ராகுலிடம் பேசச்சொல்லும் திருமாவளவன்
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்வதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நடத்துகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்தால் போதும் என்று திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், ‘’கடந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரில் பாதியைக்கூட கர்நாடகம் அளிக்கவில்லை. இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரும் அளவுக்குக் கர்நாடக அணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தண்ணீர் தர வாய்ப்பு இல்லை என்று கூறுவது கர்நாடக அரசின் சுயநலம்சார்ந்த பிடிவாதப் போக்கையே காட்டுகிறது.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவர்களுக்குத் தற்காலிகமாக விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும்.
இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை தோழமையோடு சுட்டிக் காட்டுகிறோம்.
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் புறக்கணிக்கும் விதமாகவும், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதிக்காமலும் நடந்து கொள்வது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழலில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உடனடியாக காவிரி நதிநீர் பிரச்சினையில் தலையிட்டு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அளித்த உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்த வேண்டும். கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காங்கிரஸ் தலைமை இதில் கவனம் செலுத்த வேண்டுமென இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்கிற முறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்
சந்தடி சாக்கில் ராகுல் காந்தியின் தலையில் பொறுப்பை சுமத்தியிருப்பதைக் கண்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண் சிவக்கிறார்கள். அந்தந்த மாநிலத்துடன் மட்டுமே பேச வேண்டுமே தவிர, காங்கிரஸ் தலைமையுடன் பேசச்சொல்வது சிண்டு முடியும் வேலை என்கிறார்கள்.