ராவணன் சொல் கேளீர்
இதிகாசங்கள் உண்மையா அல்லது கற்பனயா என்ற சர்ச்சைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால் என்ன படித்தாலும், அதிலிருக்கும் நல்ல சாரம்சங்களை எடுத்துக்கொள்வது வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தரும்.
அப்படித்தான் ராமாயணத்தில் ஒரு அற்புதமான தருணம். ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடக்கிறான் ராவணன். எந்த நேரமும் அவனுடைய உயிர் பிரிந்துவிடும் என்ற நிலை.
அப்போது லட்சுமணனை அழைத்த ராமன், ‘தம்பி… ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன். ஒரு நாட்டை சிறப்பாக ஆட்சி புரிந்தவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் அறிவுரைகளைப் பெற்று வா’ என்று கூறி அனுப்பினார்.
லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் போய் நின்றான். ‘இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும். எனவே எனக்கு உபதேசிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
மரண தருவாயில் தன்னை மதித்து வந்திருக்கும் லட்சுமணனிடம் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினான் ராவணன். ‘’லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?
நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.
சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே சீதையை அபகரிக்கும் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு, எல்லாமே நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது, ‘ நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும். தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு’ என்பதுதான்.
அதேபோல், தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே. யாரையும் குறைவாக எடை போடாதே. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டுவிட்டேன். அப்போதே அவன் வலிமையை அறிந்திருக்க வேண்டும்.
உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு. பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை” என்று கூறிவிட்டு இந்த உலகைவிட்டு விடை பெற்றான்.
எந்த வேலையை உடனே செய்ய வேண்டும், எதை தள்ளிப் போட வேண்டும் என்று தெரியாமல்தானே, இந்த உலகில் பலரும் தப்புத்தப்பாக தப்பு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ராவணன் சொல் கேட்கலாமே…