ஸ்டீபன் ஹாக்கிங் நியாயமான கேள்வி
மருத்துவர் சொன்னால் சரியாக இருக்கும் என்பதை உடைத்துக் காட்டிய இயற்பியல் அறிவியல் விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு மருத்துவ ஆச்சர்யம். 21வது வயதில் ALS நோய் கண்டறியப்பட்ட நேரத்தில், ஸ்டீபன் ஹாக்கிங் 2 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தார்கள். அந்த கணிப்பை பொய்யாக்கி 55 ஆண்டுகள் வாழ்ந்துகாட்டிய நம்பிக்கை நாயகன்.
ஸ்டீபன் ஹாக்கிங் என்றதுமே வீல் சேரில் தலையை சாய்த்துக்கொண்டு பரிதாபமாக காட்சியளிக்கும் ஒரு நபரே நம் கண்ணுக்குத் தெரிவார். ஆனால், அவர் சாதாரண மனிதர் அல்ல. கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்த நிலையிலும். பிடிவாதமாக வாழ்க்கையைக் காதல் செய்தவர்.
ஸ்டீபன் ஹாக்கிங் பள்ளியில், கல்லூரியுல் ஒரு சராசரி மாணவன்தான். ஆனால் அறிவியல் ஆர்வம் அதிகம். அந்தச் சமயம் ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், ‘ஈக்வலைஸர்’ என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு… இன்று கன்னத் தசைகளின் அசைவுகள்மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசினார்.
டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய “எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” (A Brief Histroy of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) என புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
கல்லூரி தோழி, ஜேன் வைல்டை காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர் பின்னர் தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர் எலைனுடன் காதல்கொண்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டதெல்லாம் வேற லெவல் ஆச்சர்யங்கள். ’வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது…’ என்று வாழ்ந்து காட்டியவர்.
ஹாக்கிங்கிடம், கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘’கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. அப்படி இருந்தாலும் அதுவும் இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். அந்த கடவுள் எந்த துகள்களால் ஆனது அதன் மூலக்கூறுகள் என்ன என்று ஆராய்வேன். எல்லாம் முன்னரே எழுதப்பட்டுவிட்டது. நம்மால் ஒன்றையும் மாற்ற முடியாது என்பவர்கள் கூட சாலையை கடக்க இருபக்கமும் கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு மிகச்சிறிய நட்சத்திர குடும்பத்தின் ஒரு மிக சாதாரணமான ஒரு கிரகத்தில் வாழும் சற்றே மேம்பட்ட குரங்கினம் தான் நாம்.
கடவுளின் மேல் எல்லாம் பயம் இல்லை. அவரை நம்புகிறவர்கள் மீதுதான் பயமே. கடவுள் இந்த உலகத்தை படைப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். இந்ந கேள்விகளை கேட்பவர்களுக்காக ஒரு நரகத்தை படைத்துக் கொண்டிருந்தார். கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். இருட்டை கண்டு அஞ்சும் மக்களுக்காக சொல்லப்பட்ட கட்டுக்கதைகள்’’ என்றார்.
தங்களுக்கு ஒரு பிரச்னை, உடலில் நோய் ஏற்பட்டது, ‘கடவுள் கொடுத்திருக்கும் தண்டனை’ என்று புலம்புபவர்களுக்கும் ஹாக்கிங்கிற்கும் எத்தனை வித்தியாசம்…