நாடு முழுக்க சர்ச்சை
அயோத்தி வழக்கில் கடவுள் முன் அமர்ந்து நீதி கேட்டேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியிருந்தார். இதே விஷயத்தில் ஒரு இஸ்லாம் மதத்தைச் சேர்த நீதிபதி ஒருவர் அல்லாவிடம் கேட்டிருந்தால் என்ன தீர்வு கிடைத்திருக்கும் என்று தி வயர் பத்திரிக்கை கட்டுரை எழுதி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் தமிழகத்திலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வீரமணி, ‘’‘கடவுளைக் கேட்டுதான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கினேன்‘‘ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது சட்டப்படி சரியானதா? அதே நேரத்தில் வழக்காடிகள் இப்படி அரசியல் சட்டத்தைச் செயலற்றதாக்க முயற்சிக்கும் நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் தலைமை நீதிபதி திடீரென்று ‘‘நான் பாபர் மசூதி வழக்கைத் தீர்க்க கடவுளிடம் கேட்டு, வேண்டியே அதன்படி தீர்ப்பு தந்துள்ளேன்’’ என்ற கருத்துப்படக் கூறியது எவ்வளவு விசித்திரமும், அரசியல் அடிக்கட்டுமானத்திற்கு விரோதமான நகை முரணும் என்பதை இன்று பல பேரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பதவி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் இப்படி ஒரு சார்பு நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல நடந்து கொள்ளுதல் சரியா? பிள்ளையார் சதுர்த்திக்கு டில்லியில் பிரதமர் மோடியைத் தமது வீட்டுக்கு அழைத்து பூஜையில் கலந்து கொள்ளச் செய்தது – மற்றபடி திருப்பதி, மதுரை மீனாட்சி கோயில்களுக்கு செல்வதெல்லாம் அவர்களது தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அவர்களது வழிபாட்டுரிமையில் நமக்கு ஆட்சேபனை இல்லை! – ஆனால், அவர்களுக்கான அங்கே தரப்பட்ட வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடு எல்லாவற்றுக்கும் அவரது பதவிதானே காரணம் என்பது எதார்த்தம்.
பாபர் மசூதி – ராமர் கோயில் தீர்ப்பே ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு – லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்க, அதற்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, காட்டப்பட்ட வேகம் எல்லாம் எதிர்காலத்திலும் கேள்விக்கும், பரிசீலனைக்கும் உள்ளாகாமல் இருக்க முடியாத ஒன்று. நீதித்துறை வேலிகள் வேலிகளாக இருக்க வேண்டும்..’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஸ்ரீதர் சுப்பிரமணியம், ‘’திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘அரசியலுக்குள்ள எதுக்கு பாஸ் கடவுளைக் கூட்டிக்கிட்டு வர்றீங்க?’ என்று அங்கலாய்த்தவர் இவர். இப்போது இவரே நீதின்றத்துக்குள் கடவுளைக் கூட்டி வந்ததைப் பெருமையாகப் பேசுகிறார். அயோத்தி தீர்ப்பு வந்த போது எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. எப்படி இப்படி ஒரு அநீதியான தீர்ப்பை வழங்க முடியும் என்ற கேள்வி என்னிடமிருந்து விலகவே இல்லை. இப்போதுதான் அதன் பின்னணி புரிகிறது.
தீர்ப்பு நீதிமன்றத்தில் முடிவாகவில்லை. பூஜை அறையில்தான் முடிவாகி இருந்திருக்கிறது என்பது. நீதிகள் அவற்றுக்கான மன்றங்களில்தான் வழங்கப்பட வேண்டும். அரசியலுக்குள் கடவுளர்களைக் கூட்டி வருவது எத்தனை பிரச்சினையான ஒன்றோ, அதை விட மோசமான ஒன்று, நீதிமன்றங்களுக்குள் கடவுளர்களை கூட்டி வருவது’ என்று கூறியிருக்கிறார்.