வாரிசுகளால் ஏன் ஜெயிக்க முடிவதில்லை..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : அரசியல், கலைத்துறை, தொழில் போன்றவற்றில் வாரிசுகள் பெரும்பாலும் ஜொலிப்பதில்லை ஏன்..?

  • டி.சங்கரபாண்டியன், சாத்தூர்.

ஞானகுரு :

முதல் தலைமுறையிடம் இருக்கும் வெற்றியைத் தேடும் வேகமும், வெறியும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இருப்பதில்லை. சச்சின் தெண்டுல்கரின் ஸ்டைலான ஆட்டத்தை அவரது மகனிடம் தேடும்போது, அந்த எதிர்பார்ப்பே பெரிய தடைக்கல்லாக மாறிவிடுகிறது. ஆனால், முகேஷ் அம்பானி, ஸ்டாலின், சூர்யா போன்ற விதிவிலக்குகள் எல்லா துறைகளிலும் உண்டு.

கேள்வி : தெனாலிராமன், பீர்பால் இவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்… ஏன்..?

  • சி.காயத்ரி, காந்திநகர்.

ஞானகுரு :

தெனாலிராமன் கிருஷ்ண தேவராயரின் அரசவை விகடகவி. பீர்பால் அக்பரின் அரசவையில் அமைச்சர். இரண்டு பேரும் கசப்பு மருந்தை நகைச்சுவை எனும் இனிப்பில் கலந்து கொடுத்தவர்கள். லட்டு பிடிக்கும் என்றால் பால்கோவா பிடிக்காது என்றாகிவிடும். இருவரையும் ரசிப்பதில் தவறு இல்லையே.

கேள்வி : ஞானகுருவின் சில பதில்கள் நெருடல்களாக இருக்கிறதே..?

  • பி.வசுந்திரா தேவி, சூலக்கரை.

ஞானகுரு :

ஜோதிடர்கள், சாமியார்கள், அதிகாரிகள், முதலாளிகள் ஆகியோரிடமிருந்து. தங்களுக்கு விருப்பமான பதிலை பெறவே மக்கள் விரும்புகிறார்கள். தங்கள் எண்ணத்திற்கு மாறான பதில் கிடைக்கும்போது, அதனை ஏற்பதற்கு தயங்குகிறார்கள். யார் என்ன கருத்து கூறினாலும், அதை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. எது உண்மை, எது சரி என்றே பார்க்க வேண்டும். அதேநேரம்,  இன்னொரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகில் எல்லா மனிதரையும் திருப்தி படுத்தும் ஒரு பதிலை கடவுளாலும் சொல்ல முடியாது. ஞானகுரு சொல்வது எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஏனென்றால் ஒருவருக்கு சரி எனப்படுவது மற்றவருக்கு தவறு. சைவம் சாப்பிடுபவருக்கு கோழியை கொன்பது உயிர்க்கொலை, கொசுவை கொல்வது நியாயம். அசைவம் சாப்பிடுபவருக்கு மானும், மாடும் உணவுப் பொருள், மனிதனைக் கொல்வது மட்டுமே அநியாயம். இதில், எது சரி என்று தீர்மானிப்பது யார்..?

Leave a Comment