சிம்பொனிக்கும் சினிமா பாட்டுக்கும் என்ன வித்தியாசம்?

82 வயது இசைராஜா

“82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான்..” என்று லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து திரும்பிய ‘இசைஞானி’ இளையராஜா உற்சாகமாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரது உற்சாகமும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையாகவே இருக்கிறது.

அதேநேரம், சிம்பொனி என்பதற்கும் சினிமா பாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக சிம்பொனி என்றால் என்ன என்பது குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜெய்குமார். இது முழுக்க முழுக்க அவரது பதிவு.

சிம்பொனி என்றால் ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது.. அதில் முக்கியமானவை: 1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).

16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது. அது தான் சிம்பொனி.. இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809).. மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர். மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.

ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது?.. ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்?, எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்?, எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?.. ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும்.. 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்.. இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.

ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள?.. இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.. சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை?.. அது எப்படி இருக்க வேண்டும்?.. இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..

1. The Fast Movement: காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.

2. The Slow Movement: இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.

3. The Dance Number: திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

4. An Impressive Fast Movement: இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார். இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்..’’ என்று கூறியிருக்கிறார்.

அதுசரி, இளையராஜாவின் சிம்பொனிக்கு வெளிநாட்டில் எப்படி வரவேற்பு இருக்கிறது..? யாராவது விமர்சனம் செய்திருக்கிறார்களா? இது குறித்து இதுவரை எந்த செய்திகளும் வரவில்லை. இளையராஜா சிம்பொனி அமைப்பதை வெளிநாட்டில் பெரிதாக கொண்டுபோகவில்லை என்பதால் அது ஒரு பெரிய விஷயமாக அங்கு பேசப்படவில்லை என்கிறார்கள்.

அது பரவாயில்லை, இனி சிம்பொனி பேச வைக்கும்.

Leave a Comment