சுருக்கமான வரலாறு
பெரியாரைப் போலவே தைரியமாக தன்னுடைய கருத்துக்களை சொல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈவிகேஎஸ். இளங்கோவன் தன்னுடைய 75வது வயதில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
சோனியா காந்தி அரசியலில் நுழைந்த நேரத்தில் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். சோனியா காந்தியை அவமானப்படுத்துவதாக அவருடைய இத்தாலியப் பெயரான, “அண்டோனியோ மொய்னோ காந்தி” என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில், “கோமளவல்லி என்கிற அம்மு என்கிற ஜெயலலிதா” என கடுமையாக விமர்சித்து இளங்கோவன் அறிக்கை வெளியிட்டார்.
இப்படியொரு மரண அடியை ஜெயலலிதா சந்தித்ததே இல்லை எனலாம். இத்தாலி பெயரை விட கோமளவல்லி என்ற பெயர் விவாதம் தமிழகம் முழுக்க கொடி கட்டிப் பறந்தது. ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசினால் என்னமும் நடக்கலாம் என்பது தெரிந்தும் தைரியமாக எதிர்த்த ஆளுமை இளங்கோவன்.
சொல்லின் செல்வன் என்று அழைக்கப்படும் ஈவிகேஎஸ் சம்பத் – சுலோசனா தம்பதிக்கு 1948ல் ஈரோட்டில் மகனாகப் பிறந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவர் தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன். பி.ஏ.பொருளாதாரம் படித்த இளங்கோவன், இளம் வயதில் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சம்பத் தி.மு.க.விலிருந்து விலகியதால் திராவிடக் கட்சிகள் மீது இவருக்கு ஆர்வம் இல்லை.
அதேநேரம் சிவாஜி கணேசனை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர். 1977ல் சிவாஜியுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தார். சிவாஜியின் சிபாரிசில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸில் முதல்முறையாக எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. ஆனால் அரசியலுக்கு இளங்கோவனை முழுவீச்சில் இழுத்தது வாழப்பாடி ராமமூர்த்தி தான். இளங்கோவனின் அப்பா சம்பத் மீது வாழப்பாடிக்கு அபார மரியாதை இருந்தது. மரியாதை என்று சொல்வதைவிட பக்தி என்றே சொல்லலாம். அதனால் தான் தன் மகளுக்கு சம்பத்தம்மா என்று சம்பத்தின் பெயரை வைத்தார் வாழப்பாடி.
தலைவரின் மகன் என்கிற மரியாதையோடு இளங்கோவனை அரசியல் களத்தில் இறக்கி அழகுபார்த்தார் வாழப்பாடி. இளங்கோவனுக்கு அரசியல் முகவரி கிடைத்தது அவரது தாத்தா பெரியார் ஆலையப் போராட்ட பிரவேசம் நடத்திய வைக்கத்தில் தான். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சோனியா காந்தி வைக்கம் போயிருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இளங்கோவனுடன் சென்றிருந்தார். அப்போது சோனியாவிடம் பெரியார் பற்றியும், அவர் நடத்திய வைக்கம் போராட்டம் பற்றியும் ராமமூர்த்தி சொன்னதை கேட்டு சிலாகித்துப் போனாராம் சோனியா காந்தி. அப்போது அருகில் இருந்த இளங்கோவனை, இவர் தான் அந்த பெரியாரின் பேரன் என்றும் நம் கட்சியின் துடிப்பான இளைஞர் என சோனியாவிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். இதுதான் இளங்கோவனின் காங்கிரஸ் அரசியலின் பிள்ளையார்சுழி
இன்றுவரை டெல்லியில் சோனியா மற்றும் ராகுலிடம் தனி செல்வாக்குடன் இளங்கோவன் இருப்பதற்கு அவரின் உழைப்புடன் பெரியார் பேரன் என்கிற அடையாளமும் ஒரு முக்கிய காரணம். இளங்கோவன் உடல்நலனில் கவனம் செலுத்துவதில்லை என்பது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரின் ஆதங்கமாக இருந்தது. ஆனால் கட்சி பணிக்கே முன்னுரிமை கொடுத்துவந்த இளங்கோவன், உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸுக்காக தீவிரமாக உழைத்தார்.
அசைவ உணவுப் பிரியரான இளங்கோவன் எந்த கட்டுப்பாடும் இன்றி தனக்கு பிடித்த உணவுகளை சுவைப்பாராம். தான் சாப்பிடுவதை தான் தன்னுடன் சாப்பிடும் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்கிற எம்ஜிஆரின் கொள்கையை நீண்ட நாட்களாக கடைபிடித்து வந்தவர் இளங்கோவன். இவருக்கு திருமகன் ஈவேரா என்கிற மகனும் இருந்தார். அவரும் அரசியலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பால் மரணமடைந்தார். மகன் மரணத்திற்கு பின் சோகத்தில் மூழ்கியிருந்த இளங்கோவன் அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி பெயர் வரலட்சுமி. இந்த தம்பதிக்கு சஞ்சய் சம்பத் என்கிற மகனும் உள்ளார்.
அரசியலில் இவரது நீண்ட பயணத்தை கீழ்க்கண்ட பட்டியல் மூலம் அறிந்துகொள்ளலாம்.
- 1984-87–எம்.எல்.ஏ. (சத்தியமங்கலம் தொகுதி)
- 1998-2000 – பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
- 2000 – 2002 – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
- 2002 – 2003 – செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
- 2004 – மக்களவை உறுப்பினர் (கோபி தொகுதி)
- 2004 – 2009 – மத்திய இணையமைச்சர்
- 2015- 16 – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
இவை மட்டுமின்றி 2009-ம் ஆண்டு ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும், 2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் இழப்பு.