• Home
  • ஞானகுரு
  • எதை மனிதர்கள் உடனே நிறுத்த வேண்டும்..?

எதை மனிதர்கள் உடனே நிறுத்த வேண்டும்..?

Image

ஞானகுரு பதில்

கேள்வி : மனிதர்களின் எந்த செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..?

  • சி.ஷைலஜா, சென்னை.

ஞானகுரு :

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகிறது அல்லது கழிவாக தூக்கி வீசப்படுகிறது என்று ஐ.நா. சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதோடு 53 நாடுகளில் பசியும் பட்டினியும் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் கல்யாணம், வரவேற்பு போன்ற விழாக்களில் தினமும் எக்கச்சக்க உணவு வீணடிக்கப்படுகிறது. பணம் கொடுத்து வாங்கும் உணவு சுமாராக இருந்தாலும் முழுமையாக சாப்பிடும் மனிதர்கள், கல்யாணம் போன்ற விழாக்களில் இலையில் பாதிக்கும் மேலான உணவை சாப்பிடாமல் மீதம் வைத்து குப்பைக்குப் போடுகிறார்கள். பந்தியில் வைக்கப்பட்டிருக்கும் உணவு என்பது பணத்தின் இன்னொரு வடிவம். அந்த உணவு பரிமாறப்படவில்லை என்றால் வேறு யாரேனும் ஒருவரது பசியைப் போக்கியிருக்கலாம். எனவே, என்ன காரணத்துக்காக உணவை வீணாக்கினாலும் அது கோபமூட்டும் செயலாக இருக்கிறது. விசேஷ வீடுகளில் மட்டுமின்றி கோயில்களில் அபிஷேகம் என்ற பெயரில் பால், நெய், தயிர், பழங்களை ஊற்றி வீணாக்குவதைப் பார்க்கையிலும் ஹோமம் என்ற பெயரில் தீ வளர்த்து நெய் உள்ளிட்டவைகளை வீணாக்கும் முட்டாள்தனத்தைப் பார்க்கையில் கோபம் வருகிறது.  

இவை எல்லாவற்றையும் விட பாலாபிஷேகம் என்கிற பெயரில் நடிகர், நடிகைகளின் உயிரற்ற கட் அவுட் மீது பால் ஊற்றி வீணாக்குகிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீணடிப்பது விவசாய பெருமக்களின் உழைப்பை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

Leave a Comment