நினைவு நாள் சிந்தனைகள்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். பெரியார் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கடவுள் மறுப்புக் கொள்கையே. அதனை ஏன் விடாப்பிடியாகப் பெரியார் கையில் எடுத்தார் என்பதை அறிந்துகொள்வோம்.
கடவுள் மறுப்பை துணிந்து வெளிப்படுத்திய முதல் உலகத் தலைவர் பகுத்தறிவாளர் பெரியார். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று வெளிப்படையாக அறிவித்த தலைவர் பெரியார்.
ஏன் இந்த கொள்கையில் பெரியார் அதிக ஆர்வமாக இருந்தார்..?
பல சமுதாயச் சீர்கேடுகளுக்கு சாஸ்திரங்களும் புராணங்களும் காரணம். அவற்றுக்கு ஆணிவேர் கடவுள் நம்பிக்கை என்பதால் பெரியார் கடவுளை மறுத்தார். கடவுளை எவரும் காண முடியாது, உணரவும் முடியாது என்கிறார்கள் கடவுளை நம்புகிறவர்கள் உருவமே இல்லாத கடவுளை ஆதிமனிதன் நம்பத் துவங்கினான். இந்த உலகை இயக்கும் சக்தி கடவுள் என்று ஆன்மீக வாதிகள் நம்புவதால் தான். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார்.
கடவுளின் பல்வேறு அவதாரங்களை விவரித்து புராணக் கட்டுக்கதைகளை ஆன்மீகவாதிகள் புனைந்து அவற்றை பரப்பியதாலும் சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பிதற்றியதாலும் அவர்களை கண்டிக்கும் வகையில் அயோக்கியர்கள் என்று அவர்களைக் குறிப்பிட்டுள்ளார் அவர். பகுத்தறிவின்றி நடந்து கொள்பவன் ஒரு காட்டுமிராண்டி என்றே நம்பினார் பெரியார். ஏன்? எப்படி? என்றெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல் கண்மூடித்தனமாக கடவுளை நம்பி வரும் அறிவிலிகளை காட்டுமிராண்டிகள் என்று அவர் குறிப்பிட்ட அதுவே காரணம். நாத்திகர்கள் ஆகாமல் ஜாதிக்கொடுமையை ஒழிக்க முடியாது என்று பல தொண்டர்கள் இன்னும் நம்புகிறார்கள்.