நெஞ்சை தொடும் சம்பவம்
பிள்ளையை பெற்றோர் பராமரிப்பது கடமை. ஏனென்றால், அந்த பிள்ளையை பெற்றெடுத்தது அவர்கள். எனவே, குறிப்பிட்ட வயது வரையிலும் வளர்த்து, பிள்ளையின் எதிர்காலத்துக்குத் தேவையானதை செய்து கொடுக்கவேண்டிய கட்டாயம், பெற்றோருக்கு உண்டு.
அதேநேரம், பெற்றோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைக்கு உண்டா..?
உண்மையைச் சொல்வது என்றால் இல்லை.
இயற்கையும் அப்படி படைக்கவில்லை. ஆம், மனிதனைத் தவிர எந்த உயிரினமும் வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குப் பாரமாக இருப்பதில்லை. எனவே, பெற்றோரை பிள்ளைகள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்று சொல்வதற்கு எந்த ஒரு நியாயமும் இல்லை.
அப்படியாயின் முதுமையில் என்ன செய்வது..?
தன் பிள்ளையின் எதிர்காலத்துக்கு திட்டமிட்ட பெற்றோர், தங்கள் எதிர்காலத்திற்கும் உரிய வகையில் திட்டமிட்டிருக்க வேண்டும். அதுவே, சரியான சிந்தனை.
சட்டப்படி, பெற்றோரை கவனிக்கவேண்டிய கடமை பிள்ளைக்கு உண்டு என்று வாதாடலாம். ஆனால், அன்பும் அக்கறையும் இல்லாமல் பெற்றோரை கடமைக்காக கவனிப்பதை, எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..? எப்படி மதிக்க முடியும்.
ஆனாலும், ஒருசிலர் பெற்றோரை பெருமையாக மதிக்கிறார்கள்… காலம் முழுவதும் பணிவிடை செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பிள்ளைகள் அல்ல… அதற்கும் மேலானவர்கள்.
இதனை விளக்கும் சம்பவம் இது.
அது ஒரு உயர்ரக ரெஸ்டாரன்ட். தனது வயதான தந்தையை அழைத்துவந்து, அவருக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்கிறான் மகன். அந்த உணவு வருகிறது.
தந்தை வயது முதிர்ந்த நிலையில் இருக்கிறார். கை, கால்களில் நடுக்கம் தெரிகிறது. கண் பார்வையிலும் அத்தனை தெளிவு இல்லை. எனவே அவர் சாப்பிடும்போது, அவர் மீதும் மேஜையின் மீதும் உணவுத் துகள்கள் விழுகிறது. தண்ணீர் குடிக்கும்போது மேலும் கீழுமாக கொட்டுகிறார். ஸ்பூனால் உணவை எடுக்க முயன்று கீழே தள்ளுகிறார்.
அக்கம்பக்கத்தில் சாப்பிடுவோர், இதனையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த தகப்பனையும் மகனையும் உற்றுப் பார்க்கிறார்கள். இதை மகன் பார்த்தாலும், மற்றவர்களை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல், அப்பாவையே கவனிக்கிறான். உணவை அவர் எடுத்து சாப்பிடுவதற்கு சின்னச்சின்ன வகையில் உதவிக்கொண்டு, அவரை சாப்பிடத் தூண்டுகிறான்.
தந்தை சாப்பிட்டு முடித்ததும், அவரை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று, அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டியிருந்த உணவுத் துகள்களை துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியை சரியாகத் துடைத்து அவருக்கு மாட்டி, கைத்தாங்கலாக வெளியே அழைத்துவருகிறான்.
பில் வருகிறது. தந்தையை அழைத்துக்கொண்டு கவுண்டருக்கு பில் கொடுக்கச் செல்கிறான். அப்போது ஒருவர் எழுந்து, ‘’தம்பி… நீங்கள் இங்கு எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டதும், அந்த கேள்வியால் குழப்பமடைந்த மகன், “இல்லையே… நான் எதையும் மிஸ் பண்ணவில்லை” என்று சொல்கிறான்.
அதற்கு அந்த மனிதர், “இல்லை… நீங்கள் இங்கு சிலவற்றை விட்டுச் செல்கிறீர்கள். இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுச் செல்கிறீர்கள். எல்லா பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுச் செல்கிறீர்கள்”என்கிறார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் அந்த மகனுக்கு எழுந்துநின்று கை தட்டினார்கள். ஏனென்றால், இதுபோன்ற பிள்ளைகள் கடவுளுக்கும் மேலானவர்கள்.