
ஞானகுரு அத்தியாயம் – 4
’’சாமி நீங்க… ஸ்ரீலஸ்ரீ விஜயாலானந்தா சுவாமிகள்தானே?’’ குரல் வந்த திசையில் பார்வையைத் திருப்பினேன். குரலுக்குச் சொந்தக்காரர் பவ்யம் காட்டி நின்றார். அவரது போலி பணிவையும் தோரணையையும் பார்த்தால் அரசு அதிகாரி போல இருந்தது.
’’அந்த முட்டாள் நான் இல்லை… ’’ என்றபடி மேலும் நடக்கத் தொடங்கினேன். என் முன்னே வழி மறைத்து நின்றுகொண்டு, ‘‘சாமி… எனக்குக் கொஞ்சம் ஞான வார்த்தைகள் அருளணும்…’’ என்றார்.
சோம பானம் பருகியதன் உற்சாகக் கிளர்ச்சி அவர் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. லேசான தள்ளாட்டத்துடன் அவர் எனக்கு வழிவிட… அந்த கூபேக்குள் நுழைந்தேன். உள்ளே அவரது வயதையொத்த இன்னும் இருவர் எழுந்து நின்று கை கூப்பினார்கள். அவர்களும் மதுவின் மயக்கத்தில் தெனாவெட்டுடன் இருந்தார்கள். எதையும் கண்டுகொள்ளாதவன் போல் அவர்கள் அருகே சென்று அமர்ந்து, ‘‘என்ன மதுதேவன் கொடுத்த தைரியத்தில் அடியேனை வம்பு செய்கிறீர்களோ? என்றேன்.
இப்படி ஒரு நேரடிக் கேள்வியை எதிர்பார்க்காததால், கொஞ்சம் மிரண்டுபோய் விழித்தார்கள்.
’’சாமியும் குடிப்பார் போல…’’ ஒருவர் இப்படி வாய்க்குள் முனக, மற்றவர்கள் உதடு பிரியாமல் சிரித்தார்கள். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது.
’’நீங்கள் என்னை கூப்பிடாவிட்டாலும் தேடி வந்திருப்பேன். உங்களில் ஒருவர் குடும்பத்தில் நடக்க இருக்கும் விஷேச வைபவத்தில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுக்கவே வந்தேன்..’’ என்று நான் வாய்க்கு வந்ததை எடுத்துவிட… அதைக் கேட்ட மூவர் முகத்திலும் அநியாய கலவரம். ஒருவரை மற்ற இருவரும் பார்ப்பதைக் கவனித்தேன். தூண்டில் மீன் எது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அந்த நபரை மேலும் குழப்பி, மிரட்டி வைக்கும் எண்ணம் வந்தது.
விதி எனும் மிரட்டல் ஆயுதம்
உடனே விழித்த கண்களுடன் அவரைப் பார்த்து எழுந்தேன். அவர் சுதாரிக்கும் முன் அவரது தலையை என் கையை அழுந்த வைத்து… சில நொடிகள் கண்கள் மூடி நின்றேன். கண்களைத் திறக்காமலே, ‘‘சரி… விதி விட்டவழி’’ என்று சப்தமாகச் சொல்லிவிட்டு என் கூபே நோக்கி நகர்ந்தேன். நான் எதிர்பார்த்தபடியே, அடுத்த சிறிது நேரத்தில், மூவரும் என் இடம் தேடி வந்து ஆஜர். கைகட்டி பவ்யமாக நின்றார்கள்.
‘‘மன்னிக்கணும்’’ என்று பம்மினார்கள். நான் எதுவுமே நடவாதது போல் அவர்களைப் பார்த்து சிரித்தேன். அந்தச் சிரிப்பு அவர்களை மேலும் குழப்பியிருக்க வேண்டும். சட்டென்று நான் தலையில் கை வைத்த நபரை, என் முன்னே நிறுத்தினார்கள், அவர் பெயர் முரளியாம்.
’’சாமி, ரொம்ப நாளா இழுத்துக்கிட்டே இருந்த என் தங்கச்சிக்குக் கல்யாணம். ரொம்பவும் கஷ்டத்துக்கு அப்புறம் இப்பத்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கு. அசம்பாவிதம்னு அருள் வாக்கு சொல்லிட்டீங்க… என் தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்கணும்… ஏனோ பயமா இருக்கு சாமி’’ என்றார் பதைபதைப்புடன்.
’’உன் தங்கையின் பக்தியே இன்று என்னை உன் முன்பு காட்சி தர வைத்திருக்கிறது. கலங்காதே! உன்னிடமும், உன்னுடன் இருந்த சிலரின் துஷ்ட எண்ணங்கள்தான், இத்தனை நாளாக உன் தங்கையின் வாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. உன்னைத் தொட்டு தீட்டுகளைக் கழித்துவிட்டேன். என் பார்வை உன் மீது பட்ட கணமே அத்தனை இடர்களும் கழிந்துவிட்டது. இனி எல்லாம் மங்கலகரமாகவே நிகழும்… நீ நிம்மதியாகப் போய்த் தூங்கு…’’ என்று அமைதியான குரலில் தீர்க்கதரிசனம் போன்று சொன்னேன். அதைக் கேட்டதும் முரளியின் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.
’’சாமிக்கு ஏதாவது…’’ என்று முரளி இழுக்க, கொஞ்சம்கூட முகத்தை மாற்றிக் கொள்ளாமல், ‘‘மது… உணவு கொண்டு வாருங்கள்’’ என்றேன்.
மதுவும் கடவுளே
என் கோரிக்கை அவர்களை திடுக்கிட வைத்தது… அதிர்ச்சியுடன் நின்றார்கள். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, ‘‘சாமி… விளையாடாதீங்க’’ என்று அசட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

கைகளை மேலே உயர்த்தி, ‘‘அகிலமே அவன் விளையாட்டு. நரன்களான நாமும் அவன் விளையாட்டின் வித்துக்கள்தான். அவன் மகிமைக்கு முன்பு அடியவன் சிறு துரும்பு. நான் ஏன் விளையாட வேண்டும். என் விருப்பத்தைச் சொன்னால், உங்களுக்கு விளையாட்டாகத் தெரிகிறதா…’’ கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன்.
அவ்வளவுதான்… உடனே மூவரும் தங்கள் கூபேக்கு சிட்டாகப் பறந்து சரக்குகளைக் கொத்திக் கொண்டுவந்தார்கள்.
சில நிமிடங்களில் நகரும் ‘பாரா’க மாறியது என் கூபே. பொன்னிற ‘ஜானக்ஷா’வை கிளாஸில் வார்த்து, தண்ணீர்கூட கலக்காமல், அப்படியே ராவாகப் பருக… நம்பமுடியாமல் நின்றனர், அந்த என் புது நண்பர்கள். என் சக பயணியான தயிர்சாத இளைஞனோ, இந்த சாமி தண்ணியடிப்பதைப் பார்த்துக் கிலியடித்து, வெளியில் தெரிந்த தன் தலைக்கும் போர்வையை இழுத்துவிட்டுத் திரும்பிப் படுத்தான்.
’’நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையோ?’’ என்று கேட்டதும், வாயைத் திறக்காமலே இல்லை என தலையசைத்தார்கள்.
உணவுப் பொட்டலத்தை பிரித்து இட்லி, சப்பாத்தி அயிட்டங்களை மட்டும் அவர்களிடம் ஒப்படைத்தேன். கடைசிப் பொட்டலத்தில் கோழி பிரியாணி இருந்தது.
’’சாமி அது நான்வெஜ்… கோழி பிரியாணி’’ என்று பதறினார் ஒருவர்
’’நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்களா..’’ என்றதும், ‘‘முரளி மட்டும் சாப்பிடுவார், நாங்க சுத்த சைவம்… என்ன இருந்தாலும் உயிரைக் கொன்னு சாப்பிடுறது பாவமில்லையா சாமி… அதனாலதான்!’’ என்றார் ஒரு சைவம்.
தாவரத்துக்கு உயிர் இல்லையா..?
’’அப்படின்னா… தாவரத்துக்கு உயிர் இல்லையா?’’ என்று கேள்வியை வீசிவிட்டு பார்சலுக்குள் இருந்த கோழிக் காலை ஒரு கடி கடித்தேன். மூவரும் கண்கள் விரிய பார்த்தபடி நின்றனர்.

’’என்னைப் பார்த்தால் போலி சாமியார் போல் தெரிகிறதோ..?’’ கேள்வியை விசிவிட்டு கடிப்பதைத் தொடர்ந்தேன்.
’’ஐயோ… அப்படி நினைக்கல சாமி… ஆனா ஒரு கேள்வி மட்டும் நெஞ்சுக்குள்ளே நிக்குது… கேட்கலாமான்னு தெரியல…’’ தயங்கித் தயங்கிக் கேட்டார், ஒருவர். கண்களாலே அனுமதி கொடுத்தேன்.
’’சாமி தப்பா நினைக்காதீங்க… உலகத்தையே வெறுத்த உங்களால் அசைவத்தை ஒதுக்க முடியவில்லையா?’’
’’உலகத்தை நான் வெறுத்ததாக யார் சொன்னது, இந்த உலகம் மிகவும் பிடித்திருப்பதால்தான் சந்தோஷமாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன், அசைவத்தை ஏன் ஒதுக்க வேண்டும். அதுவும் உணவுதானே..!’’
’’உயிர்க் கொலை பாவமில்லையா?’’
’’ஏதாவது ஒன்றை தின்று வாழும்படிதான் எல்லா உயிரினங்களையும் அவன் படைத்து விட்டான். அது பயிராகவும் இருக்கலாம், உயிராகவும் இருக்கலாம். எது கிடைக்கிறதோ, எது பிடிக்கிறதோ அதை சாப்பிட வேண்டியதுதான். ஏன்… கடவுளே பிள்ளைக்கறி சாப்பிட்டவர்தானே!’’
உயிர்க்கொலை
’’அசைவம் சாப்பிடாமலும் வாழ முடியும் எனும்போது, எதற்காக இன்னொரு உயிரை உணவுக்காக கொல்ல வேண்டும்?’’
’’மனிதன் மாமிசபட்சனிதான். மாமிசம் கிடைக்காத நேரத்தில் அல்லது பிடிக்காத பொழுதில்தான் தானாக விளைந்து கிடைத்த காய், கனிகளை உட்கொண்டான். வேட்டையாட முடியாதவர்கள் நிரந்தரமாக இயற்கை உணவை கடைப்பிடித்தார்கள். மனித குலத்தில் தோன்றிய முதல் பிரிவே உணவில்தான் ஏற்பட்டது. உடல் வலிமை காட்டி ஜெயிக்க முடியாத தாவர உணவாளர்கள், அவர்களது உணவுப் பழக்கத்தை உயர்த்திக் காட்டி சிறப்பிடம் பிடிக்க முயன்றார்கள். உயிர்கள் மீதான பாசத்தினால், தாவர உணவு சாப்பிடுவதாகச் சொல்லி தங்களை உயர்த்திக் கொண்டார்கள். உண்மையில் உணவு என்பது ஒரு பழக்கம்தானே தவிர, அதில் உயர்வும் இல்லை, இகழ்ச்சியும் இல்லை…’’
’’அப்படி என்றால் உயிர்களைக் கொல்வது பாவமில்லை என்று சொல்கிறீர்களா?’’ முரளியின் வார்த்தையில் உஷ்ணம்.
’’ஒரு கொத்தமல்லிச் செடியை வேரோடு புடுங்கி, தண்ணீரில் நனைத்து அப்படியே அம்மியில் வைத்து உப்பு, புளி, மிளகாய் சேர்த்து நசுக்கித் துவையலாக்குவது பாவமில்லை என்றால் கோழியைக் கொன்று தின்பதும், மீனை வறுத்து உண்பதும் பாவமில்லைதான்’’
மனக்கட்டுப்பாடு
’’என்ன இருந்தாலும் தாவரங்கள் மனிதனுக்காக வளர்பவை, வளர்க்கப் படுபவை… இல்லையா?’’
’’இந்த உலகில் வாழ மனிதனுக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ, அத்தனை உரிமை ஒவ்வொரு தாவரத்துக்கும் இருக்கிறது. நீங்களே வளர்த்ததாக இருந்தாலும், ஒரு பயிரை அழிக்க உங்களுக்கு உரிமை இருப்பதாக எப்படி நினைத்துக் கொள்கிறீர்கள்? தன் வலி, வேதனையை வெளிப்படுத்த முடியாத உயிரினமாக பயிர்கள் இருப்பதால், அதனை சாப்பிட்டால் பாவமில்லை என நீங்களாகவே நினைத்துக் கொள்கிறீர்கள்… அப்படித்தானே?’’
’’நமது மதம் சைவ உணவைத்தானே ஆதரிக்கிறது?’’
’’யார் அப்படிச் சொன்னது? அசைவத்திற்கு தடை போட்ட காரணத்தாலே சமண மதமும், புத்த மதமும் தளைத்து வளர முடியவில்லை. இந்து மதம் இரண்டையும் ஏற்றுக் கொண்டது.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அசைவ உணவை அத்தியாவசியமாகவே மாற்றிவிட்டன. சைவ உணவுப் பழக்கமே உயர்ந்தது என்ற கர்வம் ஒருவருக்கு எழுந்துவிட்டால், அது ஒரு உயிரைக் கொன்றதைவிட கொடிய பாவம் என்பது தெரியுமா?’’
’’மனசைக் கட்டுப்படுத்த முடியாமல், இப்படி சாக்குபோக்கு சொல்றீங்க சாமி..?’’

’’இதுதானே உங்களது கடைசி ஆயுதம். இந்த ஆயுதத்தை எறிந்துதானே சைவம் சாப்பிடுவது உயர்வானது, அசைவம் பாவகரமானது என்று நம்ப வைக்கிறீர்கள்… கொசு, கரப்பான் பூச்சி, எலி போன்றவை வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், சைவ உணவாளர்கள் எத்தனை அன்புடன் அவற்றை நடத்துகிறார்கள் தெரியுமா? யாருக்கும் தெரியாமல் அசைவம் சாப்பிடுவது, உணவு பழக்கத்தை மறைப்பது எனக்குப் பிடிக்காது. எனக்கு பிடித்ததை சாப்பிடுகிறேன் அவ்வளவுதான். உங்களுக்கொன்று தெரியுமா? எல்லோரையும் போன்று நேரம் வைத்து மூன்று தடவை சாப்பிடும் உடலும், மனசும் எனக்கில்லை. எட்டு நாட்கள் வரை பட்டினியாக இருந்திருக்கிறேன்…’’
’’நீங்கள் சித்தர் இனத்தைச் சேர்ந்தவரா?’’ கேள்வியில் கொஞ்சம் பயம் இருந்தது.
நான் புன்னகையை மட்டும் பதிலாகச் சொல்லிவிட்டு, ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்து ஆழமாகப் புகையை இழுத்தேன். என் கண்கள் மூடிக் கொண்டன. கொஞ்சநேரம் நின்று பார்த்தவர்கள், இனி என்னிடம் இருந்து பதில் வராது என்பதைத் தெரிந்து கொண்டதும், தங்கள் கூபேவுக்குப் போனார்கள். அவர்கள் போனதும் சுருட்டை வெளியே விட்டெறிந்தேன். இதமான குளிரில் இன்பமாக உறக்கம் தேடி, என்புதோல் போர்த்திய இந்தக் கட்டையைக் கிடத்தினேன்.
- ஞானகுரு வருவார்