வீட்டுக் கடன் தவணை ஆலோசனை
ஒருவருக்கு சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனே முக்கிய வழியாக இருக்கிறது. மாத வாடகை கட்டுவது போன்று, வங்கிக்கு மாதத் தவணை கட்டியே வீட்டை சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.
ஆனால், வங்கிக் கடனை ஒவ்வொரு மாதமும் செலுத்துவது, எல்லோருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை. ஆம், ஆசைப்பட்டு வீட்டை வாங்கிவிட்டு, மாத தவணை கட்ட முடியாமல் கஷ்டப்படும் நபர்கள் நிறையவே உண்டு. இப்படி ஒரு சூழல் வரமால் எப்படி தற்காத்துக்கொள்வது என்று ரியல் எஸ்டேட் ஆலோசகர் அலிஸ்டரிடம் பேசினோம்.
“வங்கிக் கடனில் நாம் முதலில் பார்க்கவேண்டியது, வட்டி விகிதம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களில் நிரந்தர வட்டி, மாறுபடும் வட்டி என இருவகைகள் உண்டு. இதில் மாறுபடும் வட்டி விகிதம்தான் குறைவாக இருக்கும். மற்றொன்று தவணை முறை. ஏனென்றால், நல்லமுறையில் தவணை செலுத்தி வருவோருக்கும் சில சமயங்களில் எதிர்பாராத சறுக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், தவணைத் தொகையை கட்டி முடிப்பதற்கு தாமதமாகும் நிலையும் ஏற்படும்.
வீட்டுக்கடன் வாங்க இருப்பவர்கள் தனிநபர் கடன், நகைக்கடன், கிரடிட் கார்டு, வாகனக் கடன் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. கடன் வழங்குவது பற்றிய முடிவில், ‘கிரெடிட் ஸ்கோர்’ முக்கியப் பங்கு வகிப்பதை நீங்கள் முதலில் அறிய வேண்டும். அதன்படி, நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், கடனுக்கான வட்டி விகிதம் உங்களுக்குச் சாதகமாக அமையலாம். இந்த கிரெடிட் ஸ்கோரை காண்பித்து, வட்டி விகிதத்தில் சலுகை கோரலாம்.
அடுத்து, நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே, வீட்டுக் கடனுக்கு முதலில் விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குமுன், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான விபரங்களைக் கேட்கவேண்டும். இந்தத் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கேற்ப விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே கடன் பெற்றிருந்தாலும், மற்ற வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு, தேவையெனில் கடனை மாற்றிக் கொள்ளவும் முயற்சிக்கலாம். வீட்டுக் கடன் பெறுபவர் குறிப்பிட்ட தொகையை டவுன் பேமென்டாக செலுத்த வேண்டும். பொதுவாக, 15 முதல், 20 சதவிகித தொகையை செலுத்த வங்கிகள் வலியுறுத்துகின்றன. எஞ்சிய தொகை வீட்டுக் கடனாக வழங்கப்படும். வாய்ப்பு இருந்தால், முன்கூட்டியே திட்டமிட்டுச் சேமித்து, அதிக தொகையை இவ்வாறு செலுத்தலாம். இதன்மூலம் நீண்டகால நோக்கில் வட்டி சுமை குறையும் என்பதோடு, கடன் தகுதியும் அதிகமாகும்.
குறிப்பாக, கடன் பெற்று மாதத் தவணை செலுத்தத் தொடங்கிய பின், எப்போதெல்லாம் முடியுமோ அப்போது, கையில் உள்ள தொகையை செலுத்தி அசலைக் குறைக்க வேண்டும். போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்போது, கணிசமான தொகையைச் செலுத்துவது நல்லது. இதன்மூலம், அசல் தொகை குறைந்துகொண்டே வருவதுடன், கடன் தொகையைச் சீக்கிரம் அடைத்து வெளியேறலாம். அப்படி ஒவ்வோர் ஆண்டும் தவணைத் தொகையை அதிகரித்து கட்டி வந்தால் விரைவில் கடனைக் கட்டி முடித்துவிடலாம்.
உங்களுடைய வருமானத்தில் பாதியளவுக்குத் தவணை வருமாறு இ.எம்.ஐ மற்றும் கடன் காலத்தை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. ஏனெனில், குடும்பத்தின் மாதாந்திர அடிப்படைச் செலவுகளுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டுவிடக்கூடாது. குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பளதாரராக இருக்கும்பட்சத்தில் இருவரும் கடனுக்கு விண்ணப்பித்து கடன் சுமையைக் குறைக்க முடியும். அதோடு, விரைவாகவும் கடனைக் கட்டி முடிக்கலாம்.
மாதாந்திர தவணையை தாமதமாகச் செலுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். அதுபோல், காசோலை பணமின்றி திரும்பி வருமளவுக்குக் கவனமின்றிச் செயல்படக்கூடாது. அதற்கேற்றவாறு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். சேமிப்புக் கணக்கில் இருந்து மாதாந்திர தவணைத் தொகையை கழிப்பதற்கு போதிய பணம் இருக்க வேண்டும். இப்படி, பணமில்லாமல் போகும்பட்சத்தில், தவணைத் தொகை கட்டுவதும் கால தாமதமாகும். இதனால், ஒவ்வொரு மாதத்துக்கும் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதுபோல், காசோலை பணமின்றி திரும்பினால் ஒரு லட்ச ரூபாய்க்கு 225 ரூபாயும், அதற்கு மேற்பட்ட (ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்) தொகைக்கு 350 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கில் இருந்து மாத தவணைத் தொகையைக் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு, 225 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத விகிதங்கள் பொதுத்துறை வங்கிகளில் ஒரே மாதிரியாகவும், தனியார் வங்கிகளில் வேறுபட்டும் இருக்கும்.
வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் இந்தத் தொகையை தங்கள் நிர்வாக் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும். எனவே, புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் இதுபோன்ற அபராத விகிதங்கள் குறித்தும் விசாரித்து தெரிந்துகொள்வது அவசியம். அதுபோல், வங்கி விடுமுறை வருகிறது என்றால், அதற்கேற்ப முன்கூட்டியே நிலுவைத் தொகையைக் கட்டிவிடுவது நல்லது” என்றார்.
நல்ல ஆலோசனைதான்.