• Home
  • உறவுகள்
  • உருகி உருகி காதலித்தவர்கள் ஏன் பிரிகிறார்கள்..?

உருகி உருகி காதலித்தவர்கள் ஏன் பிரிகிறார்கள்..?

Image

காதலை தோற்கடிக்கும் காரணங்கள்

’இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை’  என்ற எண்ணம்தான் உலகிலுள்ள அத்தனை காதலர்களுக்கும் இருக்கிறது. அப்படி உருகி உருகி காதல் செய்பவர்கள்தான் திடீரென பிரிகிறார்கள். திருமணம் முடித்தபிறகு டைவர்ஸ் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் ஆசிட் வீசவும், கொலையும் செய்கிறார்கள்.

உயிரினும் மேலாக கருதப்பட்ட காதல், எப்படி திடீரென சகிக்கவே முடியாத உறவாக மாறுகிறது? காதல் எப்படி உயிரைப் பறிக்கும்?  தற்கொலைக்கு எப்படி காரணமாகிறது? காதல் காரணமாக குடும்பமே விஷம் குடிக்கவும் செய்கிறது. ஜாதி மாறிய காதலால் ஒரு கிராமம் கலவரபூமியாக மாறுகிறது.

ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது? காதல் அத்தனை கொடூரமானதா..?

இல்லை. காதல் சந்தோஷமானது. தோல்விகளுக்கும் சிக்கல்களுக்கும் காரணம், காதல் பற்றிய மூடநம்பிக்கைதான். குருடன் யானையைப் பார்தது போல் காதலைத் தவறாகப் பார்ப்பவர்களே அவதிப்படுகிறார்கள். காதலைத் தோற்கடிக்கும் சில காரணங்களை பார்க்கலாம்.

ஒரு முறைதான் காதல் வரும்!

முதல் மழை, முதல் காதல், முதல் முத்தம் என்பது எல்லாமே கவிதை நயத்துக்காக சொல்லப்படுவதுதானே தவிர உண்மை இல்லை. வயிற்றில் உணவு இல்லாத நேரத்தில் எல்லாம் பசி எடுப்பது போலவே, மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்துசேரும் போதெல்லாம் காதல் வந்துகொண்டே இருக்கும்.

டீன் ஏஜ் தொடங்கி மரணம் வரையிலுமான எல்லா கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் காதல் வருவது இயல்புதான். ஆனால், குற்ற உணர்வு காரணமாக பலரும் மனதில் அரும்பிய காதலை வெளியே காட்டுவது இல்லை. குறிப்பாக ஒரு முறை காதலில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் மனதுக்குள் காதல் மலரும் போது தங்களைத் தாங்களே அற்பமாக எண்ணிக் கொள்கிறார்கள். தங்கள் முதல் காதலுக்குத் துரோகம் செய்துவிட்டதாகத் துடிக்கிறார்கள். புதிய காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் எதிர்காலத்தைத் தொலைத்து விடுகிறார்கள். காதல் மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும் என்ற உண்மை தெரிந்துவிட்டால், இவர்கள் குற்ற உணர்வின்றி புதிய வாழ்க்கையைத் தொடங்கமுடியும்.

காதலில் தோல்வி அடைந்த பலர் வேறு எவரையேனும் திருமணம் செய்யத்தான் செய்கிறார்கள். ஆனால் தங்கள் துணையின் மீது அன்பைப் பொழிவது இல்லை. தன்னுடைய துணையின் மீது பாசமும் காதலும் தோன்றினாலும் அதைச் சொன்னால், தன்னுடைய காதலுக்குச் செய்யும் அவமரியாதை என்று நினைக்கிறார்கள். அதனால் தோல்வி அடைந்த முதல் காதல்தான் முக்கியம் என்பது போல் புதிய வாழ்க்கையில் வாழ்வது போல் நடிக்கிறார்கள். நடித்து… நடித்து தங்கள் வாழ்க்கையை முழுவதுமாகத் தொலைத்து விடுகிறார்கள்.

காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமல்ல வெற்றி அடைந்தவர்களுக்கும் இன்னொரு நபர் மீது காதல் வரலாம். இப்படி வரும் காதலை உடனடியாக மனதுக்குள் புதைக்கத் தெரியவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு காதல் போதும் என்ற உறுதியுடன் இருக்கவேண்டும். காதல் கிடைக்கிறதே என்பதற்காக ஒரே நேரத்தில் இருவரைக் காதலிப்பதன் காரணமாக மூன்று பேரின் வாழ்க்கை பாழாகிறது. அதனால் காதல் வந்துகொண்டே இருக்கும்… ஒரு காதல் முறிந்துபோனதும் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள்.

முதல் பார்வையில் காதல் வரும்!

‘அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்’ என்பது இதிகாசக் காதலுக்கு மட்டும்தான் சரி. முதல் பார்வையில் மின்சாரம் பாய்வது, மனசுக்குள் மழை அடிப்பது போன்றவையும் காதலுக்கான அறிகுறி அல்ல. அதன் பெயர் பிரமிப்பு.

ஊட்டிக்கு சுற்றுலா போகும்போது பச்சைக் கலரில், நீலக் கலரில் ரோஜாப்பூவைப் பார்த்து மெய் மறந்து நிற்பீர்கள். அடுத்த கணம் அதை மறந்துவிட்டு தலையில் சூடிக்கொள்வதற்கு இயல்பான ஊட்டி ரோஸ் போதும் என்றுதான் நினைப்பீர்கள். அப்படித்தான் முதல் பார்வையில் மனதைக் கவர்ந்தவர் நிச்சயம் காதலுக்கு உகந்தவர் என்று சொல்லமுடியாது.

ஏனென்றால் ஒருவருக்கு மட்டும்தான் முதல் பார்வையில் மின்சாரம் பாய்ந்திருக்கும், மனசுக்குள் பூ மலர்ந்திருக்கும். எதிர்ப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதே தெரியாது. ஜொள் விட்டதைப் பார்த்து எரிச்சலோ, கோபமோ கூட வந்திருக்கலாம். அதனால் முதல் பார்வையில் பிடித்துப் போனவரைக் காதலிக்க வேண்டும் என்று அலையும் பலரும் தோற்றுத்தான் போகிறார்கள். முதல் பார்வையில் கண்ணுக்குத் தெரிவது அழகு, உடை, நடை மற்றும் பேச்சு போன்ற புறத் தோற்றம்தான். மனதை முதல் பார்வையில் யாராலும் படிக்க முடிவது இல்லை. காதல் மனசு சம்பந்தப்பட்டதே தவிர உடல் சார்ந்தது இல்லை.

திருமணம் போன்ற விழாக்களில் இது போன்ற நிகழ்வுகள் நிறையவே நிகழும். ஏனென்றால் வயசுப் பெண்கள் அம்சமாக அலங்காரம் செய்துகொண்டு சந்தோஷமாக பட்டாம் பூச்சியைப் போன்று சுற்றித் திரிவார்கள். அந்த சூழலில் பெண்ணைப் பார்க்கும் எந்த இளைஞனுக்கும் மனம் படபடவென அடிக்கத்தான் செய்யும். திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் ஏகப்பட்ட இளைஞர்களுக்கும் முதல் பார்வை சுர்ரென்றுதான் இருக்கும். இதை ஒரு ஈர்ப்பு, அனுபவம் என்று எடுத்துக்கொள்ளும் மனநிலை வேண்டும். அதனால் முதல் பார்வையில் இழுத்தவரைக் காதலித்தே தீரவேண்டும் என்று அலையாதீர்கள். ஏனென்றால் உங்களை இழுத்தது காம உணர்வாகவும் இருக்கலாம்.

காணாமலே காதல் செய்யலாம்!

மனித குலத்துக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம் என்று மறதியைச் சொல்லலாம். அதனால்தான் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர் மரணம் அடைந்தால் கூட, இரண்டு நாட்கள் அழுதுவிட்டு மூன்றாம் நாள் அவரது நினைப்பை மறந்து அடுத்த வேலையில் ஈடுபட முடிகிறது. எத்தனை பேருக்கு இன்னமும் தங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய நினைவு இருக்கிறது? எத்தனை பேருக்கு வீட்டை மாற்றிவிட்டுப் போன பக்கத்துவீட்டுக்காரருடன் தொடர்பு இருக்கிறது?

பெற்றோரை விட்டு ஒரு நாள் கூட பிரியாமல் இருந்த மகள், திருமணம் ஆன பிறகு பெற்றோரை நினைத்துக்கூட பார்க்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கமுடிவதற்குக் காரணமும் பார்க்காமல் இருப்பதுதான். இது, காதலுக்கும் பொருந்தவே செய்யும்.

செல்போன், இமெயில் போன்ற சாதனங்கள் உதவி புரியும் நிலையிலும் அடிக்கடி சந்திக்காத காதல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து காணாமல்தான் போகும். இந்த உண்மை புரியாமல், ‘மூணு மாசம்தான் பிராஜெக்ட்டுக்காக ஃபாரின் போயிட்டு வந்தேன். அதுக்குள்ள என்ன நடந்துச்சுன்னே தெரியலை. கண்டுக்கவே மாட்டேங்கிறா… போன் கூட வேண்டாவெறுப்பாத்தான் பேசுறா’ என்று சொல்வார்கள்.

‘நாங்க நேரில் சந்திக்கணும்னு அவசியமே இல்லை. எங்க காதல் தெய்வீகமானது. நாங்கள் பார்க்காமல் இருந்தாலும் காதலுடன்தான் இருக்கிறோம்’ என்று சொல்வது காதலை வளர்க்கும் வழி அல்ல. அது அழிவுப் பாதைதான். அதனால் காதலில் விழுந்தவர்கள் எந்த வகையிலாவது சந்திக்கவும் பேசவும் செய்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் காதல் குறைந்துகொண்டேதான் போகும். இது இயல்பு என்று புரியாதவர்கள்தான் சிக்கலை உருவாக்கிக் கொண்டு சீரழிந்து போகிறார்கள்.

காதல் சந்தோஷம் தரும்!

எதற்காக காதல் செய்கிறீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில் இதுதான். ‘அவளுடன்/அவருடன் வாழ்ந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும்’ என்பதுதான். இது எத்தனை பெரிய சுயநலம் என்பதை உணர்வதே இல்லை. அவர்கள் விரும்புபம் நபரும் இதே போன்ற எண்ணத்தில் இருந்தால் அந்தக் காதல் என்னவாகும்?

காதல் என்பது விட்டுக்கொடுத்தல். காதல் என்பது, தான் விரும்புபவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதல். காதல் என்பது, தன்னை விட தான் விரும்புபவர் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புதல். இந்த எண்ணத்தில் இருக்கும் இருவர் ஒன்று சேர்வதுதான் காதல். இந்த உண்மை தெரியாமல், தன்னுடைய நலனுக்காக காதல் செய்பவர் அனைவரும் தோற்றுத்தான் போகிறார்கள். தன்னுடைய சந்தோஷத்துக்காக காதல் செய்பவர்கள், தான் விரும்புபவர் சந்தோஷத்துக்காக எதுவும் செய்வதில்லை. இந்த சுயநல முகம் தெரியவரும் நேரத்தில் பெரும்பாலான காதல் முறிந்துபோகிறது. அதனால் சுயநலவாதிகளுக்கு காதல் தோல்வியைத்தான் பரிசாகக் கொடுக்கும்.

தம்பதியர்கள் காதலர்கள் அல்ல!

இந்த உலகில் நூற்றுக்கு எண்பது சதவிகித காதல் திருமணம் வரை வருவதே இல்லை. சுமார் 20 சதவிகித காதல் மட்டுமே திருமணத்தை எட்டிப் பிடிக்கிறது. அப்படி நடந்த திருமணங்களிலும் சுமார் 10 சதவிகிதம் வரை தோல்வி அடைகிறது. திருமணத்துக்குப் பிறகு, தான் விரும்பியவரைக் காதலியாக அல்லது காதலனாக பார்ப்பதுதான், தோல்விக்கு முக்கியக் காரணமாகிறது.

ஏனென்றால் காதல் பொறுப்புகள் இல்லாதது. பொருளாதார நிர்ப்பந்தங்கள் தராதது. நேரம், காலம் என்ற கட்டுப்பாட்டுக்குள் சிக்காதது. ஆனால் கணவன், மனைவி உறவுக்கு என்று சில விதிகள் இருக்கின்றன. அதனால் திருமணத்துக்குப் பிறகு இருவரும் கணவன், மனைவி என்ற வேடத்திற்குப் பொருத்தமாக மாறவேண்டும். பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, குழந்தை வளர்ப்பது, பதவியில் உயர்வது என்ற சமூக காரணங்களுக்காக வாழ வேண்டும். இந்த தம்பதி வேடத்திற்குப் பொருத்தமாக தங்களை மாற்றிக்கொள்ளும் காதலர்களே வாழ்வில் வெற்றி அடைய முடியும். திருமணத்துக்குப் பிறகும் காதலில் கிடைத்த பொறுப்பற்ற இன்பத்தை எதிர்பார்க்கும் போது ஏமாற்றமும், வேதனையும், வலியுமே கிடைக்கும்.

ஆதலினால் காதல் செய்வீர்… கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன்!

Leave a Comment