• Home
  • அரசியல்
  • காளியம்மாளைப் பார்த்து ஏன் பயப்படுகிறார் சீமான்..?

காளியம்மாளைப் பார்த்து ஏன் பயப்படுகிறார் சீமான்..?

Image

அம்பலப்படுத்தும் டாக்டர் இளவஞ்சி

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே செல்பவர்கள் தலைமையைக் குற்றம் சொல்லி, ஏதாவது காரணம் சொல்லித் திட்டுவது சகஜமான ஒன்று தான். ஆனால், இப்போது கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் டாக்டர் இளவஞ்சி கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் அணுகுண்டு ரகம்.

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை தலைவர் இளவஞ்சி நாம் தமிழர் கட்சியிலிருந்து பதவி விலகுவதற்கு சில முக்கியமான காரணங்களை முன்வைத்திருக்கிறார். அதாவது, சீமான் பெண்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொள்கிறார், கட்சிப் பெண்களை கேவலமாக பேசி நடந்து கொள்கிறார், மேலும் பெண்களை அவர் மதிக்கவில்லை என்று சீமானை கண்டித்து பதவி விலகியுள்ளார்.

இதையடுத்து மீடியாக்களிடம் பேசியிருக்கும் இளவஞ்சி, ‘’காளியம்மாளின் வளர்ச்சியைக் கண்டு சீமான் அச்சப்படுகிறார். பொதுவாக பெண்களுக்குத் தேர்தலில் சம பங்கு தரும் சீமான் கட்சிப் பதவிகளில் அப்படி எதுவும் தரவில்லை. அதையே நான் கேள்வி கேட்டேன். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை எனக்குக் கொடுங்கள் என்று கேட்கவில்லை. காளியம்மாள் போன்று கட்சிக்கு உழைத்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுங்கள் என்று தான் கேட்டேன்.

அதோடு என்னை வேட்பாளராக நிறுத்தினார் சீமான். நான் போட்டியிட்ட தொகுதியில் எதிர்க் கட்சி வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எனக்கு எதிராகவே வேலை பார்க்கிறார். சொந்தக் கட்சியினர் தோற்பதற்கு வேலை செய்யும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே’’ என்று பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறார்.

இதையடுத்து தம்பிகள் இளவஞ்சி மீது கடுமையாக பாய்ந்து வருகிறார்கள். ‘’கிட்டதட்ட 10 வருடங்களுக்கு மேலாக கட்சியில் பணியாற்றும் இளவஞ்சிக்கு வேறு கட்சிக்குச் செல்ல ஆசை வந்துவிட்டது. ஆகவே, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைக்கிறார்கள்’’ என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment