ஞானகுரு பதில்கள்
கேள்வி : உயிருடன் இருப்பதை கண்ணுக்கு முன்பாகப் பார்க்கிறோம். செத்துவிட்டார்கள் என்றால் உயிர் எங்கே போகிறது..?
- ஸ்ரீராம், நாகப்பட்டினம்.
ஞானகுரு :
தத்துவார்த்தமாகச் சொல்வது என்றால் புத்தர் கூறிய பதில் சரியாக இருக்கும். ஒரு விளக்கு அணைந்துவிட்டால் அந்த ஒளி மறைந்துபோகிறது. இதுவே மரணம். அந்த ஒளி எங்கு செல்கிறது..? எரியும் விளக்கில் இருந்து ஆயிரம் விளக்கிற்கு ஒளி கொடுக்க முடியும். அதுவே ஜனனம். ஒளி எங்கே இருந்து வரவும் இல்லை, எங்கேயும் மறையவும் இல்லை. எல்லாம் இயற்கையில் இருக்கிறது.
இதை அறிவியல்ரீதியாகச் சொல்வது என்றால் உயிர் என்பது இயக்க ஆற்றல். பேட்டரியில் இருக்கும் மின் ஆற்றல் தீர்ந்துபோனதும் செயல் இழப்பது போன்று உடலில் இருக்கும் ஆற்றல் தீர்ந்துபோனதும் உயிர் போய்விடுகிறது. இதற்கு மேலான சிந்தனை மனிதருக்குத் தேவையே இல்லை.
கேள்வி ; ஒரு மனிதனுக்குள் எத்தனை முகம் இருக்கிறது.. எப்போது வெளிப்படும்?
- டி.சுந்தர், வ.உ.சி.நகர்.
ஞானகுரு ;
அப்பா, கணவன், பிள்ளை, அண்ணன், தம்பி, மேலாளர், வேலைக்காரர், கோபக்காரர், அன்பானவர், கொடுமைக்காரர் என்று எல்லாவிதமான முகமூடியும் மனிதருக்கு இருக்கிறது. தேவைப்படும் இடங்களில் தேவைக்கேற்ப எல்லோரும் அணிந்துகொள்கிறார்கள். இத்தனை முகங்களில் எது உண்மை முகம் என்பது சம்பந்தப்பட்ட நபருக்கே சில நேரங்களில் தெரிவதில்லை.
கேள்வி : பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் மோசமான தவறு என்ன..?
- எம்.ஷோபா, வாணியம்பாடி.
ஞானகுரு ;
டீன் வயதில் ஆண் பிள்ளைக்கு ரேஸ் பைக் வாங்கித்தருவதும் பெண் பிள்ளைக்கு பியூட்டி பார்லரை அறிமுகம் செய்வதும் ஆபத்தான செயல். மாணவப் பருவத்தினருக்கு மனதில் இருக்கும் உறுதி உடலுக்கு இருக்காது. இந்த வயதினரால் ரேஸ் பைக்கை நகரங்களில் சமாளித்து ஓட்ட முடியாது. தினம் ஒரு மாணவனாவது இந்த பைக்கினால் விழுந்து உயிரை இழக்கிறான் என்றும் தெரிந்தும் நிறைய பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். இந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளை உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் நபர்களின் உயிருக்கும் எமனாக மாறுகிறார்கள்.
பெண் பிள்ளைகளுக்கு இயற்கையே அழகு என்று சொல்லி வளர்க்காமல் செயற்கை அழகிற்கு அடிமையாக்குகிறார்கள். தலைமுடி, புருவம், இமைகள், உதடுகள் எல்லாமே செயற்கையாக மாறுகிறது. பியூட்டி பொருட்கள் இல்லையென்றால் தான் அழகி இல்லை எனும் அளவுக்கு அவள் நம்பிக்கை இழந்துவிடுகிறாள். அழகு என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது என்பதை சொல்லி வளர்ப்பது போதும்.