மனமே மந்திரம்
ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்கள் யார் தெரியுமா..?
இனி, வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற முடிவுக்கு வருபவர்கள். எஞ்சிய வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஓய்வூதியமாக அல்லது ஏதேனும் சேமிப்பின் மூலம் பெறுவதாக இருக்கலாம். பிள்ளை அல்லது வேறு யாரோ ஒருவர், எதிர் காலத்துக்கு பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கலாம். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால், பொருளாதார பிரச்னை இல்லாத எதிர்காலம். அப்படியொரு வாழ்க்கை கிடைப்பது வரம்.
ஏனென்றால், வாழ்வின் கடைசி நொடி வரையிலும் உழைத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில்தான் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு தேவை இல்லாத நிலை ஏற்படுகிறது என்றால், அதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
ஆனால், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், போதிய அளவுக்குப் பணம் சேமித்து வைத்த பிறகும், எதிர்காலத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலர், பணத் தேவை இல்லை என்றாலும் பிஸியாக இருக்க வேண்டும் என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் ஏதேனும் வேலையின் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
நல்லபடியாக முதுமையை, எஞ்சிய காலத்தை எப்படி கழிப்பது..?
எஞ்சிய காலத்தை, தங்கள் விருப்பப்படி வாழவேண்டும் என்ற பொறுப்பை, கடமையை ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதான், மகிழ்ச்சி. நிகழ்காலம் மட்டுமல்ல முதுமை சிறப்பாக நகரவும் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது நீங்கள்தான்.
இந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் ஆசை மனதில் ஒட்டியிருக்கிறதோ, அவற்றை எல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம். செடி வளர்த்தல், சினிமா, சுற்றுலா, கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், இசை என அனைத்து ரசனைகளையும் முயற்சி செய்யலாம்.
இதுவரை பார்க்க முடியாத இடங்களைப் பாருங்கள். விரும்பிய புத்தகங்களைப் படியுங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு நேரத்துக்கு தேவையான அளவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிடுங்கள்.
அவ்வப்போது தண்ணீர் அருந்துங்கள். எட்டுமணி நேரம் தூங்குங்கள். பழைய நண்பர்கள், உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள், இதில் அவர்கள் பேசுவதேயில்லை, நாமே பேசுகிறோம் என்று ஈகோ பார்க்க வேண்டாம். நினைத்த நேரத்தில் தூங்குங்கள், நினைத்த நேரம் எழுந்தரியுங்கள். ஆனால், போதுமான அளவுக்கு நடைப் பயிற்சி செய்யுங்கள். வாய்விட்டுச் சிரியுங்கள்.
கணவர், மனைவி, உறவுகளுக்கு அன்றாட வேலைகளில் முடிந்த வரை உதவிடுங்கள். மிக மிக நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும் துக்கங்களையும் பகிருங்கள்.
உங்கள் வயதை, அனுபவத்தை காரணம் காட்டி யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். கேட்காமல் சொல்லப்படும் ஆலோசனை எட்டிக்காயாக கசக்கும்.
பிள்ளையோ அல்லது உறவுகளோ தவறான வழியில் செல்வதாகத் தெரிந்தால், மென்மையாக சுட்டிக் காட்டுங்கள். அதனை ஏற்கவில்லை என்றால் கொஞ்சமும் கவலை வேண்டாம். ஏனென்றால், சரியான பாடத்தை அவர்கள் கற்றுக்கொள்ளலாம். இன்னொரு விதமாக சொல்வது என்றால், நீங்கள் நினைப்பது தவறாகவும், அவர்கள் செல்லும் பாதை சரியாகவும் இருக்கலாம். எனவே, எதையும் வலியுறுத்த வேண்டாம்.
மருத்துவப் பரிசோதனைகளை சரியான காலங்களில் செய்யுங்கள். நேரத்துக்கு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகளுக்கு முடிந்த வரையிலும் இன்சூரன்ஸ் பயன்படுத்துங்கள்.
டாய்லெட் கதவுகளைப் பூட்டிக் கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு கதவைத் திறக்காதீர்கள்.
யார் அழைத்தாலும் குடும்ப விழாக்களில் குதூகலத்துடன் பங்கெடுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிப்பதாகவே சொல்லுங்கள். உங்கள் உடலில், மனதில் இருக்கும் சின்னச்சின்ன வருத்தங்களை, சோகங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனதை மகிழ்ச்சிக்கு மட்டும் திறந்து வையுங்கள், மகிழ்ச்சியை மட்டுமே எண்ணுங்கள்.
மகிழ்ச்சியான ஓய்வு காலத்தை எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுயநலத்திற்காக இழக்காதீர்கள்.
வாழ்க்கை இனியது. முதுமை வாழ்க்கை அதனினும் இனியது. எப்போது மரணம் வந்தாலும் கவலையில்லை, நன்றாக வாழ்க்கையை அனுபவித்துவருகிறேன் என்ற சிந்தனையுடன் எழுந்தரியுங்கள். மகிழ்ச்சியான எண்ணங்களை, பழைய நினைவுகளை நினைத்தபடி தூங்குங்கள். எழும்போது, இன்றைய தினம் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுங்கள்.
நோய், வருத்தம் போன்றவைகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து பாருங்கள். இனியெல்லாம் மகிழ்ச்சியே.
.