சேவல் அண்ணன் குட்டிக்கதை
நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுவீர்கள் என்பது பிரபஞ்ச விதி. அதற்கு உதாரணமாக வாழ்ந்து முடித்திருக்கிறார் என் சகோதரர்.
நீண்ட காலமாக தனி மனிதராக வாழ்க்கை நடத்திவந்த அவர், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அது அவரது 69வது வயதில் நிஜமாகி இருக்கிறது.
இது ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட பதிவு என்றாலும் மனம் எத்தனை தூரம் வலிமையானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த பதிவு வழிகாட்டும்.
சேவல் சண்டையை அறிமுகம் செய்த நாகேந்திர அண்ணனுக்கு மீசையும் சண்டைச் சேவலும் அடையாளம். சித்தியின் மகன். சண்டைச் சேவலுக்கு அவர் தீனி கொடுக்கும் விதம் அலாதியாக இருக்கும். சேவலை மடியில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முந்திரிப்பருப்பு, பாதாம், பேரிச்சம்பழத்தை ஒன்றாக அரைத்து உருண்டை உருண்டையாக எடுத்து வாய்க்குள் திணித்து சேவலின் தொண்டையைத் தடவிக் கொடுப்பார். ராகி, கோதுமையை களியாகக் கிண்டி ஊட்டுவார். முருங்கைக்கீரை சூப் குடித்துவிட்டு சேவலுக்கும் கொண்டுவந்து கொடுப்பார்.
சண்டையில் தாக்குப்பிடிப்பதற்காக ஒரு பெரிய தண்ணீர் தொட்டியில் சேவலை விட்டு, அரை மணி நேரம் வாலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நீச்சலடிக்கப் பழக்குவார். விருதுநகர் மாவட்டத்தில் சேவல் சண்டைகள் அதிகம் நடப்பதில்லை. அதனால் தஞ்சாவூர், புதுக்கோட்டை என்று எங்கெல்லாம் சேவல் சண்டை நடக்கிறதோ அங்கெல்லாம் போய்விடுவார். சேவல் ஜெயித்தால் கிடைக்கும் மெடல், அண்டா, குத்துவிளக்கு, கிண்ணம் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். வெற்றி பெற்ற சேவலுக்கு கிராக்கி இருக்கும். எனவே ஆறாயிரம், ஏழாயிரம் என விலை பேசி விற்றுவிட்டு அடுத்த சேவலை சண்டைக்குத் தயார் செய்யத் தொடங்கிவிடுவார்.
பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து, ஆளுக்கு ஒரு ஊரில் நன்றாக இருக்கிறார்கள். மதினியிடம் சண்டை போட்டு பிரிந்து கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேல் தனி மர வாழ்க்கை. பெரிய வீடு, போதிய பணம் இருந்தாலும் சரியாக சாப்பிடத்தான் வழியில்லை. சமையல் ஆள், ஹோட்டல், மெஸ் என்று சாப்பிட அலைந்துகொண்டே இருந்தார். யார் எங்கு பயணத்துக்குக் கூப்பிட்டாலும் வந்து ஒட்டிக்கொள்வார்.
எல்லாம் சரி, உடம்புக்கு ஏதாவது ஒன்று வந்துவிட்டால் யார் பார்த்துக்கொள்வது என்று கேட்கும் போதெல்லாம், ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தம்பி. உடம்பை நல்லா பார்த்துட்டு இருக்கேன்’ என்பார் நம்பிக்கையுடன். சின்ன வயதில் கட்டையன் ஜிம்மில் என்னையும் சேர்த்துவிட்டவர் இவர் தான். தண்டால், புஷ் அப், பெஞ்ச் பிரஸ், கட்டை பார் என்று அண்ணன் தீவிரமாக பயிற்சி எடுக்கும் நேரத்தில், நான் ஜாலியாக சிலரை கூட்டி வைத்து அரட்டை அடித்தது தனிக்கதை.
எனக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நேரத்திலும், இதய அறுவை சிகிச்சை நேரத்திலும் குடும்பத்தினர் காட்டிய ஆதரவு மகத்தானது. அது போன்று அவருக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால் யார் பார்த்துக்கொள்வது என்பது பெரும் கேள்வியாக இருந்துகொண்டே இருந்தது.
கடந்த வாரம் கோயிலுக்குச் சென்றவர் தற்செயலாக கீழே விழுந்து அடிபட்டு சுயநினைவு இழந்துவிட்டார். மருத்துவமனையில் சேர்த்து மூளையில் படிந்திருந்த ரத்தக்கட்டியை அகற்றி ஆபரேஷன் செய்தாகிவிட்டது. கண் விழித்த பிறகு அவரை யார் பார்த்துக்கொள்வது, எப்படி பார்த்துக்கொள்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக நின்றது.
இதற்கு விடை தெரியாமல் ஒரு வாரமாக ஆளுக்கொரு ஆலோசனை சொல்லிக்கொண்டே இருந்தோம்.
’போங்கடா டேய்…. யாரையும் நம்பி நான் இல்லை’ என்பது போன்று கண்ணைத் திறக்காமலே போய்ச் சேர்ந்துவிட்டார் ரோஷக்கார அண்ணன்.
- எஸ்.கே.முருகன்