பெண்கள் ஏன் துறவி ஆவதில்லை..?

Image

முதுமை வழிகாட்டி

மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் சரியான வயதில் வானப்பிரஸ்தம் மேற்கொண்டிருந்தால், குருஷேத்திரப் போர் நடந்திருக்காது என்பார்கள். அண்ணன் தம்பிகளாக ஆளுக்கு கொஞ்சம் நிலத்தை பிரித்துக்கொண்டு தர்மனும் துரியோதனனும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பதவி சுகம், பாச சுமையினால் வாழ்நாள் முழுவதும் அரசனாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான் திருதராஷ்டிரன். காலம் முழுவதும் அரசனாக வாழமுடியும் என்று நம்பினான். அதனாலே பெற்ற அத்தனை பிள்ளைகள் கொல்லப்படுவதையும் கண்முன்னே பார்க்கும் துரதிர்ஷ்டத்திற்கு ஆளானான். அதனால் போதும் என்ற மனநிலை தோன்றியதும் வாழ்க்கையில் இருந்து விலகுவதே துறவு நிலை.

? போதும் என்ற மனநிறைவு எளிதில் கிடைப்பதில்லையே, என்ன செய்யவேண்டும்?

போதும் என்ற மனநிறைவு எப்போதும் கிடைக்காது. உருவாக்கவே வேண்டும். எத்தனை பணம் சேர்த்தாலும் எதிர்காலத்துக்குப் போதாது என்ற உண்மையை ஒவ்வொரு நபரும் உணரவேண்டும். ஆயிரம் கோடி சேர்த்துவைத்தாலும், அது காணாமல் போவதற்கு ஒரு நொடி போதும். அதனால் சேமிப்பை பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. சிறப்பாக வாழ்ந்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றினால், உடனே வழக்கமான வாழ்க்கை பாதையில் இருந்து வெளியேற வேண்டும்.

? வாழ்க்கை சக்கரத்தில் இருந்து வெளியேறி என்ன செய்யவேண்டும்?

எதுவும் செய்யவேண்டாம். வேடிக்கை பார்த்தால் போதும். எப்போதும் போல் இயங்க வேண்டும் அதேநேரம், உலகத்தோடு ஒட்டிக்கொண்டு இருக்க அவசியம் இல்லை. நீங்கள்  இல்லையென்றால் வீடு அல்லது அலுவலகம் ஸ்தம்பித்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை தூக்கிப்போடுங்கள்.  உன்னுடைய ஆலோசனை, அறிவுரை, வழிகாட்டுதல் இல்லாமலே உன்னுடைய இல்லம் சிறப்பாக நடக்கும் என்பதை கண் முன்னே வேடிக்கை பாருங்கள். அப்போது வாழ்க்கை புதிதாக தெரியும். புதிர்களுக்கு விடை கிடைக்கும்.

? சாமியாரைப் போன்று காவி உடுத்தி சந்நியாசியாக வேண்டாமா?

துறவி, சாமியார், சந்நியாசி என்று வேடம் போடத்தேவையில்லை. வீட்டிலேயே  துறவியாக வாழலாம். வாய்க்கு ருசியாக சாப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள். சாப்பாட்டில் குறை இருந்தாலும், குற்றம் சொல்லாமல் சாப்பிடப் பழகுங்கள். உணவு சாப்பிடும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டே வாருங்கள்.

கண் முன்னே பிள்ளைகள் தவறு செய்வது தெரிந்தாலும் சட்டை செய்யாமல் அமைதியாக இருங்கள். தவறுகள் மூலம் அவர்கள் நல்ல பாடம் படித்துக்கொள்வார்கள். அந்த அனுபவத்தைவிட நல்ல ஆசான் வேறு எதுவும் இல்லை. நாளை என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பட்டியல் போடாமல், இன்று இரவே செத்துப்போகலாம் என்ற நினைப்பில் தூங்குங்கள். நேரமாகிவிட்டது என்று பதறிப்போய் எழ வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல், யாரையும் சார்ந்து இராமல், பேச்சைக் குறைத்து வாழப்பழகுபவர் வீட்டுக்குள்ளே துறவியாகி இருக்க முடியும்.

? பெண்களும் துறவறம் மேற்கொள்ள வேண்டுமா?

திருமணம் முடிந்துவிட்டாலே, பெண் கிட்டத்தட்ட துறவியாகிவிடுகிறாள். தன்னைவிட கணவனுக்கு என்ன தேவை என்றுதான் பார்க்கிறார்கள். குழந்தை பெற்றதும் முழு துறவியாகிறாள். பிள்ளைக்காக வாழ்கிறாள். அவள் கடவுளிடம் கூட, தனக்காக எதையும் கேட்பதும் பெறுவதும் இல்லை. அதனால்தான் கடைசி காலத்தில் கிடைத்ததை குடித்துக்கொண்டு பெண்களால் நிம்மதியாக வாழக்கையைத் தள்ளமுடிகிறது. மனைவி இல்லாத கணவன் சீக்கிரம் மரணம் அடைவதற்கும், கணவன் இல்லாத மனைவி நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் அடிப்படை காரணம், பெண்ணின் துறவு மனப்பான்மைதான்.

? எந்த வயதில் மனதளவில் துறவு மேற்கொள்வது நல்லது?

ஐம்பதில் தயாராக வேண்டும். அறுபதுக்குப் பிறகு துறவியாக வாழத் தொடங்க வேண்டும். இந்த வயதில் உலகை வேடிக்கை பார்க்கும் குணம் வரவில்லை என்றால், அதிக துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

Leave a Comment