ஹெல்த் டிப்ஸ்
மூலிகைகள் மற்றும் வேதியல் பொருட்களையே மாத்திரைகளாக சாப்பிடுகிறோம். அதற்குப் பதிலாக கிச்சனையே மருத்துவமனையாக மாற்ற முடியும்.
புற்று நோய்க்குத் திராட்சை
அனைத்து காலங்களிலும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது திராட்சை. கருப்பு, பச்சை என்று இரண்டு வகை திராட்சையிலும் நிறையவே சத்துக்கள் உள்ளன. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்தாக செயலாற்றுகிறது திராட்சை. திராட்சை ரசம் பருகுவதன் மூலம் காய்ச்சல் குறையும். வறட்டு இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கும். திராட்சையில் இருக்கும் வேதிப்பொருட்களுக்கு புற்று நோயைத் தடுக்கும் தன்மை உண்டு. ரத்தசோகைக்கும் நிவாரணம் தருகிறது.
பளபளப்புக்கு சீரகம்
அஞ்சறைப் பெட்டியில் சீரகத்துக்கு தனியிடம் உண்டு. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதுடன் உடலுக்கு நலனும் அளிக்கிறது. வயிறு மந்தம், செரிக்காமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு சீரகத்தை அரைத்துக்குடித்தால் உடனே குணம் தெரியும். சீரகத்தை வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்தை மென்று தின்றால் தலைசுற்று குணமாகும். பித்தம் குணமாகும். சீரகத்தண்ணீர் ஜீரணம் தரும். தோல் பளபளப்பாக மாறுவதற்கும் உடல் குளிர்ச்சி அடைவதற்கும் சீரகத்தை தினமும் மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அலர்ஜிக்கு எலுமிச்சை
வீட்டுத் தோட்டத்தில் முளைக்கக்கூடிய எலுமிச்சைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதனை குறைந்த விலை மருத்துவர் என்றே சித்தமருத்துவம் அழைக்கிறது. உடல் சூட்டை தணிக்கவும் பித்த கிறுகிறுப்பை போக்கவும் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும். வாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாறு குடித்துவந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும். நீர் மோரில் எலுமிச்சம் பழம், இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி இலை கலந்து குடித்தால் மந்தம், நரம்புத்தளர்ச்சி, வாய்வு பிரச்னை நீங்கும். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடல் அரிப்பு, அலர்ஜி போன்றவை நீங்கிவிடும்.
முகப்பருவுக்குக் கற்றாழை
வீட்டுத் தொட்டியில் எந்த பராமரிப்பும் இல்லாமலே சிறப்பாக வளரக்கூடியது கற்றாழை. இதனை அழகு மருத்துவர் என்றே அழைக்கிறார்கள். குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல் அல்லது சாறு தேய்த்து மசாஜ் செய்துகொண்டால் பொடுகு நீங்கி பளபளப்பான கூந்தல் கிடைக்கும். கற்றாழை ஜெல் சாறு எடுத்து நிறைய தண்ணீர் சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுப்பூச்சி, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் தீரும். முகத்தில் பரு, கரும்புள்ளி, மரு போன்ற பிரச்னையைத் தீர்ப்பதற்கு கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் கலந்து போட்டால் போதுமானது. உடல் பளபளப்பு அடையவும் குளிர்ச்சி அடையவும் வாரம் ஒரு முறை ஒரு விள்ளல் கற்றாழை ஜெல் சாப்பிட்டு வரலாம்.
கொழுப்பை விரட்ட வெள்ளைப்பூண்டு
அனைத்து உணவுகளிலும் ஏதேனும் ஒரு வகையில் பூண்டு சேர்க்கும் பழக்கம் பெரும்பாலோருக்கு உண்டு. இதற்குக் காரணம் அதன் அதீத மருத்துவக் குணமே. உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் பால் பெருகும். பெண்களுக்கு கருப்பையில் சேரும் கசடுகளை அகற்றும் தன்மையும் ரத்தக் குழாயில் தசைகளை வலுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆசைப்படுபவர்கள் தினமும் இரவு மூன்று பூண்டுகள் சாப்பிட்டால் போதும், நல்ல தூக்கம் கிடைக்கும்.