கடவுள் நம்பிக்கை
எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று கடவுள் கூறியதாகச் சொல்வார்கள். அப்படி எங்கேயாவது கடவுள் வந்திருக்கிறாரா என்று தேடிப் பார்த்தால் நிச்சயம் இருக்காது. கொலை நடக்கும் இடங்களில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை நடக்கும் இடங்களில் கடவுள் ஆஜராகி யாரையும் காப்பாற்றியதே இல்லை.
காய்ச்சல், தலைவலி, கொரானோ, ஹார்ட் அட்டாக், கேன்சர் என எந்த ஒரு நோய் வந்தாலும், ’கடவுள் காப்பாற்றுவார்’ என்ற நம்பிக்கையில் மக்கள் கோயிலுக்குச் சென்று முறையிடுகிறார்கள். வாழ்க்கையில் விரக்தி, தோல்வி, இழப்பு ஏற்படும்போதும் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள்.
அர்ச்சனை செய்து, காணிக்கை கொடுத்து கடவுளின் கருணையை பெற்றுவிட முயற்சிக்கிறார்கள். இன்னும் சிலர் மொட்டை போடுவது, காவடி தூக்குவது, தீச்சட்டி எடுப்பது என்று பல்வேறு நேர்த்திக்கடன் போடுகிறார்கள்.
விரதம் இருப்பது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது தங்கத்தேர் இழுப்பது, கோயிலைக் கண்டதும் செருப்பைக் கழட்டிவைத்து கன்னத்தில் போட்டுக் கொள்வது போன்ற எல்லா செயல்களுக்கும் காரணம், கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான்.
புதிதாக தொழில் தொடங்குவதற்கும், வேலை கிடைப்பதற்கும், படிப்பில் முன்னேறுவதற்கும் திருமணம் நடப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் கடவுளின் அருள் தேவை என்று நம்புகிறார்கள்.
இப்போது நேரடியாக விஷயத்துக்கு வரலாம்.
கடவுள் யாரை காப்பாற்றுவார்..? அப்படி இதுவரை எந்த மனிதரையாவது கடவுள் காப்பாற்றி இருக்கிறாரா..? சுமார் 10 லட்சம் வருடங்களுக்கு முன்னரே மனித இனம் தொடங்கியதாக கருதப்படும் நிலையில், கடவுளின் கருணையால் யாராவது ஒரே ஒருவராவது இன்று வரை உயிருடன் இருக்கிறாரா..?
நிச்சயமாக இல்லை.
ஆனால், ‘விபத்தில் இருந்து கடவுள் என்னை காப்பாறினார், நோயில் இருந்து காப்பாற்றினார்’ என்று பலர் அழுத்தமாகச் சொல்வதுண்டு. விபத்தில் இருந்து தப்புவது ஒரு வாய்ப்பு என்பது மட்டுமே உண்மை. ஏனென்றால், திடீரென பூகம்பம், சுனாமி போன்றவை வரும்போது ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் மடிகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் குறிப்பிட்ட பக்தர்களை எல்லாம் கடவுள் காப்பாற்றுவதே இல்லை.
அதேபோல், நோயில் இருந்து மனிதர்களை கொஞ்ச காலம் காப்பாற்றுவதும் உடலின் எதிர்ப்பு சக்தியும் மருத்துவத்தின் வளர்ச்சியுமே தவிர, கடவுள் அல்ல. நோய்களுக்கு காரணமாகத் திகழும் தீமை தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளைக் கண்டுபிடித்து, அவற்றை முறியடிக்கும் மாற்றுகளையும் கண்டுபிடித்து மனிதனின் வாழ்நாளை மருத்துவம் நீட்டித்து வருகிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாகவே, பெரியம்மை, தட்டம்மை, காலரா, இளம்பிள்ளை வாதம், ஒமிக்ரான் போன்றவற்றில் இருந்து மனிதகுலம் தப்பிப் பிழைத்துவருகிறது.
அதேநேரம், எந்த ஒரு மனிதரையும் மரணத்திடம் இருந்து மருத்துவ அறிவியலால் காப்பாற்றி வைக்க இயலவில்லை என்பதும் உண்மை. மாவீரன் அலெக்சாண்டர் தொடங்கி நம்மூர் ஜெயலலிதா வரையிலும் கோடி கோடியாக செல்வமும், வசதியும், செல்வாக்கும் இருந்தாலும், அவர்களும் இறந்தே போனார்கள்.
இவ்வளவு ஏன் கடவுளின் மனித அவதாரம் என்று கருதப்படும் ஆதிசங்கரர், ராமானுஜர், காஞ்சி சங்கராச்சாரியார், தேவனின் பிள்ளை என்று சொல்லப்படும் இயேசு, அவரது சீடர்கள், போப்புகள், இறையருள் பெற்ற முகமது நபி என அத்தனை மனிதர்களும் மரணித்துப் போனார்கள்.
இதுவே இயற்கையின் தனித்தன்மை. அதாவது, மனித இனம் தன்னைத்தானே ஆய்வு செய்து, தன்னுடைய இயல்பை மாற்றிக்கொண்டே இருக்கிறது. உயிர் தோன்றிய பரிணாம வளர்ச்சிக்குக் காரணமும் இந்த ஆய்வு மனப்பான்மையே. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒவ்வொரு உயிரும் போராடுகிறது. இந்த போராட்டத்துக்கு மருத்துவம் வலிமை செய்கிறது. இதற்கான சக்தியை மனிதனுக்கு இயற்கையே வழங்குகிறது.
இவ்வளவுதான் மனிதன். இவ்வளவுதான் இயற்கை. இதை தாண்டி வேறு எதுவும் கிடையாது. இதில் கடவுளின் பங்கு என்று எதுவும் இல்லை. கடவுள் எந்த ஒரு மனிதனையும் தனியே கவனிப்பதும் இல்லை, காப்பாற்றுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை.
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளவும், பிறரை ஏமாற்றவும் கண்டுபிடித்தது தான் மதம் மற்றும் கடவுள்.
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் மனிதன் என்பது ஒரு துகள் மட்டுமே. இத்தனை பெரிய சூரிய குடும்பம், அதனைவிட மிகப்பெரிதான ஏகப்பட்ட பிரபஞ்சங்கள் போன்றவைகளை எல்லாம் உருவாக்கியது யார், எதற்காக உருவாக்கப்பட்டது, என்ன நடக்கப் போகிறது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் அளவுக்கு இன்னமும் மனிதனின் அறிவியல் வளரவில்லை என்பதே உண்மை.
இத்தனை பெரிய பிரமாண்டத்தை தேடி அறிவது சாத்தியமோ… இல்லையோ அதை நோக்கிய நகர்வே மனிதனுக்கு முக்கியம்.
இந்த சூழலில், இவற்றை எல்லாம் கடவுளின் அம்சம், கடவுள் பார்த்துக்கொள்வார், கடவுள் காப்பாற்றுவார் என்று மூளையை சுருக்கிக் கொள்வது இயற்கைக்கு மனிதன் செய்யும் துரோகம். வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை.
ஆகவே, கடவுளை மறந்து இயற்கையைத் தேடுவோம். இயற்கையாக வாழ்வோம், இயற்கையோடு மறைவோம்.