ஞானகுரு பதில்கள்
கேள்வி : மனதின் ஏக்கங்கள்தானே கனவாக வருகிறது..?
- எஸ்.பவானி, யமுனை தெரு.
ஞானகுரு :
மீதமான உணவு, கிழிக்கப்பட்ட பேப்பர், காற்றில் கொண்டுவரப்படும் இலைகள், பூக்கள் என்று வீட்டுக் குப்பைத் தொட்டியில் பலவகையில் குப்பை சேருவதைப் போலவே, மனதுக்குள் எத்தனையோ எண்ணங்கள், ஆசைகள், கோபங்கள், காட்சிகள், சம்பவங்கள் சேர்ந்துகொண்டே போகின்றன. அந்த குப்பைகள் நிரம்பி வெளியேறும் காட்சிகள்தான் கனவு எனவே, கனவை கிளறாதீர்கள், கெட்ட வாடையே வரும்.
கேள்வி : இந்தியாவின் பலம், பலவீனம் என்ன..?
- கே.தனலட்சுமி கதிரேசன், பாண்டியன் நகர்.
ஞானகுரு :
இந்தியாவில்தான் ஏராளமான மதங்களை பின்பற்றும் மனிதர்கள் இருக்கிறார்கள். உண்மையில் ஆளுக்கு ஒரு மதம் இருக்கவேண்டும் என்பதுதான் சரியான சிந்தனை. அந்த வகையில் இதுதான் இந்தியாவின் பலம். அதையே மனிதர்கள் பலவீனமாகவும் மாற்றிவிடுகிறார்கள்.
கேள்வி : மனிதனை சாய்ப்பது மன நோயா… உடல் நோயா..?
- ஜி.நித்யா, கள்ளிக்குடி.
ஞானகுரு :
ஒவ்வொரு காலகட்டத்திலும் பிளேக், காலாரா, பெரியம்மை, கொரோனா போன்ற நோய்கள் உருவாவதும், அது மனித குலத்தின் ஒரு பகுதியை அழித்துச்செல்வதும் வழக்கமான ஒன்றுதான். இந்த நோய்களில் இருந்தும் தப்பமுடியும் என்று மனதை வலிமையாக வைத்திருப்பவன், ஒருவேளை அப்போதைக்கு மனதால் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், அது நிரந்தரமல்ல. இறுதியில் ஏதேனும் ஒரு நோய் உயிரைக் குடித்துவிடும்.