• Home
  • பணம்
  • பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரிப்பது எப்போது..?

பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரிப்பது எப்போது..?

Image

பணமே மந்திரம்

நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். அவருடன் வந்திருந்த முதியவர் அவசரமாக ஒரு கேள்வி எழுப்பினார்.

‘’சாமி… என்னுடைய மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். என்னுடைய உதவிக்காக வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு நர்ஸ் தினமும் வந்து பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க யாரும் இப்போ என்கூட இல்லை. தனித்தனியா பிசினஸ் பண்றாங்க… அவங்க பிசினஸ் பண்றதும் நான் குடுத்த பணம்தான். எப்போதாவது வந்து என்னை பார்த்துச் செல்கிறார்கள்.

என்னுடைய மனைவி இல்லாமல் நான் தனியே இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. என்னை அவர்களுடன் வந்து தங்கச் சொல்கிறார்கள். பேரன், பேத்திகளுடன் இருப்பதற்கு எனக்கும் ஆசைதான். ஆனால், அதற்குள் என்னிடம் இருக்கும் பரம்பரை சொத்தையும், நான் சம்பாதித்த சொத்தையும் சரிபாதியாக பிரித்துக் கேட்கிறார்கள். நான் என்ன செய்வது..?’’ குழப்பமாக கேள்வி கேட்டார்.

‘’நீ என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்..?’

‘’சொத்தை மூன்று பங்காகப் பிரித்து, இரண்டு பங்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, ஒரு பகுதியை எனக்கு வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதை என்னை கவனித்துக்கொள்ளும் வேலைக்காரர்களுக்கு என் மரணத்திற்குப் பிறகு கொடுக்க ஆசைப்படுகிறேன்’’ என்றார்.

‘’குருவிகள் கூடு கட்டி முட்டை போடுவதை பார்த்திருக்கிறாயா.. அந்த முட்டைகளை மிகவும் பத்திரமாக பாதுகாக்கும். குஞ்சு பொரித்தவுடன் நேரத்துக்கு நேரம் நேரம் மிகச்சரியாக புழுக்களை கொண்டுவந்து கொடுத்து வளர்க்கும். இறக்கை முளைத்ததும், அந்த குஞ்சுகள் பறந்து சென்றுவிடும். அதன்பிறகு, அந்த குஞ்சுகள் ஒருபோதும் தாயை திரும்பிப் பார்ப்பதில்லை.

நீ உன் பிள்ளைகளுடைய தேவைகளை நிறைவேற்றிவிட்டாய். இப்போது நீயும் சுதந்திரமாக வாழ்கிறாய். இதுவே சரியான வாழ்க்கை. நீ விருப்பப்படும் நேரத்தில் உன் பிள்ளைகளை போய் பார்… அவர்கள் விரும்பும் நேரத்தில் உன்னை பார்க்க வரட்டும். ஆனால், சொத்துக்கள் உன் மரணத்திற்குப் பிறகு உன் பிள்ளைகளைச் சேரும் என்று மட்டும் எழுதி வை. அதுவே போதும்.

வேலைக்காரர்களுக்கு சொத்து எழுதி வைக்க நினைப்பது உன்னுடைய நல்லெண்ணமாக இருக்கலாம். ஆனால், அதை உன் பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள். வேலைக்காரர்கள் அதன்பிறகு உன்னுடைய வாழ்க்கையைக் கவனிக்க மாட்டார்கள், உன் மரணத்தையே எதிர்பார்ப்பார்கள். அதனால், நீ வாழும் வரையில் அவர்களுக்கு உன்னால் என்னவெல்லாம் உதவிகள் செய்யமுடியுமோ, அதை மட்டும் செய். வேலைக்காரர்களை கொலைகாரர்களாக மாற்றிவிடாதே…’’

‘’இப்போதே நான் சொத்து எழுதித் தரவில்லை என்றால் என் பிள்ளைகள் என்னை கொன்றுவிட மாட்டார்களா..?’’

‘’அப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றிருக்கிறாய் என்றால், அப்படியே செத்துப் போ. அதற்கான பலனை அவர்கள் அனுபவிக்கட்டும்…’’

‘’என் மரணத்துக்குப் பிறகு என்றாலும், இருவருக்கும் எந்தெந்த சொத்துக்கள் என்று நானே பிரித்து வைத்துவிடவா..?’’

‘’வேண்டாம்… நல்ல சகோதரர்களாக இருந்தால் எளிதாக பிரித்துக்கொள்ளட்டும். பேராசைக்காரர்கள் என்றால் சண்டை போட்டு, உன் சொத்து நீதிமன்றத்தில் நிற்கட்டும்…’’

‘’இது தவறு இல்லையா..?’’

‘’உன் தேவைக்கு அதிகமாக சம்பாதித்தது தவறு. எனவே நீ சம்பாதித்ததை நீ நன்றாக அனுபவி… அதுதான், இந்த முதுமையில் நீ செய்ய வேண்டிய செயல்…’’

முதியவர் இப்போது தெளிவுக்கு வந்திருந்தார்.

Leave a Comment