ஒப்பீடு என்பதே தோல்வி
நான்காம் வகுப்பு படிக்கும் மகேந்திரன் நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண் வாங்கிக்கொண்டு வந்ததும், அந்த குடும்பமே ஆனந்தப்பட்டது. யாரும் சொல்லிக்கொடுக்காமல் அவனாகவே இத்தனை சிறப்பாக படிக்கிறானே என்று சந்தோஷப்பட்டனர். சாக்லேட் கொடுத்து பாராட்டினார்கள்.
அந்த நேரத்தில் அவன் வகுப்பில் படிக்கும் பக்கத்துவீட்டுப் பையன் ராகவன் வந்தான். அவனிடம், ‘நீ எத்தனை மதிப்பெண்” என்று குடும்பம் கேட்டது.
அந்த பையன், ‘94’ என்று சொன்னான். அவ்வளவுதான். அதுவரை, அந்த குடும்பத்திடம் இருந்த ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோய்விட்டது. அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்த 90 மதிப்பெண் இப்போது துக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
இப்படித்தான் மனிதர்கள் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயத்தைக்கூட, பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து துன்பமாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே ஒப்பீடு என்பது ஒருபோதும் தேவையில்லாத செயல்.
சிலரோடு ஒப்பிடும்போது வெற்றியடைந்தது போலவும், சிலருடன் ஒப்பிடும்போது தோல்வி அடைந்தது போலவும் இருக்கும். இந்த ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை ஒழித்துவிட்டால், மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
செஸ் போர்டில் ராஜா, ராணி, சிப்பாய், பிஷப், யானை, குதிரை என்று பல்வேறு காய்கள் உண்டு. இந்த விளையாட்டில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான ரோல் இருக்கும். ராணிக்கு தான் அதிக பவர். ஏனென்றால், அதனை எந்த பக்கம் வேண்டுமானாலும் நகர்த்தலாம்.
சிப்பாய்களின் வேலை கவசம் போன்று சிம்பிளானது. யாரையும் உள்ளே வரவிடாமல் பாதுக்காப்பதும், பக்கத்தில் வருபவர்களை வெட்டி வீழ்த்தவும் மட்டுமே முடியும் அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் தாண்டிச் செல்ல முடியாது. அதனுடைய பலம் அவ்வளவுதான்.
மந்திரி, குதிரை, கோட்டை என்று ஒவ்வொரு சதுரங்க காய்க்கும் ஒரு பவர் இருக்கும். ஆனால் இங்கு எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே ஒருவர் இருப்பார். நடக்கும் விளையாட்டை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பார். அப்படி சும்மா இருக்கும் ஒருவர்தான் ராஜா.
ஆனால், சதுரங்கத்தில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, வேறு எந்த காய்கள் இல்லையென்றாலும் விளையாட்டு நடந்துகொண்டே இருக்கும். அந்த ராஜா இல்லையென்றால் விளையாட்டே கிடையாது.
இப்போது சொலுங்கள், சதுரங்கத்தில் யார் பவர்ஃபுல்..? ராஜாவா.. ராணியா..?
ராஜாவை கை காட்ட முடியாது. ஏனென்றால் ராஜாவால் வேறு யாரையும் காப்பாற்றவோ, களத்தில் இறங்கி மிரட்டவோ முடியாது. ராணியா, ராஜாவா என்று வரும்போது ராணியை பலி கொடுக்க யாரும் தயங்குவதில்லை. ஆகவே, இந்த விளையாட்டில் எல்லோருமே ஒரு விதத்தில் பலவீனமானவர்கள், அதேபோல் எல்லோருமே பலமானவர்களும்தான்.
ஆம், அனைத்து கட்டத்தையும் தாண்டிச் செல்லும் சிப்பாய்க்கு ராணியைப் போன்ற பலம் கிடைத்துவிடும். ஆகவே, எல்லா காய்களும் பலமானவையே.
ஆகவே, நீங்கள் என்ன காய் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கான வேலை என்னவென்று, உங்கள் ரோலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உங்கள் ஒருவரால் முழு விளையாட்டையும் தீர்மானித்துவிட முடியாது.
பக்கத்தில் இருந்த சிப்பாய் தவறு செய்துவிட்டான் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை, ஏனென்றால் அது அவனுடைய ரோல். அவன் விளையாட்டை நீங்கள் விளையாட முடியாது.
குடும்பம், அலுவகம், உறவு என எல்லாமே ஒரு செஸ் போர்டுதான். அதில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரோல் உண்டு. குதிரையைப் போன்ற சக்தி இல்லையே என்று கோட்டை கவலைப்படுவதால் மட்டும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. எனவே, உங்கள் ரோல் எதுவென அறிந்து, அதில் மட்டும் கவனம் செலுத்துவது போதுமானது.
உங்கள் பலம் என்னவென்றும் வாழ்க்கை எனும் விளையாட்டில் உங்கள் ரோல் என்னவென்றும் தெரிந்துகொண்டால் போதும். அதன்பிறகு பிறருடன் ஒப்பிடும் எண்ணம் வரவே வராது.
உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா.