• Home
  • உறவுகள்
  • காதலனுக்கு குட் பை எப்போது சொல்ல வேண்டும்?!

காதலனுக்கு குட் பை எப்போது சொல்ல வேண்டும்?!

Image

சீட்டிங் சிக்ஸ்

காதல் என்பது புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று பணம் பறிக்கவும், பெண்ணை அனுபவிக்கவும் காதல் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்தவே செய்கிறார்கள்.

அன்பு மழை பொழியும் ஆண்களைத்தான் பெண்கள் காதலிக்கிறார்கள். அந்த அன்பில் உண்மை இருக்கிறதா என்பதை அறிவதுதான் அவசியம். இதனை எப்படி அறிய வேண்டும். இதோ ஆறு வழிகள்.

  1. உறவுகளுக்கு அறிமுகம்.

காதல் செய்வதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைக்கிறாரா அல்லது தன்னுடைய தோழர்கள், உறவினர்களிடம் தைரியமாக அறிமுகம் செய்கிறாரா என்பதை பாருங்கள். ரகசியமான சந்திப்பு, யாருக்கும் தெரியாமல் பேச்சுவார்த்தை என்று போய்க்கொண்டே இருந்தால், அவர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை புரிந்துகொண்டு கத்தரி போடுங்கள்.

  • அழகுப் பொய்

ஒரு பெண்ணை மயக்குவதற்கு எளிதான ஒரு வழி, நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்வதுதான். இந்த வார்த்தையைக் கேட்கத்தான் அத்தனை பெண்களும் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், இந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறார் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், அறிமுகத்துக்கு வேண்டுமானால் அழகு தேவைப்படலாம். எப்போதும் மயக்குவதற்கு அழகு என்பதை பயன்படுத்தினால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • எக்கச்சக்க ஐஸ் 

நீ என்னை புரிந்து கொண்டதை போல் என் குடும்பத்தினர்கூட என்னை புரிந்துகொண்டே இல்லை என்று ஒருவர் சொல்கிறார் என்றால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இது தலைக்கு மேல் எக்கச்சக்க ஐஸ் வைத்து குளிரவைக்கும் முயற்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யாரும் யாரையும் முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது என்பதுதான் உண்மை.

  • மரண எச்சரிக்கை.

நீ மட்டும் என்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்தே விடுவேன் என்று ஒருவர் பேசுவது முதலில் காதலிக்கு சந்தோஷம் தரலாம். ஆனால், உண்மையில் இது  உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும். உங்கள் காதலுக்காக ஒருவர் மரணம் அடையக்கூட தயாராக இருக்கிறார் என்று சொல்வது, உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் மெச்சூரிட்டி அடையவில்லை. அதாவது வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான பக்குவம் இன்னமும் வரவில்லை என்றுதான் அர்த்தம். வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள், வேதனைகள் வரும். அவற்றை எல்லாம் கடந்துசென்று வாழவேண்டுமே தவிர, செத்துப்போவேன் என்று மிரட்டுவது கொடூரத்தனம் என்பதை புரிந்துகொண்டு விலகத்தான் வேண்டும்.

  • சந்தேக நோய்

சந்திப்புகள் நடக்கும்போது எல்லா நேரமும் முன்கூட்டியே வந்து காத்திருப்பது, தாமதமாக வரும்போது சந்தேகம் கொள்வது போன்றவை எல்லாமே முழுமையான காதல் அல்ல. ஏனென்றால், சந்திப்பு என்றாலே காலதாமதம் தவிர்க்க முடியாதது. இதனை புரிந்துகொள்ளும் அளவுக்கு இருவருக்கும் பக்குவம் இருக்க வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சந்தேகம் கொள்வது, வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அதனால், தப்பித்துக்கொள்ளுங்கள்.

  • அளவுக்கு மீறிய செலவு

ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ, அந்த அளவுக்குத்தான் செலவு செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால், தேவையில்லாத விஷயங்களுக்கு செலவு செய்யவே கூடாது. எப்படியாவது மயக்க வேண்டும் என்பதற்காக அதிக செலவு செய்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோன்று, உங்களிடம் எவ்வளவு நகை இருக்கிறது, எவ்வளவு சொத்து உள்ளது என்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும் நபரிடமும் எச்சரிக்கை கொள்ளவும்.

இவை எல்லாமே ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் மாறக்கூடியதுதான். ஆனால், பொய் என்பது இங்குதான் அதிகம் தொடங்குகிறது. எனவே, உஷாராக இருக்க வேண்டியது ஒவ்வொரு காதலிக்கும் அவசியம்.  காதலுக்கு கண் இல்லை என்று சொல்லப்படுவது உண்மைதான். மேற்கூறியவற்றில் இரண்டுக்கும் மேல் உங்கள் காதலரிடம் இருந்தால் சொல்லிவிடுங்கள் குட்பை.

Leave a Comment