சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க….
நமது தமிழக அரசியல் தலைவர்களுக்கு எல்லா விஷயங்களும் அத்துப்படி. அதனால், மாடு மட்டும் ஏன் அம்மா என்று கத்துகிறது என்ற அறிவுபூர்வமான சந்தேகத்தை நமது அரசியல் தலைவர்களிடம் கேட்டோம்.
அப்புறமென்ன…? அவங்க பதிலைக் கேட்டு சிரிங்க… சிரிங்க. சிரிச்சுக்கிட்டே இருங்க.
அண்ணாமலை ;
நான் சொல்றதை நல்லா குறிச்சு வைச்சுக்கோங்கண்ணா… இதுவரைக்கும் மாடு எப்படி வேணா கத்தியிருக்கலாம். ஆனா, 2026க்குப் பிறகு மோடின்னுதான் கத்தும். திராவிட ஆட்சி பத்தி மாட்டுக்கு நல்லா தெரிஞ்சுபோச்சுண்ணா. அது ரிசல்ட்டுல தெரியும். அப்படி நடக்கலைன்னா, நான் பல்லு தேய்க்கிறதை விட்றேண்ணா…
எடப்பாடி பழனிசாமி :
புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு இலவச மாடு கொடுத்த பிறகு தான் எல்லா மாடுகளும் அம்மான்னு கத்த தொடங்கிச்சு. நான் ஒரு விவசாயிங்கிறதால எனக்கு இதெல்லாம் நல்லா தெரியும். அதுக்கு முன்ன மாடு எல்லாம் ஊமையாத் தாங்க இருந்திச்சு. ஸ்டாலினுக்கு இந்த உண்மை எல்லாம் எங்கே தெரியப்போகுது..?
சீமான் :
நீ கேட்டியா..? எந்த மாடாவது அம்மான்னு கத்துனதை நீ கேட்டியா.? நான் சொல்றேன். எங்க வீட்டு மாடு அப்பான்னு தான் கத்துது. இதுக்கு என்ன சொல்லுவே… பெரியார் என்ன பேசுனாருங்கிற நாட்டுக்குத் தேவையான விஷயத்தை எல்லாம் விட்டுட்டு இதைப் பத்தி கேட்குறதுல இருந்தே நீ யாருன்னு தெரியுது. சொல்லு, நீ எந்த பத்திரிகைன்னு சொல்லு…
பிரேமலதா ;
ஒரு மாடாவது கேப்டன்னு கத்துச்சின்னா அதை நாம பாராட்டலாம். ஆனா, எல்லா மாடும் எதுக்கு அம்மான்னு கத்தணும்..? இதை நாங்க சும்மா விட மாட்டோம்.
விஜய் :
2026 தேர்தலுக்குத் தான் நாங்க வர்றோம்னு சொல்லியாச்சு. அதுவரைக்கும் மாடு எப்படி கத்துதுங்கிறது முக்கியமில்ல, அதுக்குப் பிறகு எப்படி கத்தப் போகுதுங்கிறது தான் முக்கியம். நீங்க மாடு மட்டும் தான கேட்குறீங்க… நான் எல்லா மிருகங்களையும் புதுசா கத்த வைப்போம். ரெடியா..?
டாக்டர் ராமதாஸ் :
மாட்டுக்கு மாடுன்னு பேர் வைக்கச்சொல்லி வன்னியர் சங்கம் தான் முதன் முதலாக போராட்டம் நடத்தியது. ஆனா, அதுக்கு முன்னாடியே அந்த பேர் இருந்திச்சுன்னு பச்சைப் பொய் சொல்றாங்க. இந்த விஷயத்துல அன்புமணியை நம்பாதீங்க… உங்களுக்கு உழைக்கிறதுக்கு முகுந்தன் தான் சரியா ஆளு. மாற்றம் முன்னேற்றம்னு ஏமாந்துபோகாதீங்க.
மு.க.ஸ்டாலின் :
மாணவிகள் எல்லாரும் என்னை அப்பா, அப்பான்னு கூப்பிடுறதைக் கேட்க சந்தோஷமா இருக்குது. அதேபோல மாடும் என்னை அப்பான்னு கூப்பிடணும்னு ஒரு தந்தையா நான் ஆசைப்படுறேன். அதனால், கலைஞர் பெயரில் மாட்டுக்கு பாடம் சொல்லித்தரும் திட்டம் ஒன்று விரைவில் தொடங்கப் போறோம்.