ரஜினியின் மகிழ்ச்சி எங்கே போனது…?

Image

ஞானகுரு ஸ்கேன் ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உழைப்பைப் பார்த்து, அவரது சம்பாத்தியத்தைப் பார்த்து, அவரது வாழ்க்கை முறையைப் பார்த்து வியந்து நிற்கிறான். ஆனால், அவரோ என்னிடம் 10 சதவிகிதம்கூட நிம்மதி இல்லை என்று சொல்கிறார்.

சமீபத்தில் பேசிய ரஜினிகாந்த், ‘’நான் அரசியலுக்கு வந்திருந்தால் பணம், நிம்மதி போன்றவற்றை இழந்திருப்பேன்’ என்று கூறுகிறார். இப்படி அவர் கூறியதைப் பார்க்கும்போது, அவர் ஏகப்பட்ட முரண்களுடன் வாழ்வதாகவே தெரிகிறது.

‘’இந்த நாட்டில் எல்லாமே கெட்டுக் கிடக்கிறது, சிஸ்டத்தை மாற்ற வேண்டும்’’ என்று பேசியவர் உண்மையான ரஜினியா அல்லது அரசியலுக்கு வராமல் தப்பியதால் நிம்மதியாக இருக்கிறேன் என்பது உண்மையான ரஜினியா? என்று புரியாமல் குழம்ப வேண்டியிருக்கிறது.

பணம் என்பது ஒரு சகல அதிகாரமும் பொருந்திய ஒரு கருவி என்று வைத்துக்கொள்ளலாம்.  உடல் நலம் தனியார் மருத்துவமனை ஏசி ஆம்புலன்ஸ் அனுப்பி அலேக்காக தூக்கிச் சென்று ஏசி வார்டில் வைத்து கண்ணும் கருத்துமாக சிகிச்சை செய்து அனுப்புவார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்கி அதை பாலிஷ் செய்ய வேண்டாம். பிரத்யேகமாக டயட்டிஷியன் ஒருவரை நியமித்து காலை மாலை திட்டப்படி சமையல்காரர்களை வைத்து சமைத்து உண்ணலாம்.

பொழுது போகவில்லை என்பதற்காக ஏதேனும் நாட்டுக்கு சுற்றுலா சென்று இளைப்பாறிவிட்டு வர முடியும். இவையெல்லாம்தான் பணத்தினால் கிடைக்கும் விஷயங்கள்.

மகிழ்ச்சி, மன நிம்மதி போன்றவை எல்லாம் உணர்வு பூர்வமான விஷயங்கள். இவையெல்லாம் பணத்தினால் கிட்டாது. அறிவுத் திறன் மூலமும், மன முதிர்ச்சி மூலம் மட்டுமே கிடைப்பவை. நீங்கள் பெரிய பணக்காரராக இருந்தாலும், பரம ஏழையாக இருந்தாலும் இந்த இரண்டும் இல்லையெனில் கஷ்டம்தான்.  அதே நேரம், பணம் இருந்தால் மகிழ்ச்சி இல்லையென்றாலும் ஓரளவு சமாளித்துக் கொண்டு விடலாம்.

ரஜினி ஒரு கடவுள் நம்பிக்கையாளர்.  ரஜினி சதா சர்வ காலமும் பூஜை புனஸ்காரங்கள் என்று செய்து கொண்டிருக்கிறார். திருவண்ணாமலை முதல் இமயமலை வரை எல்லா மலைகளிலும் ஏறி தியானம் செய்து வருகிறார். ரமண மகரிஷி துவங்கி பாபா மகரிஷி வரை பின்பற்றாத சாமியார்கள் இல்லை. இதெல்லாமே செய்தும் கூட 10 சதவிகிதம்தான் நிம்மதி கிடைக்கிறது என்றால் இவற்றால் என்னதான் பலன்?

ரஜினி சொல்லவரும் கருத்து என்னவென்றால்,  ‘ஆயிரக்கணக்கான கோயில்ல பூஜை பண்ணி இருக்கேன். எல்லா சாமியாருங்க சொன்னதையும் ஃபாலோ பண்ணி இருக்கேன். எல்லா மலை மேலயும் உக்காந்து தியானம் பண்ணி இருக்கேன். அப்படி எல்லாம் செஞ்சும் 10 சதவீதம்தான் மகிழ்ச்சி, நிம்மதி கிடைச்சிருக்கு!’ என்கிறார் என்றால் அவர் சரியான பாதையில் போகவில்லை என்பதே அர்த்தம்.

மனநல மருத்துவர் ஒருவர் ரஜினியின் நிம்மதி குறித்து கூறியது என்ன தெரியுமா..? ‘’ரஜினிகாந்த் தன்னுடைய தொழிலை மிகவும் நேசித்தார். இப்போதும் நேசிக்கிறார். ஆரம்பத்தில் நடிப்பு ரஜினிக்கு சந்தோஷம் கொடுத்தது. ஆனால், இப்போது அது பணத்தையும் நிறையவே பொறுப்பையும் கொடுத்துவிட்டது. ரஜினிக்கு எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள பிடிப்பதே இல்லை. அதனால்தான் இன்னமும் அவர் நடிகராகவே இருக்கிறார்.

சினிமாவில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதற்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் இருக்கிறார்கள். குடும்பத்தை நடத்துவதற்கு லதா இருக்கிறார். இப்படி எந்த பொறுப்பும் இல்லாததுதான் ரஜினிக்கு மிகப்பெரும் வருத்தத்தை உருவாக்குகிறது. இப்போது அவரால் சினிமா இயக்குனர் என்ற பொறுப்பையோ, குடும்பத் தலைவர் என்ற பொறுப்பையோ ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இரண்டுமே அவர் கைவசம் இல்லை.

அரசியல் கட்சி தலைவர் என்ற பொறுப்பு அவரை தேடிவந்தது. அப்போது அவர் தவிர்த்த காரணமும், அவரால் பொறுப்பை ஏற்க முடியாது என்று நம்புகிறார். மேலும், அவர் கடவுள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். ஏன் தெரியுமா..? இத்தனை பெரிய வெற்றியை அவர் எதிர்பார்க்கவில்லை. இத்தனை பெரிய வெற்றிக்கு தான் தகுதியில்லை என்று நினைக்கிறார். அதனால், இந்த வாழ்க்கையை கடவுளின் ஆசிர்வாதம் என்று நம்புகிறார். மிகப்பெரிய வெற்றி, அவருடைய தன்னம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது.

மேலும், கடவுள் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார் என்று நம்புகிறார். அவருக்குத் தெரியவில்லை, மகிழ்ச்சி என்பது அவர் மனசுக்குள்தான் இருக்கிறது என்பது. அவருக்கு என்ன செய்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதுகூட இன்னமும் தெரியவில்லை. தியானத்தில் அமர்ந்து கடவுளை நினைத்தால், அதை கண்டுபிடிக்க முடியாது. அவரது மனம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை தேடிப் பார்த்தால், மகிழ்ச்சியை கண்டுபிடிக்கலாம்” என்கிறார்.

ரஜினி இனியாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும். 

Leave a Comment