- அது போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும்
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே போய்விட்டால் சட்டென அதிர்ந்து விடுகிறார்கள். அது இடமிருந்து வலம் போனதா, வலமிருந்து இடம் போனதா… கருப்புப் பூனையா அல்லது கொஞ்சம் வெள்ளை நிறம் கலந்த பூனையா என்றெல்லாம் பார்த்து, சகுனத்தை கணிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
’’பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?”
‘’அது எங்கேயோ போகிறது என்று அர்த்தம்…”
ஆம், இது கிண்டல் அல்லது நகைச்சுவை பதில் அல்ல. இதுதான் யதார்த்தம். சாதாரணமாக பூனை எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது. நீங்களும் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறீர்கள். அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்களோ, அதை பொறுத்தே உங்களுக்குப் பலன் கிடைக்குமே தவிர, குறுக்கே செல்லும் பூனையால் அல்லது தலையை தொட்டுச் செல்லும் காகத்தால் எதுவும் மாறிவிடாது.
‘’அமைதி வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?’’
‘’போருக்குச் செல்வதற்குத் தயாராக இரு…’’
ஆம், இந்த பதிலும் எதிர்மறை பதில் அல்ல. இதுவே சரியான பதில். ஒருவர் போருக்குச் செல்லும் போது எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும் தெரியுமா..? எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதாவது போரில் பிறர் உயிரை எடுக்க வேண்டி வரலாம் அல்லது தன் உயிரை இழக்க வேண்டி இருக்கலாம். அப்படி தன்னையே இழப்பதற்கு ஒருவன் தயாராக இருந்தால், அவன் மனதில் அமைதி தானாகவே வந்துவிடும்.
’’என் எதிர்காலத்துக்குப் போதுமான அளவு சேமிக்கவில்லையே…’’
‘’பிச்சைக்காரனாக மாறி விடு…’’
ஆம்… இந்த பதில் உன்னுடைய பயத்தை போக்குவதற்காக சொல்லப்படுகிறது. பயம் இருக்கும் ஒருவனுக்கு எவ்வளவு பணம் சேமிப்பாக இருந்தாலும், அதன் மீது நம்பிக்கை வராது. `நாளைக்கும் பணம் கிடைக்குமா, கிடைக்கும் பணம் போதுமான அளவில் இருக்குமா, வயதான பிறகு வரும் நோய்க்கு இந்த பணத்தால் சிகிச்சை தந்துவிட முடியுமா’ என்றெலாம் யோசித்துக்கொண்டே பயத்துடன் வாழ்வார்கள். அவர்களால், சேமித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு சந்தோஷமாக வாழ முடியாது. எனவே, பிச்சைக்காரன் வாழ்க்கைக்கு ஆசைப்பட வேண்டும். நாளை ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. அந்த நம்பிக்கைதான் பணத்தின் மீதான பயத்தை குறைக்கும். பணம் இன்றி உலகில் அத்தனை உயிரினங்களும் வாழத்தான் செய்கின்றன என்பதை நினைவில் கொள்.