எப்படிப்பட்ட காதல் ஜெயிக்கும்..?

Image

காதலர் தரும் போதை

இந்த உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சி என்றால், நம்மை ஒருவர் காதல் செய்கிறார் என்ற உணர்வு என்கிறார்கள். காதலுக்காக எதையும் செய்வதற்குத் தயராக இருக்கிறார்கள். அதே நேரம், நிறைய காதல் பூத்த வேகத்திலேயே உதிர்ந்தும் போகிறது. அதாவது நூறு பேர் காதல் செய்கிறார்கள் என்றால் 90 சதவீதம் காதல் தோற்றுப் போகிறது. 10 சதவீத காதல் மட்டுமே திருமணம் வரையிலும் வருகிறது. அப்படி திருமணம் முடித்துக்கொண்ட காதலர்களிலும் சுமார் 10 சதவீதம் பேர் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போய்விடுகிறார்கள்.

இதன் காரணம் என்னவென்றால், காதல் என்றால் என்னவென்றே புரியாமல் காதலிக்கிறார்கள். அதனாலே தோற்றுப் போகிறார்கள். நிறைய பேர் முதல் பார்வையில் வரும் காதலை எப்படியாவது திருமணத்தில் கொண்டுபோய் முடிப்பதற்கு சிரமம் எடுத்துக்கொள்கிறார்கள்.

அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்’என்பது  இதிகாசக் காதலுக்கு மட்டுமே சரியாக இருக்கும். முதல் பார்வையில் மின்சாரம் பாய்வது, மனசுக்குள் மழை அடிப்பது போன்ற அறிகுறிகள் உண்மையான காதல்  அல்ல. அதன் பெயர் சிலிர்ப்பு.

ஏனென்றால் இது போன்ற தருணங்களில், ஒருவருக்கு மட்டும்தான் முதல் பார்வையில் மின்சாரம் பாயும், மனசுக்குள் பூ மலரும். இன்னொரு நபரிடம் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டிருக்காது. குறிப்பிட்ட நபரை அவர் பார்க்காமலே போயிருக்கலாம். ஜொள்ளு விடுவதைப் பார்த்து எரிச்சல் அடைந்திருக்கலாம். கொஞ்சமும் மதிக்காமல் போயிருக்கலாம். எனவே, இரண்டு பேருக்கும் முதல் பார்வையில் மின்சாரம் பாய்வது அரிதிலும் அரிது. எனவே, முதல் பார்வைக் காதலை நம்பாதீர்கள்.

முதல் பார்வையில் கண்ணுக்குத் தெரிவது அழகு, உடை, நடை , சிரிப்பு போன்ற புறத் தோற்றம் மட்டும்தான்.  திருமணம், குடும்ப விழா போன்ற தருணங்களில் இது போன்ற முதல் பார்வைக் காதல் நிறைய வரும். ஏனென்றால் வயசுப் பெண்கள் அம்சமாக அலங்காரம் செய்துகொண்டு சந்தோஷமாக பட்டாம் பூச்சியைப் போன்று சுற்றித் திரிவார்கள். அந்த சூழலில் பெண்ணைப் பார்க்கும்  எந்த இளைஞனுக்கும் மனம் படபடவென அடிக்கத்தான் செய்யும்.  அடுத்தடுத்த நாட்களில் சாதாரண உடையில் பார்க்கும்போது அப்படிப்பட்ட சிலிர்ப்பு, ஈர்ப்பு இருக்காது.  

எனவே இது காதல் அல்ல. காதலைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இன்று காதலில் இருக்கும் நபர்களிடம் ஏன் காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் நிறைய பேர் சொல்லும் பதில் என்ன தெரியுமா..? அந்தப் பெண்ணுடன் அல்லது அந்த இளைஞனுடன் திருமணம் நடந்தால்  என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று உண்மை பேசுகிறார்கள்.

அதேநேரம், இது அப்பட்டமான சுயநலம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

ஆம், காதல் என்பது விட்டுக்கொடுத்தல். காதல் என்பது, தன்னை விட தான் விரும்புபவர் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவது. தன்னை திருமணம் முடிக்கவில்லை என்றால் தன்னை விரும்புபவர் மிகவும் நன்றாக இருப்பார் என்ற நம்பிக்கை வந்தால், அவருக்காக தன்னுடைய விருப்பத்தை தியாகம் செய்வதே உண்மையான காதல்.

இந்த உண்மை தெரியாமல், தன்னுடைய சந்தோஷத்துக்காக, தன்னுடைய நன்மைக்காக காதல் செய்பவர்கள் தோற்றுத்தான் போவார்கள். தன்னை விட தன்னை நேசிப்பவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவரின் காதலே வெற்றி பெறும். இந்த சிந்தனை உள்ளவரின் காதல் ஒரு வேளை தோற்றுப் போனாலும் அது என்றென்றும் மனதில் அழகான ஓவியமாக நிலைத்திருக்கும், மகிழ்ச்சி தரும். அதுவே காதல் தரும் போதை.

Leave a Comment