பாலியல் பாடம்
‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத பாலியல் உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் முடிவதில்லை. இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யவேண்டும்?’’ ஞானகுருவிடம் கேள்வி எழுப்பினார் மகேந்திரன்.
‘’காமம் என்பது இயல்பான ஒன்று. காட்டு மிருகங்கள், பறவைகள் காம உணர்வு தோன்றுகையில் அதை எப்படியேனும் தணிக்கவே அலையும். அதற்காக கடும் முயற்சி எடுத்துக்கொள்ளும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமே அந்த காமம் என்பதால் அதனை தணிக்கும் வரை அந்த நிலை கட்டுப்படவே கட்டுப்படாது. அது உயிரியல் விதி.
அதே வகையில், மனிதர்களுக்கு வயிற்றுப் பசி போன்று உடல் பசி ஏற்படுவதும் இயல்பான உணர்வு. ஆனால், மிருகங்களைப் போன்று எதிர்பாலினத்தை விரட்டியும், அடக்கியும் இந்த ஆசையைத் தணிக்க முடியாது, கூடாது. அப்படி அடாவடியாக காமத்தை தணிக்க முயல்பவர், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.
குடும்ப உறவுக்குள் இருப்பவர் என்றாலும், ஆசை வரும் நேரத்தில் எல்லாம் உடல் பசியைத் தணித்துவிட முடியாது. ஆண்கள் சட்டென மிக எளிதில் காம வயப்படுவார்கள். சட்டென்று உணர்வுபூர்வமாக மாறுவார்கள். ஆனால், பெண்கள் எல்லா நேரமும் காமத்தை ஏற்பதற்குத் தயாராக இருப்பதில்லை. அவர்களால் திடீரென காமவயப்பட முடியாது.
எனவே, கட்டுக்குள் வராத காம உணர்வில் தவிப்பவர்கள் தனிமையில் இன்பம் காண்பது மட்டுமே பாதுகாப்பான சுலப வழி. இதற்கு விருப்பம் இல்லையென்றால், காம வயப்படும் நேரத்தில் மனதை வேறு ஏதேனும் புதிய விஷயத்தில் திசை திருப்ப வேண்டும். அதாவது தனிமையில் இருந்து வெளியேறி பொது வெளிக்கு வருவது நல்லது. ரோட்டில் செல்பவர்கள், அக்கம்பக்கத்தில் கடுமையாக உழைப்பவர்களைப் பார்த்தாலே மனதில் இருக்கும் ஆசை ஓடிவிடும். அது போன்ற தருணங்களில் தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடம் பேசுவதன் மூலம் மனதை முழுமையாக திசை திருப்பிவிடலாம்.
உடல் பசியை கட்டிலில் மட்டுமே அடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் சிரித்து மகிழ்வாகப் பேசுவது, ஏதேனும் வேலை செய்து உதவுவது, பிறரை சிரிக்க வைத்து மகிழ்வது போன்ற செயல்கள் மூலமாகவும் இதனை தணித்துக்கொள்ள முடியும். பெண்கள் தங்கள் உணர்வை இப்படித் தான் தணித்துக்கொள்கிறார்கள்.
பெரும்பாலான பெண்கள் காமத்தை தங்கள் பாசத்தின் முலம், அன்பின் மூலம் காட்டி திருப்தி அடைந்துகொள்கிறார்கள். நாகரிக உலகத்தில் இந்த கட்டுப்பாடுள்ள காமமே நல்லது. காமத்தின் மீது பழி போட்டு அடுத்தவரை பயனபடுத்துவதும் துன்புறுத்துவதும் முறையல்ல. சட்டத்தின் முன்பு மட்டுமல்ல, மனிதத் தன்மைக்கே எதிரானது’’ என்றார் ஞானகுரு.