ஹெல்த் டிப்ஸ்
மூலிகைகள் மற்றும் வேதியல் பொருட்களையே மாத்திரைகளாக சாப்பிடுகிறோம். அதற்குப் பதிலாக கிச்சனையே மருத்துவமனையாக மாற்ற முடியும்.
பாலுணர்வுக்கு வெங்காயம்
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே மருத்துவத்தன்மை கொண்டது என்றாலும் சின்ன வெங்காயத்தையே மருத்துவத் தோழன் என்று அழைக்கிறார்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெயில் காலத்தில் வரும் கட்டிகள் மீது வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்துக்கு பாலுணர்வைத் தூண்டும் சக்தி உண்டு என்பதால் ஆண்கள் நிறையவே சாப்பிட்டு பலன் அடையலாம். ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை வெங்காயம் கரைக்கக்கூடியது என்பதால், இதனை இதயத்தின் நண்பனாக கருதலாம்.
வெள்ளைக்குப் பூவரசம் பூக்கள்
வீட்டு வாசலில் அழகான மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்களுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட இடத்தில் பூசினால் விரைவில் குணம் தெரியும். சொறி, சிரங்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பூவரசம் பூக்களை அரைத்துப் பூசிவர தோல் நோய்கள் குணமாகும். மூட்டு வீக்கம் மற்றும் வலிகளுக்கு நல்லெண்ணெய்யில் பூவரசம் பூவை காய்ச்சி பூசினால் விரைவில் குணம் தெரியும். வெள்ளைப்படுதல் ஏற்படும் பெண்களுக்கு பூவரசம் பட்டையை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தினால் பிரச்னை தீர்ந்துவிடும்.
நரம்புக்கு வல்லாரை கீரை
வல்லாரை கீரையை மிகச்சிறந்த மூலிகையாக நம் தமிழ் சித்தர்கள் கருதுகிறார்கள். இது மிகச்சிறந்த ரத்த விருத்தியாக அறியப்படுகிறது. வல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பதால், மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கிறது. வல்லாரையை பச்சையாக அல்லது பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர நரம்புகள் பலம்பெறும். வல்லாரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தசோகை நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். காச நோயாளிகளுக்கு வல்லாரை மிகச்சிறந்த மருந்தாகும். அத்துடன் கண் நரம்புகளுக்கும் வலிமையளிக்கும். மாலைக்கண் நோய் குணமாகும்.
பல்லுக்குச் செவ்வாழை
வாழைப் பழத்தில் ஏராளமான ரகங்கள் உள்ளன. சுவையிலும் மருத்துவத் தன்மையிலும் செவ்வாழைக்குத் தனிச்சிறப்புகள் உண்டு. குழந்தை இல்லாத தம்பதிகள், ஆளுக்கு ஒரு வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால் நல்ல பலன் தெரியும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. தினமும் சாப்பிட்டால் பார்வை தெளிவடையும். செவ்வாழையில் வைட்டமின் சி மற்றும் உயர்தர பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. ஈறு வீக்கம், பல்வலி போன்ற பல் வியாதிகளை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு உண்டு.
கால்சியத்துக்குக் கைக்குத்தல் அரிசி
பச்சரிசி, புழுங்கல் அரிசியை நிறையவே பயன்படுத்துகிறோம் என்றாலும் கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி சத்து கைக்குத்தல் அரிசியில் நிரம்பி இருக்கிறது. கைக்குத்தல் அரிசியில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைவது தடுக்கப்படும். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்கும் தன்மையும் கைக்குத்தல் அரிசிக்கு உண்டு. நார்ச்சத்து கைக்குத்தல் அரிசியில் அதிகம் இருப்பதால் செரிமானம் நல்லபடியாக நடக்கும். ஜீரண கோளாறுகள் நீங்கும்.