதனால்தான் ஏதேனும் க்ரீம்களை பூசி வெள்ளையாகிவிடலாம் என்று ஆசைப்படுகிறார்கள். தோலின் நிறத்தை ஒரு சில க்ரீம்கள் சில மணி நேரங்களுக்கு மட்டும் மாற்றிக்காட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், இதனால் உங்கள் பிரச்னை ஒரு போதும் தீரப்போவதில்லை. ஏன் தெரியுமா…? உண்மையில் நீங்கள் நிறம் மாறுவதற்கு ஆசைப்படவில்லை. பிறரால் கவனிக்கப்பட வேண்டும், பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறீர்கள்…’’

‘’அப்படியே இருந்தாலும், அது தப்பா..?’’ ஒரு பெண் ஆர்வமுடன் கேட்டாள்.

‘’உங்கள் ஆசை ஒருபோதும் முடிவு பெறப் போவதில்லை. ஒருசிலர் உங்களை கவனிக்கத் தொடங்கினால், அடுத்ததாக பிரபலம் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அப்படி பிரபலமானாலும், மற்ற எவரையும்விட நான் அழகாக வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இதற்கு ஒரு முடிவு எப்போதுமே கிடைக்காது. இந்த ஆசை ஒரு கட்டத்தில் பேராசையாக மாறி, பொறாமையாக மாறி உங்களை சுலபமாக வீழ்த்திவிடும்.

நீங்கள் விருப்பப்பட்டு இந்த நிறத்தை பெறவில்லை. இதைதான் உங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. இதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். பிறர் உங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ள அவசியமே இல்லை.  

இந்த சமூகமும், மக்களும் ஏதாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். ‘புதிய க்ரீம் வந்திருக்கிறது’ என்று அழகு  பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உன்னிடம் பொய் சொல்லும். கஸ்தூரி மஞ்சள்,  கடலைமாவு, பப்பாளி போட்டுக் குளித்தால் வெள்ளையாகலாம் என்று உறவுகளும் அறிவுரை கொடுப்பார்கள்.

கருப்பாக இருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடப்பது சிரமம், நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று பெற்றோர் உன் கவலையை அதிகப்படுத்துவார்கள். அனால், நீ ஒரு விஷயத்தில் தெளிவாக இரு. கருப்பு, வெள்ளை, சிவப்பு போன்றவை நிறம் மட்டுமே. எல்லாமே அழகுதான் என்ற எண்ணம் உள்ள ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள்.

நிறம் என்பது ஒரு முறை திரும்பிப்பார்க்க வைக்குமே தவிர, வேறு எந்த பயனும் கிடையாது. வெள்ளையாக இருக்கும் பெண் என்பதற்காக அவள் செய்யும் குற்றத்தை எந்த நிறுவனமும், எந்த கணவனும், எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாது.

உன்னுடைய நிறமே உன்னுடைய வரம் , அது ஓர் பொக்கிஷம், அது கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உன் எதிர்காலத்தை இந்த நிறம் எள்ளளவும் தீர்மானிக்க போவதில்லை என்ற உறுதியோடு இரு. ஏனென்றால் இதனை உன்னால் ஒருபோதும் மாற்ற இயலாது. மாற்ற இயலாததை சந்தோஷமாக ஏற்றுக்கொள். உன் நிறத்தை ஆரோக்கியமாக பராமரித்தாலே போதும். உன்னுடைய நிறத்தைவிட உன்னுடைய தனித்தன்மைதான் பேரழகு என்பதை புரிந்துகொள்…’’ என்று முடித்தார்.

‘’அப்படின்னா அந்த மூலிகைன்னு சொன்னது…’’

‘’மூலிகை இப்போது உன் மனதில் முளைத்துவிட்டது பெண்ணே’’ என்று சிரித்தார் ஞானகுரு.

Leave a Comment