யார் அழைப்பது, யார் அழைப்பது, யார் குரல் இது..?

Image

விசித்திர மன நோய் கவுன்சிலிங்

அறையில் தனியே படித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் யாரோ திடீரென பெயர் சொல்லி கூப்பிடுவது போல் தோன்றும். திரும்பிப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். அதேபோன்று பிஸியான தெருக்களில் போகும்போதும், தூக்கத்தின் போதும் யாரோ அழைப்பது போலவே இருக்கும்.

இந்த அழைப்புகளை கண்டுகொள்ள முடியாமல் நகர்ந்தால், உங்கள் மனது நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதைவிட்டு, யார் அழைத்தது, எங்கே வரச்சொன்னார்கள் என்று குரலை பின் தொடர்பவர்கள் உண்டு. அந்த நிலைதான், டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox)  எனப்படும் மனநல பிரச்னை.

அறிகுறிகள் :

பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கும்போது, இப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் வருவதாகத் தெரியவந்துள்ளது.

பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர்கள் நடந்துகொள்வார்கள்.  தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தெளிவான ஆதாரம் இல்லாமல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டால், பேச்சைத் துண்டித்துக் கொள்வார்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன்னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன்னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்படிப் பேச்சு இருக்கும்.

ஒருசிலருக்கு, ‘நீ செத்துப் போய்விடு. இந்த உலகத்தில் நீ இருக்காதே. செத்துப்போ’ என்று அடிக்கடி குரல் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர்வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.

அதிகப்படியாக பொய் சொல்வதும் இந்த நோயின் அறிகுறிதான். குறிப்பாக, எங்களுக்கு ஒரு பெரிய அரண்மனை இருந்தது, அதை உறவினர்கள் அபகரித்துக்கொண்டார்கள். கடவுளை நேரில் பார்த்தேன். திடீரென வீட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது, அதை கையால் பிடித்து கொன்றுவிட்டேன் என்பதுபோல் நம்ப முடியாத ஒன்றை, நம்பக்கூடியதாகச் சொல்வார்கள்.


இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருவரிடத்தில் காணப்பட்டால், அவரை டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம். இது ஒருவகையில் மனச்சிதைவு நோயை ஒட்டியதுதான். என்றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந்நோய்தான் என்ற முடிவுக்கு வரமுடியாது.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விடமுடியும். அதற்கு குடும்பத்தினர் ஒற்றுமை, அன்பு, அக்கறை அதிகம் வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடலளவில் நல்ல உடற்பயிற்சி போன்றவையும் அவசியம்.

அடிக்கடி குரல் கேட்கிறது என்பவர்களை கண்டிப்பாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறவேண்டும். இதுதவிர, அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

  • மூன்று நேரம் நல்ல ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கவும் இவர்களுக்குக் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்கவேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கியம். நடைப்பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக அமையும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.
  • பாதிக்கப்பட்ட நபர் எந்த நேரமும் சந்தோஷமான மூடில் இருக்கும்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவான பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத்திகள்.
  • இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா _ 3 கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கலந்து நல்ல மூட் உருவாக உதவும்.
  • இந்த மனநிலை பாதிப்பில் இருப்பவர்கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவது அவசியம்.
  • இந்த பிரச்னையில் பாதிக்கப்பட்டவரை னியறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மாவோ, தோழியோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங்கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின்தொடர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கிவிடாதீர்கள்.
  • புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக்கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கும் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்தனைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

இந்த நபர்களுக்குப் போதுமான அளவுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். குரல் கேட்பது சகஜம்தான், அதை பின் தொடரவேண்டிய அவசியம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிவர வேண்டும்.

Leave a Comment