கருணையும் கொடூரமும் ஒன்று தான்
மரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவர் முகத்தில் நிறை வருத்தம் தெரிந்தது.
‘’எங்கள் வீட்டு பின்புற மரத்தில் நிறைய சிட்டுக் குருவிகள் வரும், அதற்கு தானியம் வைப்பதுண்டு. அப்படி சில சிட்டுக் குருவிகள் தானியம் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு அணில் வந்தது. அது, திடீரென ஒரு சிட்டுக்குருவியைப் பிடித்து தின்னத் தொடங்கிவிட்டது. அத்தனை குட்டியூண்டு குருவியை இரக்கமில்லாமல் தின்று விழுங்குகிறது. ரத்தம் சொட்டச் சொட்ட அந்த குருவியை அணில் தின்பதைப் பார்க்கும் போது, இயற்கை ஏன் இத்தனை கொடூரமாகவும் குரூரமாகவும் இருக்கிறது என்று தோன்றுகிறது…’’
‘’ரத்தம் சொட்டாமல் விழுங்கியிருக்க வேண்டும் என்கிறாயா..?’’
‘’இதையும் குத்தலாகக் கேட்காதீர்கள். அழகான புள்ளி மானை புலி கொடூரமாக கழுத்தில் கடித்துத் தின்னுகிறது. தண்ணீர் குடிக்கும் ஒரு கன்றுக்குட்டியை முதலை தண்ணீருக்குள் இழுத்துச்சென்று தின்கிறது. ஏன் இத்தனை கொடூரம். நீங்கள் கடவுளை மறுக்கிறீர்கள். ஆனால், இயற்கையை ஏற்கிறீர்கள். இத்தனை கொடூரமான இயற்கையை நாம் மதிக்கத்தான் வேண்டுமா?’’ கோபமாகக் கேட்டார் மகேந்திரன்.
‘’நீ மதித்தாலும் மதிக்காவிட்டாலும் இயற்கைக்கு எதுவும் நிகழப் போவதில்லை. ஒரு பூ அழகாக மலர்ந்து பூத்துக் குலுங்குவதை இயற்கையின் கருணை என்று நினைக்கிறாய். ஒரு எலியை பாம்பு விழுங்குவதை குரூரம் என்கிறாய். நீ மக்காச்சோளத்தைக் கடித்துத் தின்பதை கருணை என்கிறாய். அதையே விலங்குகள் செய்வது குரூரம் என்கிறாய், அப்படித்தானே…’’
‘’அப்படியில்லை, இத்தனை குரூரம் எதற்கு என்று தான் கேட்கிறேன்..’’
‘’உண்மையில் இயற்கைக்குக் கருணையும் இல்லை, குரூரமும் இல்லை. இயற்கை அதன் போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்கு பூமியில் வாழும் உயிரினங்களோ, பறவைகளோ, மனிதனோ ஏன் தண்ணீர், காற்று என எதுவுமே ஒரு பொருட்டல்ல. ஏனென்றால், இயற்கை தானே இயங்கிக்கொண்டு இருக்கிறது அவ்வளவுதான். ஒவ்வோர் உயிரும் அதனதன் பாதையில் உயிர் வாழ போராடுகின்றன. அதை குரூரம் என்று அழைத்தாலும் கருணை என்று அழைத்தாலும் செயல்கள் நடந்துகொண்டே இருக்கும். இதுவே இயற்கை என்று ஏற்றுக்கொண்டால், எல்லாம் இயல்பாகத் தெரியும்’’ என்றபடி அமைதியானார்.
அந்த மரத்தில் ஓடிய அணில் இப்போது மகேந்திரனுக்கு குரூரமாகத் தெரியவில்லை.