ஆசிரியர் பக்கம்

உறவு, நட்பு வட்டத்தில் நிறைய பேர் இருந்தாலும், அவர்களில் முன்கோபிகள், பொறாமைக்காரர்கள், மதியாதவர்களை யாரும் விரும்புவதில்லை. அதேநேரம், ஒரு சிலர் மட்டும் எல்லோராலும் விரும்பப்படும் நபராக இருப்பார்கள்.
அதெப்படி சாத்தியம்..? எல்லோரும் விரும்பும் நபராக ஒருவர் எப்படி இருக்க முடியும்?
அவருடைய நடவடிக்கையை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உண்மையை கண்டுபிடித்து விடலாம். ஆம், அவர் சின்னச்சின்ன விஷயங்களுக்கு சண்டை போடுபவராக இருக்க மாட்டார். சிறிய விஷயங்களை தேடுபவராக இருக்க மாட்டார். சின்னச்சின்ன விஷயங்களை பெரிதாக்க மாட்டார்.
இது தான் ரகசியம். ஏனென்றால், சின்ன விஷயங்களே மிகப்பெரிய தாக்கங்களை மனிதர்களிடம் உண்டாக்குகின்றன. சின்னச்சின்ன விஷயங்களுக்காகவே பெரிய பெரிய சண்டைகள் நடக்கின்றன. சின்ன கருத்துவேறுபாடு காரணமாகவே நிறைய பிரிவுகள் நிகழ்கின்றன. ஒரு வார்த்தை தவறாகப் பேசியதால் நின்று போன திருமணங்கள் உண்டு. மரியாதை கொடுக்கவில்லை என்பதற்காக முறிந்துபோன உறவுகள் உண்டு.
உண்மையில் அவமானம், மதிப்பு, மரியாதை என்பதற்கெல்லாம் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் கிடையாது. ஒருவர் பேசுவது பிடிக்கவில்லை என்றால் சிரித்தபடி நகரலாமே தவிர சண்டை போடவேண்டிய அவசியம் இல்லை. புரிந்துகொள்ளாத மனிதர்களுடன் மல்லுக்கட்டுவதால் இழப்பு தான் அதிகமாக இருக்கும். ஆகவே, எந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவும் சண்டை போடாதீர்கள்.
அப்படியென்றால் சின்ன விஷயம் என்றால் எதுவென எப்படி முடிவு செய்வது..?
உயிருக்கு ஆபத்து தருவது தவிர, மற்ற எல்லா விஷயமும் சின்ன விஷயமே. எனவே, உங்கள் வாழ்க்கையை மட்டும் பாருங்கள். பிறரது பேச்சு, மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியை இழந்துவிடாதீர்கள்.
எல்லா விஷயத்தையும் சின்னதாகவே பாருங்கள். அதுவே, மகிழ்ச்சி.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
ஞானகுரு கவுன்சிலிங், 9840903586